நவதுர்க்கை வழிபாடு
பா. காருண்யா
நவதுர்க்கை என்பது துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. 'நவ' என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. வட இந்தியாவில் நவராத்திரி தினங்களில் நவதுர்க்கைகளில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும் வழிபடுவது வழக்கமாக உள்ளது.
நவ துர்க்கைகள்
1. சைலபுத்ரி
2. பிரம்மசாரிணி
3. சந்திர காண்டா
4. கூஷ்மாண்டா
5. ஸ்கந்த மாதா
6. காத்யாயனி
7. காளராத்திரி
8. மகாகௌரி
9. சித்திதாத்ரி
1. சைலபுத்ரி
துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது 'மலைமகள்' என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. இவர் தனது முன் அவதாரத்தில் தட்சனின் மகளாகப் பிறந்ததால் 'தாட்சாயினி' என்றும் கூறுவர். இவர்தான் சிவனைத் திருமணம் செய்த பார்வதி தேவி ஆவார். ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.
2. பிரம்மசாரிணி
நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கையாக பிரம்மசாரிணி தேவி இருக்கிறார். 'பிரம்ம' என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாகக் காட்சி தரும் இந்தப் பிரம்மசாரிணியின் வலக்கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. இந்தத் துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. சிவபெருமானைத் திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாகக் கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவபெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார் என்பது புராணக்கதை. அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச்சாரிணி பொறுமையைத் தர வல்லவள். சோம்பலை நீக்கிச் சுறுசுறுப்பைத் தர வல்லவர்.
பிரம்மசாரிணி மந்திரம்
"ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம் தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன"
3. சந்திரகாண்டா
நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திரப் பிறையை அணிந்தவள். 'சந்திர' என்றால் நிலவு. 'காண்டா' என்றால் மணி என்று பொருள். சந்திரமணி அணிந்த சந்திர காண்டா, பத்து கைகளைக் கொண்டு காட்சி தருகின்றார். இவர் சிங்க வாகனத்துடன் அருளுகின்றார். சந்திரகாண்டா போருக்குத் தயாரான கோலத்தில் காட்சி தருகிறார்.
சந்திரகாண்டா தியான மந்திரம்
"ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபஸ்த கரியுதா, பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டெதி விஸ்ருதா"
4. கூஷ்மாண்டா
நவராத்திரி விழாவின் நான்காம் நாளான சதுர்த்தி தினத்தன்று 'கூஷ்மாண்டா' வடிவத் துர்க்கையை வணங்குவது வழக்கம். கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது. கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும். இவர் சூரியமண்டலத்தை இயக்குவதாகக் கூறப்படுகின்றது. இவரை வணங்குவோர் உடல் , மன வலிமை பெறுவர்.
கூஷ்மாண்டா தியான மந்திரம்
"சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே"
5. ஸ்கந்த மாதா
ஸ்கந்த மாதா நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளில் வணங்கப்படுகின்றாள். ஸ்கந்த என்றால் முருகனைக் குறிக்கும். மாதா என்றால் அன்னை அதாவது முருகனின் தாய் ஆவார். இவர் தேவர்கள், மனிதர்களுக்குப் பகைவர்களாக விளங்கிய சூரபத்மனை (தாரகாசுரனை) வதம் செய்தவள். தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகனின் தாயாக மிகவும் மதிக்கப்படுபவள் ஆவார். நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்றும், மற்றொரு கரம் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார். இவரை வணங்குவோரை கைவிட மாட்டாள். மோட்சத்திற்கு இட்டுச் செல்வார் என நம்பப்படுகின்றார். மற்ற தேவிகளுக்கு இல்லாத சிறப்புகள் இவருக்கு உண்டு. இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசியும் நமக்குக் கிடைக்கின்றது.
ஸ்கந்த மாதா மந்திரம்
"சின்ஹாசன் கட நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய சுபதஸ்து சதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி"
6. காத்யாயனி
நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில் மாதா காத்யாயனியை வணங்குவது வழக்கம். முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாகப் பெற்றார். இதனால் இவருக்கு 'காத்யாயனி' என்ற பெயர் வந்தது. இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.
காத்யாயனி தியான மந்திரம்
"சந்திர ஹசூஜ் வல்கார லவர் வாஹன் காத்யாயனி சுப் தத்யா தேவி தவன் தாதினி"
7. காளராத்திரி
நவராத்திரித் திருவிழாவின் ஏழாம் நாளில் 'காளராத்திரி' யை வழிபடுவது வழக்கம். அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம். காள என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு எனப் பொருள்படும். இந்தத் துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது. இவளின் நான்கு கைகளில், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்குக் கழுதை வாகனமாக உள்ளது. இவளின் பார்வை பட்டாலே துன்பமும், பாவமும் தொலைந்திடும். பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்றும் நம்புகின்றனர்.
காளராத்திரி மந்திரம்
"வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா, வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி"
8. மகாகௌரி
மகா கௌரி துர்க்கை அம்மன் நவராத்திரி தினத்தின் எட்டாம் நாளில் வணங்கப்படுகினறார். மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவர் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றார். முற்காலத்தில் மகாகௌரி, ஈசனை மணம் செய்து கொள்ள வேண்டி கடுமையாகத் தவத்தை மேற்கொண்டார். அப்போது அவரின் உடலை மண் சூழ்ந்து கருமையாக்கியது. இவரின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் இவரை மணந்து கொள்வதாகக் கூறினார். ஆனால் அதற்கு முன் கங்கை நீரில் நீராடினார். அப்போது தேவியின் உடல் பால் போன்று வெண்மையாக மாறியதால், இவர் மகாகௌரி என்று அழைக்கப்படுகிறார். நான்கு கரம் கொண்ட மகாகௌரி, ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தாங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்களில் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு வெண்மையான காளை வாகனமாக இருக்கின்றது. இவளின் அருள் கிடைத்தால் நம் வாழ்வு வசந்தமாகும்.
மகாகௌரி தியான மந்திரம்
"ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின் மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா"
9. சித்திதாத்ரி
நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் 'சித்திதாத்ரி' துர்க்கையை வழிபாடு செய்கின்றனர். 'சித்தி' என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றால் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள். மார்க்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு இந்த அன்னை எட்டு விதமான அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, பிரகாமியம், வாசித்வம், ஈசத்வம் எனும் சித்திகளை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி, நான்கு கரங்களில், இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம். சிவபெருமானே இவளை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தேவி புராணம் கூறுகிறது. மோட்சத்தை அருளக்கூடிய சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் மனிதர், தேவர், முனிவர், யட்சர், கிங்கரர் வழிபடுவர்.
சித்திதாத்ரி யோக மந்திரம்
"சித்த, கந்தர்வ், யக்யாதிர்,சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ"
இப்படி ஒன்பது வடிவங்களிலான நவ துர்க்கைகளை வழிபட்டு நற்பலன்களைப் பெற்றிடுவோம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.