நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
1. வடைமாலை பலன்
சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியேக் கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரியபகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து, சூரியனைப் பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட, இந்திரனுக்கும், அனுமனுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் ராகு பகவான், தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்பு போல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி, ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்யலாம்.
2. நல்லெண்ணை அபிஷேகப் பலன்
இந்து மதத்தின் தர்ம (வைணவ) சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வைத் துளிகளை எடுத்துத் தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தைத் தனக்குப் பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ருகாராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப்பெற்று வாழ்வில் மேன்மை பெறலாம்.
3. பஞ்சாமிர்தம் அபிஷேகப் பலன்
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவை; கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப்பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி, இறைவனுக்குப் பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணிக் காரியங்கள் நிறைவேறப் பழங்களால் அபிஷேகம் செய்யலாம்.
4. சீயக்காய் அபிஷேகப் பலன்
சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோசக்தியை பெறலாம்.
5. பால் அபிஷேகப் பலன்
வேதம் கற்றறிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும், தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழி பெறவும் பால் அபிஷேகம் செய்யலாம்.
6. தயிர் அபிஷேகப் பலன்
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மைப் படைக்கும் பொழுது, நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவேப் படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள். இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்குத் தயிர் அபிஷேகம் செய்யலாம்.
7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேகப் பலன்
பெண்டிர்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களைத் தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்யலாம்.
8. சந்தனம் அபிஷேகப் பலன்
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லாப் பொருளாதாரத்தை அடையலாம்.
9. சுவர்ண அபிஷேகப் பலன்
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற, இறைவனுக்குத் தங்கத் தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களைப் புனித மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு, அந்தத் தீர்த்தத்தைச் சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடையலாம்.