திருவண்ணாமலை கிரிவலம் செய்பவர்கள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய லிங்கங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாமா?
இந்திரலிங்கம்
கிரிவலப் பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்குத் திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்குத் திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும்.
அக்னிலிங்கம்
செங்கம் ரோட்டில் தாமரைக்குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்குத் திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.
எமலிங்கம்
கிரிவலப் பாதையில் மூன்றாவது லிங்கம் எமலிங்கம். ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில், கோவிலின் பக்கத்திலேயேச் சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்குத் திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செய்தால் பொருளாதாரக் கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
நிருதி லிங்கம்
மலை சுற்றும் பாதையில் உள்ள நான்காவது லிங்கமாகும். நிருதி லிங்கத்தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையைப் பார்த்தால் மலையில் சுயம்புவாக அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
வருண லிங்கம்
ராஜகோபுரத்தில் இருந்து சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருணத் தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்குத் திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
வாயு லிங்கம்
இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
குபேரலிங்கம்
கிரிவலப் பாதையில் ஏழாவது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.
ஈசான்ய லிங்கம்
கிரிவலப் பாதையில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.
கிரிவலம் செல்வதால் கிடைக்கும் பலன்கள்
* திங்கட்கிழமை கிரி வலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.
* செவ்வாய்க்கிழமை கிரி வலம் வந்தால் கடன், வறுமை நீங்கும்.
* புதன் கிழமை கிரி வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
* வியாழக்கிழமை கிரி வலம் வந்தால் ஞானம் கிடைக்கும்.
* வெள்ளிக்கிழமை கிரி வலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும்.
* சனிக்கிழமை கிரி வலம் வந்தால் பிறவிப்பிணி அகலும்.
* ஞாயிற்றுக்கிழமை கிரி வலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.