மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசியன்று வரும் மகா சிவராத்திரி சிறப்புடையது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் அனைத்துப் பேற்றையும் ஒரு சேர வழங்கும் சிவராத்திரியாக மகாசிவராத்திரி இருக்கிறது. மகா சிவராத்திரியின் போது இரவு வேளையை நான்கு சாமங்களாகப் பிரித்து, அந்த நான்கு சாமங்களிலும் சிவலிங்கத்துக்குச் சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த சாமப் பூசைகளின் போது, எப்படி வழிபடவேண்டும் என்பதை இந்து சம்யப் புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.
நான்கு பூசை காலங்கள்
மகாசிவராத்தி நாளன்று வரும் இரவில் 7:30 மணிக்கு முதல் கால பூசை, இரவு 10:30 மணிக்கு இரண்டாம் கால பூசை, நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூசை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூசை செய்யப்படுகிறது.
முதல் சாம பூசை
முதல் காலப் பூஜை, படைக்கும் தேவன் பிரம்மா, சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்தக் கால பூஜையில் பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம் எனும் பஞ்ச கவ்வியத்தால் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிறப் பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்தக் காலத்தில் விரதமிருந்து பூசிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் சாம பூசை
இரண்டாவது காலப் பூசையை காக்கும் தேவன் விஷ்ணு, சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்தக் காலத்தில் பஞ்சாமிர்த அபிசேகம் செய்தும், சந்தனக்காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்புப் பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணெய் தீபத்துடன், இரண்டாவது கால பூசை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்தக் காலத்தில் விரதமிருந்து பூசிப்பதால் தன, தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாம் சாம பூசை
மூன்றாவது காலப் பூசை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்தக் காலத்தில் தேன் அபிசேகம் செய்தும், பச்சைக் கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லிப் பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து, எள் அன்னம் நிவேதனமாகப் படைத்து, இலுப்பை எண்ணெய் தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்தக் காலத்திற்குரிய சிறப்பு என்னவென்றால், இதை லிங்கோத்பவ காலம் என்றும், இந்தக் காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்தக் காலம். இந்தக் காலத்தில் விரதமிருந்து பூசிப்பதால் எந்தவிதத் தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காம் சாம பூஜை
நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூசிப்பதாகக் கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு, பால் அபிசேகம் செய்தும், நந்தியாவட்டப் பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்து, தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிசேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை மேற்கொண்டு, நான்கு கால பூசைகளிலும் கலந்து கொண்டு இறைவன் சிவபெருமானை வழிபட்டு அனைத்துச் செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் பெறுவோம்.