தீபாவளி பற்றிய சில சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
1. ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தியில் அமைவது நரகசதுர்த்தித் திருநாள். இதையேத் தீபாவளித் திருநாள் என்கிறோம்.
2. வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் விழாவாகத் தீபாவளித் திருநாள் இருக்கிறது.
3. வடநாட்டில் தீபாவளித் திருநாளை மூன்று தினங்கள் கொண்டாடுகின்றனர். முதல் நாளை சோட்டா தீபாவளி (சிலு தீபாவளி) என்பர். இரண்டாம் நாளை 'படா தீபாவளி' (பெரிய தீபாவளி) என்பர். மூன்றாவது நாளில் 'கோவர்த்தன பூசை' செய்து, கண்ணபிரானையும் வழிபடுவர். சில பகுதிகளில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுவர். முதல்நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி, மூன்றாம் நாள் தீபம் ஏற்றுவது. நான்காம் நாள் முழுக்கு. ஐந்தாம் நாள் எமனை வழிபடுவது என்று வைத்திருக்கின்றனர்.
4. தீபாவளித் தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் துன்பங்கள் நீங்கும். மிகவும் புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால் அன்று எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப் பயன்கிட்டும் என்கிற தொன்ம நம்பிக்கையும் உண்டு.
5. வடநாட்டில் தீபாவளித் தினத்தன்று செல்வத் திருமகளான லட்சுமிதேவியைப் பூஜித்து, புதுக்கணக்குத் தொடங்குவர்.
6. தீபாவளித் தினத்தன்று வழக்கமாகக் குடும்பத்தில் வழிபடும் தெய்வத்தின் முன்பு கோலமிடுவர். தாம்பூலம், பழம், தேங்காய், மலர்கள், புதிய துணிமணிகள் பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய் சிகைக்காய்ப் பொடி, மஞ்சள் பொடி, இலேகியம், பட்சணங்கள், வெந்நீர் ஆகியவற்றை வைப்பர். பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்வர்.
7. புதிதாக மணமுடித்தவருக்கு அமையும் தீபாவளி தலைத் தீபாவளி. மாப்பிள்ளையையும் மகளையும் கோலமிட்ட மனையில் உட்கார வைத்து குங்குமமிட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு, நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்குதல் வேண்டும். அடுத்து அவர்கள் பெரியவர்களின் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியை வாங்கி உடுத்திக்கொள்ள வேண்டும்.
8. தீபாவளியின் போது பெரியோர்களை வணங்கி அவர்களிடம் ஆசியும், வாழ்த்தும் பெறுவது அவசியமாகும்.
9. தீபாவளிச் சமையலில் சாம்பார், புளிக்குழம்பு போன்றவை இடம் பெறக்கூடாது. ஏனென்றால், தீபாவளிப் பண்டிகையின் போது மழைக்காலமாகையால் அப்போது அவை செரிமானம் ஆகாது. இப்பருவத்திற்கேற்ற, உடலுக்கு இதமான, பக்குவமான உணவு மோர்க்குழம்பு மட்டுமே. எனவே, தீபாவளிப் பண்டிகைச் சமையலில் மற்ற உணவுகளுடன் மோர்க்குழம்பு முக்கியப் பங்கைப் பெறும்.
10. இந்துக்கள் மட்டுமின்றி சமணர், பெளத்தர், சீக்கியர் ஆகியோரும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
11. லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் ‘செல்வம் சேரும்’ என்பது தொன்ம நம்பிக்கை.
12. தீபாவளி தினத்தன்று, ‘என்ன கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பது இன்றும் நம் நாட்டில் பழக்கத்தில் இருந்து வருகிறது.
13. ‘தைலே லட்சுமி: ஜல கங்கா’ என்பது துலாபுராணத்தின் மணியான வாசகம். கங்கை, தீபாவளி அன்று எண்ணையிலும் வெந்நீரிலும் இருப்பதாகத் தொன்ம நம்பிக்கை. சிலர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடுதல் செய்வார்கள்.
14. கண்ணபிரானுக்கும் நரகாசுரனுக்கு நடந்த போரில் கண்ணபிரான் தேர்த்தட்டில் மயக்கமுற்றார். சாரதியாக வந்த சத்தியபாமா வீரத்துடன் போராடினாள். அதனால், இக்கொண்டாட்டம் வீரலட்சுமியைப் போற்றி வணங்கும் கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.
15. அஞ்ஞானத்தின் ஸ்தூல வடிவம் தான் நரகாசுரன். அந்த இருளைப் போக்குதவற்கு ஞான தீபங்களை ஏற்றுகிறோம் என்பதுவே இதன் கருத்து.
16. எம் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு பாதாள லோகம் சென்ற மகாபலி சக்கரவர்த்தி எம் பெருமானிடம் ஆண்டிற்கு ஒரு முறை தாம் பூலோகம் வரவேண்டும் என்றும், அந்த நாளில் பூலோக வாசிகள் புத்தாடை உடுத்தி, எங்கும் விளக்கேற்றி கோலாகலத்துடன் தன்னை வரவேற்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அந்த நாள்தான் தீபாவளி என்றும் சொல்லப்படுகிறது.
17. தீபாவளித் திருநாளை முதலில் கொண்டாடியவன் நரகாசுரன் மைந்தன் பகதத்தன்.
18. தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
19. எமனுக்கு யமுனை என்ற தங்கை உண்டு. எமன் தீபாவளியன்று அவளுக்குப் பரிசுகள் வழங்குவதாக ஒரு தொன்ம நம்பிக்கையும் உண்டு. அதனால் அன்று அண்ணன், தங்கையுடன் சேர்ந்து உணவருந்த வேண்டும். தங்கைக்கு ஆபரணம் செய்து கொடுப்பர்.
20. தீபாவளியின் போது இளம் பெண்கள் தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அமிழ்ந்து விடாமலும் அணையாமலும் மிதந்து செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.