ஔவையார் வழிபாடு என்பது தமிழ்நாட்டிலுள்ள பெண்களால் மட்டுமே நடத்தப் பெறும் ஒரு இந்து சமய வழிபாடாகும். இவ்வழிபாட்டினை செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்றும் சொல்வதுண்டு. சில இடங்களில் பாட்டி வழிபாடு என்கின்றனர்.
இந்த வழிபாட்டு முறை பொதுவாக ஆடி, தை, மாசி மாதங்களில், தொடர்ந்து ஏதேனும் மூன்று செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த வழிபாட்டிற்காக "அசந்தா ஆடியிலும், தப்புனா தையிலும் மறந்தா மாசியிலும்" என்ற சொல்லாடலும் இருக்கிறது.
வயதான சுமங்கலிப் பெண்ணின் தலைமையில், நள்ளிரவில் தேர்வு செய்யப்பட்ட ஒரு வீட்டில் இந்த வழிபாடு நடக்கும். அரிசி மாவை உப்பில்லாமல் பிசைந்துக் கொழுக்கட்டை செய்து, வேப்பிலை, புளிய இலை, புங்க இலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைத்து வழிபாடு செய்வர். இவ்வழிபாட்டுக்குத் தலைமையேற்ற வயதான சுமங்கலிப் பெண், ஒளவையாரின் பிள்ளையார் வழிபாட்டு கதையை அனைவருக்கும் எடுத்துச் சொல்வார்.
இவ்வழிபாடு மேற்கொள்ளும் கன்னியருக்கு அவர்களின் மனம் விரும்பிய மாப்பிள்ளை கிடைப்பார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த வழிபாட்டில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆண்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கொழுக்கட்டையை ஔவையார் கொழுக்கட்டை எனச் சொல்வார்கள். இந்தக் கொழுக்கட்டைப் பிரசாதம் ஆண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆண்கள் கண்ணில்பட்டால் அவர்களின் கண் கெட்டு விடும் என்று எச்சரிக்கையும் செய்யப்படுகின்றது. இதனால் பெண்கள் இதை மறைவாக வைத்துத்தான் சாப்பிடுவார்கள். சில வீடுகளில் சிறுவர்களின் தொல்லைகள் காரணமாக, ஆண் குழந்தைகளுக்கு இந்தக் கொழுக்கட்டையை உண்ணத் தருவதுமுண்டு.