மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் 18 பர்வங்களின் (பகுதிகளின்) பெயர்களும் அதற்கான விளக்கங்களும் கீழேத் தரப்பட்டிருக்கின்றன.
1. ஆதி பர்வம்
கதை மாந்தர்களின் பிறப்பு, வம்சத்தின் தொடக்கம் முதலிய தொடக்கக்கால வரலாறுகளைக் கூறும் பகுதி.
2. சபா பர்வம்
துரியோதனன் நிர்மாணித்த சபா மண்டபத்தில் நடைபெற்ற சூதாட்டத்தை முதன்மையாக எடுத்துரைக்கும் பகுதி.
3. ஆரணிய (வனம்) பர்வம்
வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்களின் காடுறை வாழ்வைப் பற்றி விவரிக்கும் பகுதி.
4. விராட பர்வம்
விராட நாட்டில் (மத்ஸ்ய நாட்டு மன்னவன் பெயர் விராடன். எனவே, அவன் நாடு விராட நாடு என்றும் கூறப்பட்டது) பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதைப் பற்றி விவரிக்கும் பகுதி.
5. உத்தியோக (முயற்சி) பர்வம்
போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும், பிறகு, போர் நடப்பது உறுதியென்றானதும் படைகளைத் திரட்டும் முயற்சிகளிலும் பாண்டவர்கள் ஈடுபட்டதைச் சொல்லும் பகுதி.
6. பீஷ்ம பர்வம்
கௌரவர் சேனையின் தலைமைப் பொறுப்பைப் பீஷ்மர் ஏற்றுப் போரிட்ட முதல் பத்து நாள் யுத்த நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பகுதி. (இப்பகுதியில்தான் பகவத் கீதை இடம் பெற்றுள்ளது).
7. துரோண பர்வம்
கௌரவர் படைத் தலைமையைத் துரோணர் ஏற்றுப் போரிட்ட 11, 12, 13, 14 மற்றும் 15ஆம் நாள் போர் நிகழ்வுகளைக் கூறும் பகுதி.
8. கர்ண பர்வம்
கௌரவர் சைனியத் தலைமையைக் கர்ணன் ஏற்றிருந்த 16, 17 ஆம் நாள் போர்க்காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டும் பகுதி.
9. சல்லிய பர்வம்
மத்திர நாட்டு வேந்தனான சல்லியன் கௌரவர் சேனாதிபதியாகிப் போரிட்ட கடைசி நாள் யுத்தத்தை விளக்கும் பகுதி.
10. சௌப்திக (உறங்குபவர்களைத் தாக்கிக் கொல்லுதல்) பர்வம்
தூங்கிக் கொண்டிருந்தவர்களை அசுவத்தாமன் கொன்றொழித்த நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் பகுதி.
11. ஸ்திரீ (பெண்) பர்வம்
போரின் விளைவால் பெண்கள் அடைந்த சோகத்தைப் பெரும்பான்மையாகச் சொல்கிற பகுதி.
12. சாந்தி (அமைதி) பர்வம்
போருக்குப் பின் அமைதி திரும்புவதைக் கூறுவது. பீஷ்மர் தர்மருக்கு அநேக நீதிகளை உபதேசிப்பது இப்பகுதியில்தான்.
13. அனுசாஸன (உபதேசம்) பர்வம்
முந்தைய சாந்தி பர்வத்தின் தொடர்ச்சியாய் அமைவது. இந்தப் பர்வத்திலும் பீஷ்மரின் உபதேசம் தொடர்கிறது.
14. ஆஸ்வமேதிக (அசுவமேத யாகம்) பர்வம்
பாண்டவர்கள் அசுவமேத யாகம் செய்ததைப் பற்றிப் பேசும் பகுதி.
15. ஆஸ்ரமவாஸிக பர்வம்
திருதராஷ்டிரன் முதலியோர் அரண்மனையைத் துறந்து விட்டு ஆஸ்ரம வாசம் மேற்கொண்டதை உரைக்கும் பகுதி.
16. மௌஸல (உலக்கையால் நடக்கும் போர்) பர்வம்
ஓர் உலக்கையால் யாதவ இனத்திற்கு அழிவு நேர்ந்ததைத் தெரிவிக்கும் பகுதி.
17. மஹாபிரஸ்தானிக பர்வம்
பாண்டவர்கள் இறுதிப் பயணத்தைத் தொடங்கியதை எடுத்துச் சொல்லும் பகுதி.
18. சுவர்க்க பர்வம்
தருமபுத்திரன் சொர்க்கத்திற்குள் சென்றதைச் சொல்கின்ற பகுதி.