திருச்சி, திருவரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள்தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி மாதம் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது.
பழைய சோறு - மாவடு என்று சொல்லப்படும் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் திருவரங்கத்திலிருந்து ஜீயர்புரம் என்ற ஊருக்குக் கிளம்பி செல்கிறார்.
அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது.
அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர், ரங்கநாதப் பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன் பிறகு, முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்தத் திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூலப் பெருமானுக்கு பழைய சோறு, மாவடு விருந்தளிக்கப்படுவது என்று நீங்கள் கேட்கலாம்...
ஆமாம், இதன் பின்னால் ஒரு கதை இருக்கிறது. வாங்க... கதைக்குப் போகலாம்.
ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையேச் சர்வகாலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்தாள்.
இளமையிலேயேக் கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள்தான். ஒருவர் ரங்கநாதப் பெருமாள், மற்றொருவர் அவளின் பேரன் ரங்கன்.
ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்தப் பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா', எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது.
அந்தச் சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார்.
அன்று பாட்டியின் பெயரன், முகம் திருத்திக்கொண்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்குச் சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டுக் காவிரியில் இறங்கிக் குளித்தான்.
மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போலப் பெருகி வரத் தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பேரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான்.
நேரமாகியும் திரும்பாத பேரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள்.
ரங்கநாதப் பெருமாளைத் தொழுது அழுது காவிரிக்கரைக்குச் சென்றாள். அதே வேளையில், காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான்.
உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனைத் தரிசித்துக் காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான்.
தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளோ என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான்.
பேரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா?
காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆற்றுதல் படுத்தக் கிளம்பினார் பரந்தாமன்.
பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பேரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள்.
பாட்டி மகிழ்ந்தாள். பேரனை கட்டி அணைத்து வீட்டுக்குக் கூட்டி சென்றாள்.
பசித்திருந்த பேரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்துச் சாப்பிடச் சொன்னாள்.
பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பேரன் ரங்கன் வந்து விட்டான்.
பாட்டி திகைத்தாள்.
அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான்.
பாட்டியும் பேரனும் ரங்கநாதப் பெருமானின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள்.
அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ரங்கநாதப் பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவில் இதை நடத்தி வருகிறார்.