பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுத்து, பக்தர்களின் தலையில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு. இந்த வழக்கம் ஏற்பட்டது எப்படி?
ஒரு குழந்தையைத் தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார். இவர், நான்கு வேதங்களைத் தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் புகழப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் கலி பிறந்த 43 வது நாளில், காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தவர் நம்மாழ்வார்.
உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ, இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.
ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும் பொழுது, அதன் உச்சந்தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும். இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும். மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது தொன்ம நம்பிக்கை. மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.
சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார் தம் தாயின் கருப்பையில் இருக்கும் போதே தம்மைச் சேர வந்த அந்த
சடம் என்னும் இக்காற்றை கோபமாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார்.
பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு.
அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது.
சடாரியைத் தலையில் தாங்கினால், நம் மனம் பந்த பாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.
சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.
ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.
எனவேதான், சடாரி தலையில் வைக்கும் பொழுது, பக்தர்களுக்குப் பேரானந்தம் ஏற்படுகிறது.
சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி, வாய் பொத்தி, குனிந்து பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.