இந்தப் பூமியில் மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ உடல்நலம், உறவுகள், பொருளாதாரம், பாதுகாப்பு, ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை முழுமையடையச் செய்யும் சக்தியுள்ள இடங்களில் அமைந்த ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. உடல்நலத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமைத் திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இதனை அறுபடை வீடு என்று ஏன் சொல்கிறார்கள்? ஆறு வீடுகள் என்று சொல்லாமல், இடையில் படை என்ற சொல் ஏன் வந்தது? என்று கேட்கலாம்.
இதனைத் தெரிந்து கொள்ள, நக்கீரர்தான் நமக்கு உதவுகின்றார். அவர்தான் தமிழில் முதன்முதலாகக் கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.
புலவர்கள் பொதுவாக, அரசர்களிடம் சென்று அவரைப் பற்றிப் பாடிப் பரிசு பெறுவார்கள். பரிசளித்த மன்னர்களைப் பற்றி, தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு சென்று பாடிப் பரிசு பெறும்படி அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று பெயர்.ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று, பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதி விடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.
பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை எனும் நூல்.
செந்தமிழ்க் கடவுளாம் செந்திலாண்டவரின் செம்மையான பண்புகளைப் பாராட்டி, அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான். ஆற்றுப்படுத்தும் போது, அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப்பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கை ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்றழைக்கப்பட்டு, பின்பு அதுவே மருவி ஆறுபடை வீடுகளாகி விட்டன. நக்கீரர், ஆற்றுப்படை வீடுகளைக் கீழ்க்காணும் வரிசையில் பட்டியலிடுகிறார்.
முதற் படைவீடு – திருப்பரங்குன்றம்
இரண்டாம் படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
மூன்றாம் படைவீடு – திருவாவினன்குடி (பழனி)
நான்காம் படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)
ஐந்தாம் படைவீடு – குன்றுதோறாடல் ( திருத்தணி)
ஆறாம் படைவீடு – பழமுதிர்ச்சோலை
மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்புப்படுத்தவில்லை. ஆனால், பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டன.
திருப்பரங்குன்றம்
தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்தத் தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டுச் சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.
திருச்செந்தூர்
அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி, பின்னர் முருகப்பெருமானைத் தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி மனம் தெளிவு பெறும்.
பழனி
ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரைத் தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.
சுவாமிமலை
தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்கத் தலத்திற்கு வந்து ஆறுமுகனைத் தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.
திருத்தணி
சூரனைச் சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்தத் திருத்தணிகை. இந்தக் குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன் பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.
பழமுதிர்ச் சோலை
தமிழுக்குத் தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையேத் திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும் என்பது தொன்ம நம்பிக்கை.