கும்பம் வைக்கும் போது தேங்காயைக் கும்பத்தின் மீது வைப்பது ஏன் என்று தெரியுமா?
மனிதன் உயிர் வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காகக் கலசம் வைத்துப் பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம்.
ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், இலவங்கம், பச்சைக்கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப் போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து பூஜிக்கிறோம். கலசம் வைக்க, பித்தளை அல்லது தாமிரச் சொம்பினைப் பயன்படுத்துகிறோம். காரணம், இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை. இறைவனின் உடல் ஆக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல் சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் காணலாம்.
ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக் கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால் குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்று சொல்கிறோமே அது போல. கலசச் சொம்பு அல்லது குடத்தின் மேலே மாவிலையைச் சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம். மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும், ஆனால் மாவிலை குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே இருக்கும் என்பதால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு பயன்படுத்துகிறோம் மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தர வல்லது.
மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் ஏன்?. தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும் போது ‘சோம சூர்ய அக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள். லோசனம் என்றால் கண்கள் என்று பொருள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய மூன்று கண்களை உடைய தேங்காயைத் தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம். தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிச்சிப்போடு என்றுதானே சொல்கிறோம். தேங்காய்நாரை பிய்த்துப்போடு என்று யாரும் சொல்வதில்லை. குடுமி என்ற வார்த்தை தலையில் உள்ள முடிகளின் இணைப்புதானே.
நம்மையும் அறியாமல் தேங்காயை மனிதனின் தலையாகவேப் பார்ப்பது என்பது நமக்குள் ஊறிவிட்டது என்பதற்கு இதை விட வேறு சாட்சி தேவையில்லை. கலசம் வைக்கச் சொம்பு கிடைக்கவில்லை என்றால் கூட, வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய இயலும். ஏனெனில் இயற்கையாகவேத் தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் உள்ளிருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது.
கலசத்தில் இறைவனை உருவகப்படுத்தும்போது இறைவனின் தலைப்பகுதியாக இருப்பதற்கு தேங்காய்தான் பொருத்தமானது என்பதை நம் முன்னோர்கள் வைத்திருப்பதற்கான காரணமும் இதுவே...