ஒரு நாளைக்கு வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று ஆறு பொழுதுகள் உண்டு. இதை அடிப்படையாகக் கொண்டுதான் ஆலயங்களில் தினமும் ஆறு கால பூஜை நடத்துகிறார்கள். இந்த ஒவ்வொரு பொழுதும் தேவர்களுக்கு ஒரு கால அளவாகவும், மனிதர்களுக்கு வேறு ஒரு கால அளவாகவும் இருக்கும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளைத்தான் குறிக்கும். அந்த வகையில் தேவர்களுக்கு வைகறை நேரம் என்பது நமக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கு காலை பொழுது, நமக்கு மாசி மாதமாகும். தேவர்களுக்கு உச்சி காலம் என்பது, நமக்கு சித்திரை மாதத்தை குறிக்கும். தேவர்களுக்கு மாலை நேரம் என்பது, நமக்கு ஆனி மாதத்தை குறிக்கும். அதுபோல தேவர்களுக்கு இரவு நேரம் என்பது, நமக்கு ஆவணி மாதத்தை குறிக்கும். அர்த்த ஜாமம் என்பது, புரட்டாசி மாதத்தை குறிக்கும். இந்த ஆறு காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும்.
அதைப் பிரதிபலிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு தடவை அபிஷேகம் செய்வார்கள். மாசி சதுர்த்தசி, சித்திரை திரு வோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த ஆறு அபிஷேக நாட்கள் ஆகும். இந்த ஆறு நாட்களில் மார்கழித் திருவாதிரை, ஆனி உத்திரத் திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள். அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது.
திருமஞ்சனம் என்றால் “புனித நீராட்டல்” என்று பொருளாகும். அதாவது ஈசனைப் பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்தப் புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். பெரும்பாலான சிவாலயங்களில் அதிகாலை மூன்று மணியில் இருந்தே அபிஷேகம் தொடங்கி விடுவார்கள். சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தலங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது. இந்தத் தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள்.
ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனித் திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்ற பெயரும் உண்டு. அப்போது பலவகை அபிஷேகங்கள் செய்யப்படும். அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது தொன்ம நம்பிக்கையாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு பதினாறு வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள். நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாகக் கருதப்படுகிறது. எனவே, நடராஜரை வழிபடும் போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்துப் பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன் - சக்தி இருவரது அருளாசியையும் பெற முடியும். அதுபோல, நடராஜரின் வலது பாகம் செல்வத்தைக் குறிக்கும். அந்தப் பாகத்தைப் பார்த்துத் தரிசனம் செய்தால், குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது தொன்ம நம்பிக்கையாகும்.
அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். இந்த நடனத்தைக் காணக் கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தைக் காண தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பதும் ஒரு தொன்ம நம்பிக்கையாகும். ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் வானத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது. பதஞ்சலி மகரிஷி இந்தத் திருவிழாவைத் தொடங்கி வைத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. என்றாலும், மற்ற சிவாலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் சிறப்பாக நடத்தப்படுகிறது.
குறிப்பாக, திருவண்ணாமலை தலத்தில் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்துகிறார்கள். திருமஞ்சனம் தினத்துக்கு முந்தைய தினம், மாலை ஸ்ரீநடராஜ பெருமான் புறப்பாடாகி எழுந்தருள்வார். இரண்டாம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு வரும் அவர் வல்லாள மகாராஜா கோபுரத்தைக் கடந்து ஆயிரம் கால் மண்டபத்துக்கு வந்து சேருவார். ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே ஆயிரம்கால் மண்டபத்துக்கு ஸ்ரீநடராஜ பெருமான் எழுந்தருள்வார். ஒன்று மார்கழி திருவாதிரைத் தினம். மற்றொன்று ஆனித் திருமஞ்சனம் தினம். எனவே ஆனி திருமஞ்சன திருநாளில் ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம் கால் மண்டபத்துக்கு வருவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கடந்ததும் வலது பக்கம் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்வார்கள். அன்றிரவு முழுவதும் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம்கால் மண்டபத்தில் தங்கி இருப்பார். மறுநாள் அதிகாலை அங்கு ஆனி திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பொதுவாக, இறைமூர்த்தங்களுக்கு நடத்தப்படும் சில அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்கக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு நடத்தப்படும் அனைத்து வகை அபிஷேகங்களையும் பக்தர்கள் நேரில் பார்த்துத் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் ஸ்ரீநடராஜ பெருமான் அழகுப்படுத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்படுவார். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். அதன் பிறகு ஸ்ரீநட ராஜ பெருமான், சிவகாம சுந்தரியுடன் நடனம் ஆடியபடி ஆயிரம் கால் மண்டபத்தின் படிகளில் இறங்கி வருவார். அந்தக்காட்சி கைலாயத்தில் சிவபெருமான் நடனம் ஆடிக் கொண்டு வருவது போன்று ஆனந்தமயமாக இருக்கும்.
ஆனித் திருமஞ்சனத்தின் போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பல்வேறு நற்பேறுகளைப் பெறமுடியும். குறிப்பாக,
* ஆனித்திருமஞ்சன அபிஷேகத்தை கண்ணாரக் கண்டு தரிசித்தால் பாவங்கள் நீங்கும்.
* உடல் நலம் கிட்டும்.
* கடன் தொல்லை நீங்கும்.
* நோய்கள் குணமாகும்.
* மனதில் தூய்மை உண்டாகும்.
* சுகமான வாழ்வு கிட்டும்.
* குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
* ஆயுள் வளரும்.
* குழந்தைச் செல்வம் கிட்டும்.
* மோட்சம் கிடைக்கும்.
* செல்வச் செழிப்பு ஏற்படும்.
* எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.