எலுமிச்சைப் பழத்தினைத் தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களைப் போக்க எலுமிச்சைப் பழம் வைத்து வழிபாடு செய்வார்கள். எலுமிச்சை தீய ஆவிகளை நீக்கப் பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களில் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கிப் பாதுகாப்பை அளிக்க, மிளகாயுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், இரண்டு எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.
எலுமிச்சை விளக்கு ஏற்றும் முறை
துர்க்கையின் சன்னதியில், ஒரு எலுமிச்சைப் பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னர் ஐந்து இழைகள் கொண்ட நூல் திரி போட்டு, அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஒன்றாகத்தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியபடி இருக்க வேண்டும்.
விளக்கு ஏற்றிய பின்னரே மூன்று சுற்றுகள், வலம் வந்து வணங்கிட வேண்டும். அதன் பின்னர் இருபது நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்க வேண்டும். அடுத்த நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவக்கிரகம் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.