இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி. மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் செய்யத் தொடங்குவார்கள். நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரையேப் போற்றுகின்றன.
விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள் பூத வடிவமாகும். புருவம், கண்கள் மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகும்.
எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக்கெல்லாம் சுவாமி இந்தப் பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை. மஞ்சளிலோ, சாணத்திலோ பிடித்து வைத்து வேண்டினாலேப் போதும். உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.
இதனால், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போதும், தம் துன்பங்களைத் தீர்த்து அருளும் கடவுளாக விநாயகரையே முதலில் வணங்கித் தொடங்குகின்றனர். இதே போன்று, தாளில் எழுதத் தொடங்கும் முன்பும், பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் வழக்கத்தை இன்னும் பலர் கொண்டிருக்கின்றனர். பிள்ளையார் சுழி என்பது அகரம் (அ), உகரம் (உ), மகரம் (ம) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது. இதனால், பிள்ளையார் சுழியும் முதன்மையாக இடம் பெறுகிறது.