கோவில் கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஆலயம் என்பதைப் படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ள வேண்டும். மனிதனின் தலை, கழுத்து, மார்பு, தொப்புள், கால்கள், பாதங்கள் இப்படியாகக் கோயிலின் கர்ப்பக்கிரகம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளன.
கருவறை விமானம் தலை, அர்த்தமண்டபம் கழுத்து, மகாமண்டபம் மார்பு, இங்கு தான் இதயதுடிப்பு இருப்பது போல நடராஜர் நடனமாடும் சந்நிதி அமைக்கப்படும். தொப்புள் கொடிமரம். ராஜகோபுரம் பாதங்கள். இப்படி இறைத்திருமேனியாக இருக்கும் கோயிலில் கருவறையின் மேலே விமானம் உள்ளது. ‘மானம்’ என்றால் ‘அளவு', ‘வி' என்றால் ‘கடந்தது’. அதாவது, அளவு கடந்த தெய்வீக சக்தி கொண்டது விமானம்.
கோபுரம் என்பதை, ‘கோ+புரம்' என்று பிரிக்க வேண்டும். ‘கோ' என்றால் இறைவன். ‘புரம்' என்றால் ‘இருப்பிடம்'. அதாவது, இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால்தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்குக் கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். இதனால்தான் “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று சொல்லும் வழக்கம் வந்தது.