கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் வீட்டுக்கு வீடு பூஜிக்கப்பட்டு வந்த ஆயுர்தேவியை நவராத்திரியில் வணங்குவது மிகவும் விசேஷம். ஒன்பது கரங்களைத் தாங்கிய பராசக்தியானவள் சித்தர்களையும், மகரிஷிகளையும் தம் எண் கரங்களிலேந்தி, ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகக் கொண்டு அருள் பாலிக்கின்றாள். இந்த தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்துத் துன்பங் களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு முழுமையான வழிபாடாகும்.
ஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும் நவகிரகத் தத்துவங்களை விளக்குகின்றன. அன்ன வாகனத்தைக் கொண்டவள் ஆயுர்தேவி.
அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன.
மனிதனுடைய தேகத்திலும் நவகிரகங்கள் ஆட்சி கொண்டுள்ளன. ஆத்மா இதயக்கமலத்தில் சர்வேஸ்வரனாக வீற்றிருக்கிறது. இதனால் உடலைக் கோவில் என்கிறோம். சித்திர குப்தர் இந்த தேவியின் ஆக்ஞைப்படி, கர்மவினைகளையும், ஆயுளையும் நிர்ணயிப்பவர். இவர் இறைவனின் அற்புதப் படைப்பு. ஒவ்வொரு மனிதனும் தினமும் இரவில் உறங்கும்முன் அன்றைய செயல்களை சித்திரகுப்தரிடம் சமர்ப்பித்து தவறுகளுக்கு வருந்தி, நற்செயலுக்கு நன்றி கூறி, பிறகே உறங்கவேண்டும்.
ஸ்ரீசித்திரகுப்தர் வெறும் கர்மக் கணக்கு எழுதுபவர் என நினைப்பது கூடாது. மனிதனின் ஆத்மவிசாரத்திற்கு வித்திடுபவர் இவரே. ஸ்ரீஆயுர்தேவியின் திருவடிக்கருகே இவர் அமர்ந்திருக்கிறார்- தலைப்பாகையுடன் கையில் ஏடு, எழுத்தாணியோடு.
ஆயுர்தேவி தனது வலது முதல் கரத்தில் கயாசுர மகரிஷியைத் தாங்கியிருக்கிறாள். இந்த தேவியை உபாசனை செய்து உன்னத நிலையை அடைந்தவர் ஸ்ரீகயாசுர மகரிஷி.
நவராத்திரியில் வரும் பிரதமை திதியில், இரண்டு வயது நிறைந்த பெண் குழந்தையை அலங்கரித்து, ஆபரணம் இட்டு, ஸ்ரீமாதேவியாக வரித்து வணங்க வேண்டும். இப்படிச் செய்வதால் தேவியின் அருட்தன்மை பன்மடங்காகப் பெருகும். ஸ்ரீமாதேவியை மனதால் தியானித்து பிரதமை திதியன்று ஏதேனும் ஒரு கோவிலில் மாக்கோலமிட்டு, மல்லிகைப் பூவை பெண்களுக்கு அளித்து வழிபட்டால் வேண்டும் வரம் பெறலாம்.
இமயமலைப் பகுதியிலும், பனிமலைக் குகையிலுள்ள ஸ்ரீதாராதேவி ஆலயத்திலும் ஸ்ரீஆயுர்தேவிக்கு சந்நிதி அமைந்துள்ளது என்றும்; குரு அருள் பெற்றவர்களால் மட்டுமே காண இயலும் என்றும் உபதேசித்திருக்கிறார் அகத்திய மகரிஷி.
ஸ்ரீஆயுர்தேவியை சாதாரணமாகவும், கலசம் வைத்தும் வழிபடலாம். நவராத்திரியில் கலசப் பூஜை மிகவும் விசேஷமானதாகும். வெள்ளிக் கலசம், வெண்கலக் கலசம், செப்புக் கலசம், மா அல்லது பலா மரத்திலான மரக் கலசம் ஆகியவையேப் பூஜைக்கு உகந்தவையாகும். கலசத்தை தூய்மைப்படுத்தி மஞ்சள், சந்தனம், குங்குமமிட்ட முழுத்தேங்காயை மேலே வைத்து, மாவிலை, பூ சேர்த்து, பூர்ணகும்பக் கலசமாய் அமைக்க வேண்டும்.
சுத்தமான நீர் அல்லது கங்கா நீர், புனித நதி நீரை, மூன்று முறை கொதி வந்ததும் ஆறவைத்து கலசத்தில் ஊற்றவும். வெட்டிவேர், துளசி இவற்றுடன் சிறிதளவு (பொடி செய்த) கடுக்காய், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை கலச நீரில் சேர்க்கவும். நுனி வாழை இலையை கிழக்கு நோக்கி வைத்து பச்சரிசி பரப்பி, அதில் வலது மோதிர விரலால் "உ' "ஓம்' என எழுதி பின் அரிசிமேல் கலசத்தை வைக்க வேண்டும்.
கலசத்திற்கு பட்டு அல்லாத மஞ்சள் வஸ்திரம் சாற்றலாம் (நார்ப்பட்டு). நைவேத்திய மாக பொன்நிற (மஞ்சள்) பதார்த்தங்கள், சர்க்கரைப் பொங்கல், குங்குமப்பூ சேர்த்த பால் கலந்த கேசரி, மஞ்சள் நிற வாழைப்பழங்கள், மஞ்சள் பிள்ளையார் வைத்து விநாயக பூஜையுடன் தேவி பூஜையைத் தொடங்குகலாம்.
ஆயுர்தேவியை நினைத்து தியானிக்க
ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜயகௌரீ ஆயுர்தேவி
நமோ நமஸ்தே சிவகாம ஸுந்தரி
நமோ நமஸ்தே அருணாசலேச்வரி
நமோ மஹாகௌரீ நமோ நமஸ்தே.
ஆயுர்தேவியின் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
சுபாயை தேவ சேனாயை
ஆயுர்தேவ்யை ஸ்வாஹா.
ஆயுர்தேவி காயத்ரி
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பராசக்த்யை ச தீமஹி
தந்நோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத்.
ஆயுர்தேவியின் படம் கிடைத்தால் வைத்துப் பூஜிக்கவும். அல்லது தேவியை மனதில் நினைத்து மேற்கண்டவற்றைத் துதிக்கவும். அனைவரும் வழிபடலாம். அவரவர்களுக்குத் தெரிந்த சுலோகம் அல்லது பாடல் சொல்லியும் வழிபடலாம். இயன்றவர் அன்னதானம் செய்யலாம். அன்னதானத்தால் பலன் பன் மடங்காகிறது. ஸ்ரீஆயுர்தேவியை எம்முறையில் பூஜித்தாலும் உண்மையான மனதுடன் வழிபட்டால் ஸ்ரீ ஆயுர்தேவி மகிழ்ச்சியுடன் அருள் புரிகின்றாள்.