ஸ்ரீவைஷ்ணவ வழிபாட்டு நடைமுறைகளில் பூணூல் அணியாத வைணவ அடியார்களை சாற்றாத வைணவர்கள், சாத்தாத வைணவர்கள் அல்லது சாத்தாத முதலிகள் என்பர்.
இராமானுசர் தான் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீவைஷ்ணவ நடைமுறையில் அந்தணரல்லாத, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிற சமூக மக்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து, நெற்றியில் திருமண் காப்பிடச் செய்து, பெருமாள் கோயிலில் சென்று வழிபடவும், கோயில் கைங்கரியங்களில் ஈடுபடவும் வழி வகுத்தார். இதனால் ஸ்ரீவைஷ்ணவத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை கூடியது.
சாற்றாத வைணவர்கள், பெருமாள் கோயில் தொடர்பாக, நந்தவனம் பராமரித்தல், கோயிலுக்குப் பூக்களைப் பறித்து மாலைகள் தொடுத்தல், குளங்கள் மற்றும் ஆறுகளிலிருந்து புனித நீரை கோயிலுக்குக் கொண்டு வருதல், பெருமாள் திருவீதி உலா செல்கையில் பல்லக்கு சுமத்தல், கட்டியம் கூறுதல், தீப்பந்தம் பிடித்தல், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் பாடுதல் மற்றும் பிற திருப்பணிகளைச் செய்வோரைச் சாற்றாத வைணவர்கள் என்பர்.
அந்தணர்கள் இல்லாத சிறு கிராமங்களில் உள்ள கிருஷ்ணர், இராமர், ஆஞ்நேயர், திரௌபதி, தருமராசா போன்ற வைணவக் கோயில்களில் சாற்றாத வைணவர்கள் பூஜைகள் செய்கின்றனர்.
சாற்றாத வைணவர்கள் தங்கள் குருமார்களை அணுகி, பஞ்ச சம்ஸ்காரச் சடங்குகள் செய்து கொள்வர். இதனால் பிற ஸ்ரீவைஷ்வணவர்கள் போன்று, சாற்றாத வைணவர்கள் தமது உடலில் இரண்டு தோள்பட்டைகளில் சங்கு மற்றும் சக்கரத்தைப் பொறித்துக் கொள்வதுடன், நெற்றி, மார்பு, தோள்பட்டை மற்றும் இரண்டு கைகளிலும் திருமண் காப்பு இட்டுக் கொள்வர்.
ஸ்ரீரங்கத்தில் சாற்றாத வைணவர்கள் குடியிருக்கும் வீதிக்கு சாத்தாத வீதி என்ற பெயர் உள்ளது.