அரங்கனுக்குக் கிளியைக் கொண்டு தூது அனுப்பினாள் ஆண்டாள்.
தூது சென்று வந்தக் கிளியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று ஆண்டாள் கேட்க, கிளி, “உங்கள் கையில் நான் என்றும் இருக்க, அருள் புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.
அதன்படி, ஆண்டாள் கையில் கிளி எப்பொழுதும் இருக்கின்றது என்பது தொன்ம நம்பிக்கை.
அரங்கனிடம் காதல் தூது சென்றதால், இந்தக் கிளிக்கு ‘கல்யாணக் கிளி’ என்று பெயர் வந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக இந்தக் கிளியைத் தினமும் செய்கிறார்கள்.
இந்தக் கிளியைச் செய்வதற்காகவே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள் .
சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் இலைகளைக் கொண்டு, இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள். ஏழு இலை என்று சொல்லப்படுகின்ற மரவள்ளி இலை கிளியின் உடலுக்கும், நந்தியாவட்டை இலைகளைக் கிளியின் இறக்கைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். கிளி உருவாகப் பயன்படுத்தப்படுகிற சிறிய மூங்கில் குச்சிகளை அந்த இலைகள் மறைத்து விடுகின்றன. கிளி அமர்ந்திருப்பது போலக் காண்பிப்பதற்கு, நந்தியாவட்டைப் பூக்களேக் கிளியின் கால்களாக அமைக்கப்படுகின்றன. இறக்கைகளுக்கு முதலில் பனை ஓலையும், அதன் மேல் இலைகளும் போர்த்தப்படுகின்றன. கிளியின் வால் பகுதிக்கு, வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுக்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. கிளியின் கண்கள் பளிச்சிட காக்காய் பொன் என்கிற பொருளை உபயோகிக்கின்றனர். சிவப்பு நிற மாதுளம் பூ, கிளியின் மூக்கிற்குப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஒரு கிளியைத் தயாரிக்க 4 மணி நேரம் ஆகிறது.
தினமும், குறிப்பிட்ட குடும்பத்தினர் சிறப்பாகத் தயாரிக்கும் இக்கிளியை மாலை நேரப் பூஜையின் போது ஆண்டாளுக்குச் சாற்றுகிறார்கள். திருமலையிலும், திருவரங்கத்திலும் நடக்கும் பிரம்மோத்சவம் காலங்களில், ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட இக்கிளியும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பெருமாளுக்குச் சாற்றப்பட்டு வருகிறது.