திருமணத்தின் போது அவரவரின் மரபுப்படி நிறைய சடங்குகள் அமைந்திருந்தாலும், சனாதன தர்மத்தின்படி ஒரு சில பொதுவான சடங்குகள் அமைந்துள்ளன. அதிலொன்றுதான் சப்தபதி (ஏழு வாக்குறுதிகள்) எனும் சடங்கு ஆகும். இந்தச் சடங்கில் கணவனும், மனைவியும் கைக்கோர்த்து அக்கினிச் சாட்சியாக “ஏழு அடிகள்” வலம் வருவர். திருமண வைபவத்தில் அக்கினி என்பது ஜோதி வடிவான பரம்பொருளைக் குறிக்கின்றது. ஒவ்வொரு திருமணத்திற்கும் இறைவனேச் சாட்சியாக அமைந்துள்ளார். எனவே, இந்த ஏழு வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்க வேண்டியது கணவன் மனைவியின் தர்மம் ஆகும்.
1. கணவனும் மனைவியும் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் சுக துக்கங்களையும், குடும்பச் சுமையையும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
2. இருவரும் ஒரே மனதாக இணைந்திருந்து, இருவருக்கும் ஒப்புதலுடையச் செயல்களையேச் செய்ய வேண்டும்.
3. இருவரும் தங்களின் குடும்பத்தினரை மதித்து நடக்க வேண்டும்.
4. இருவரும் ஒன்றாக இருந்து அவர்களின் குழந்தைகளை வளர்த்து, குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, நிறைவான கல்வியை அளிக்க வேண்டும்.
5. இருவரும் குடும்பப் பொருளாதாரத்தைச் சரி சமமாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
6. இருவரும் தலைவன் - தலைவி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் தலைவன் கணவன், தலைவி மனைவி. கணவன், மனைவியைத் தவிர மற்ற பெண்களிடமும், மனைவி, கணவனைத் தவிர மற்ற ஆண்களிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. இது தலைவர் - தலைவி தர்மம் ஆகும்.
7. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மனதாலும், வாக்காலும், செயலாலும் நோகடிக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் அன்பு, இனிமை, அரவணைப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.