தீப வழிபாடு என்பது இந்து சமயக் கலாச்சாரத்துடன் தொடர்புடையதாகும். வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றி வைத்து, அந்தத் தீபத்தை வணங்கி வந்தால், தீய சக்திகள் அனைத்தும் விலகி, வீட்டில் வளங்கள் அனைத்தும் பெருகும். வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால், உடல் நலம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்ல செயல்பாடு போன்றவையும் பெருகும்.
தீபத்தின் வகைகள்
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தில் பலவகைகள் உண்டு. அவை:
* சித்ர தீபம் - வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம்
* மாலா தீபம் - அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம்
* ஆகாச தீபம் - வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.
* ஜல தீபம் - தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடும் தீபம்
* படகு தீபம் - கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடும் தீபம்.
* சர்வ தீபம் - வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படும் தீபம்.
* மோட்ச தீபம் - முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.
* சர்வாலய தீபம் - கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படும் தீபம்.
* அகண்ட தீபம் - மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படும் தீபம்.
* லட்ச தீபம் - ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிக்கும் தீபம்.
* மாவிளக்கு தீபம் - அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றும் தீபம்.
தீபம் ஏற்ற வேண்டிய இடங்கள் மற்றும் விளக்குகள் எண்ணிக்கை
* கோலமிடப்பட்ட வாசல் - ஐந்து விளக்குகள்
* தின்ணைகள் - நான்கு விளக்குகள்
* மாடக்குழிகள் - இரண்டு விளக்குகள்
* நிலைப்படி - இரண்டு விளக்குகள்
* நடைகள் - இரண்டு விளக்குகள்
* முற்றம் - நான்கு விளக்குகள்
* பூஜையறை - இரண்டு கார்த்திகை விளக்குகள்
என்று விளக்குகளை ஏற்றி வணங்கினால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
இதே போன்று;
சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகள் - எமனை வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.