சூரியன் ஒரு ராசியைக் கடந்து, அடுத்த ராசிக்குள் நுழையும் வேளையே சங்கராந்தி. மாதப்பிறப்பும் இதுதான். அந்த வழியில் வருடத்திற்கு 12 சங்கராந்திகள் உண்டு.
1. தான்ய சங்கராந்தி (சித்திரை)
சூரியன் மேஷ ராசியில் நுழையும் வேளையே, தான்ய சங்கராந்தி. சூரியனைப் பூஜித்து, தானிய தானம் செய்வதன் மூலம் ஆயிரம் அக்னி ஹோத்திரம் செய்த பலனை அடைவார்கள்.
2. தாம்பூல சங்கராந்தி (வைகாசி)
சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளையே, தாம்பூல சங்கராந்தி. இந்த நாளில் சூரிய பூஜை செய்து வெற்றிலை பாக்கு திரவியங்கள் வைத்துத் தம்பதிகளை பூஜித்து அதை அளித்தல் மகா புண்ணியம்.
3. மனோதர சங்கராந்தி (ஆனி)
சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை, மனோதர சங்கராந்தி இந்த நாளில் சூரிய பூஜை செய்து வெல்லம் வைத்துப் பூஜித்துத் தானம் அளித்தால் ஆசைகள் நிறைவேறும்.
4. அசோக சங்கராந்தி (ஆடி)
சூரியன் கடக ராசியில் நுழையும் வேளையே, அசோக சங்கராந்தி எனக் குறிப்பிடுவதுண்டு.இது விஸ்வத் புண்ய காலமாகும்.
5. ரூப சங்கராந்தி (ஆவணி)
சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளையே ரூப சங்கராந்தி. இந்த வேளையில் சூரிய பூஜை செய்து பொன் பாத்திரத்தில் நெய் வார்த்து வேதியர்களுக்கு தானம் அளித்தால்,நோய்கள் அண்டாது.
6. தேஜ சங்கராந்தி (புரட்டாசி)
சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளையே, தேஜ சங்கராந்தி. செந்நெல் அரிசி கொண்டு, அதன் மேல் கலசம் வைத்து மோதகம் முதலானவை நிவேதித்து வேதியர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்.
7. ஆயுள் சங்கராந்தி (ஐப்பசி)
சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளையே, ஆயுள் சங்கராந்தி. பசும்பால், வெண்ணெய் இவற்றை கும்பத்தில் நிரப்பி பூஜித்துத் தானம் கொடுப்பதால் நீண்ட ஆயுள் தங்கும்.
8. சவுபாக்ய சங்கராந்தி (கார்த்திகை)
சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளையே, சவுபாக்ய சங்கராந்தி. சூரிய பூஜை செய்து வஸ்திரம் சார்த்தி வேதியர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். இதில் உப்பு தானம் (லவண பர்வதானம்) செய்தால் அனைத்து வளங்களும் பெறலாம்.
9. தனுஷ் சங்கராந்தி (மார்கழி)
சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் வேளையே, தனுஷ் சங்கராந்தி. இந்த வேளையில் தீர்த்தத்தை ஒரு கலசத்தில் நிரப்பிப் பூஜித்து அன்னதானம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
10. மகர சங்கராந்தி (தை)
சூரியன் மகர ராசியில் நுழையும் வேளையே, மகர சங்கராந்தி. இது தேவர்களுக்கு விடியல் காலம் தட்சிணாயன ஆறு மாத காலத்தில் கொடிய உருவம் கொண்டு, மனிதர்களையும் புலிகள் உருவம் கொண்டு பசுக்களையும் வருத்திய காரணத்தால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஈஸ்வரன் தை முதல் தேதியில் இத்தகைய துன்பங்களை நீக்கினார். பன்னிரண்டு சங்கராந்திகளில் மகர சங்கராந்தி மிகவும் புண்ணியம் வாய்ந்தது. சூரிய பூஜை மிகவும் விசேஷமானது.
11. லவண சங்கராந்தி (மாசி)
சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளையே, லவண சங்கராந்தி. இந்த நல்ல நாளில் சூரிய பூஜை செய்வதன் மூலம் மோட்சம் அடையலாம்.
12. போக சங்கராந்தி (பங்குனி)
சூரியன் மீன ராசியில் நுழையும் வேளையே, போக சங்கராந்தி. பங்குனி மாத ஆரம்பம் மற்றும் முடிவு நாட்களில் சூரியபூஜை செய்து தனதான்யம், பசு முதலானவற்றை தானம் செய்வதன் மூலம் சகல நன்மைகளும் உண்டாகும்.