ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று விதமான துன்பங்களில் இருந்து மீள வேண்டும். இதைப் பற்றி சாங்கிய யோக சூத்திரம் கூறுகிறது. அவை;
1. அதிதைவீகம் (நம் சக்திக்கு மீறிய ஒன்றால் ஏற்படுவது)
அதிதைவீகம் என்பது நம்மால் கட்டுப்படுத்தமுடியாத, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் வரும் துன்பமாகும். நம் சக்திக்கு மீறிய ஒன்றுதான் இயற்கை. எனவே இயற்கையால் ஏற்படும் துன்பங்கள் அதிதைவீக துன்பம் எனப்படுகின்றன. வெள்ளம், புயல், நிலநடுக்கம், கடற்கோள் (சுனாமி), எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கையிடமிருந்து வரும் துன்பங்கள் ஆகும். இந்தத் துன்பங்களைத் தடுத்து நிறுத்தும் சக்தி சாமானிய மனிதர்களுக்குக் கிடையாது. இத்தகைய துன்பங்கள் ஏற்படுவதற்கு முன்னர் கணித்துக் கூறும் திறமை நம்மிடம் இருந்தாலும், அதைத் தடுக்கும் சக்தி நமக்கு இல்லை. இத்தகைய துன்பங்கள் அரிதானது, தடுக்க முடியாதது. ஆனால், இவற்றினிருந்து தப்பிக்க வழி உண்டு.
2. அதிபௌதீகம் (பௌதீக / உலகப் பொருட்களால் ஏற்படுவது)
அதிபௌதீகம் என்பது உலகத்தில் இருக்கும் ஜடப்பொருட்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் போன்றவற்றிலிருந்து வரும் துன்பங்கள் ஆகும். உலகத்தின் பொருட்கள் என்பவை: மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் ஆகியவை ஆகும். உதாரணமாக; ஒருவர் நம்மை வாய்ச்சொல்லால் துன்பப்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், கையால் தாக்குதல். பாம்பு கடி, தேள்கடி, டிங்கு, மலேரியா, வனவிலங்கு தாக்குதல், விசச்செடி தீண்டல், கட்டிடங்கள் சரிந்து விழுதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்து போன்றவை. இத்தகையத் துன்பங்கள் வழக்கமானது. ஆனால், அவற்றைத் தவிர்க்கும் ஆற்றலும் திறமையும் நமக்கு உள்ளது.
3. அதியாத்மிகம் (நம்மால் ஏற்படுவது)
அதியாத்மிகம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துன்பமாகும். மூன்று வகைத் துன்பங்களில் இதுவே மிகவும் ஆபத்தானது எனச் சொல்லப்படுகின்றது. இந்த வகையான துன்பத்திற்கு நாம்தான் முழுப் பொறுப்பு. நம்மை நாமேத் துன்புறுத்திக் கொள்வதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
அ) உடலால் – புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல், ஒழுக்கமற்ற நடத்தையைக் கொண்டிருத்தல் போன்ற செயல்களால் நம் உடலை நாமேத் துன்புறுத்திக் கொள்கிறோம்
ஆ) மனத்தால் – தேவையற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல், முறையற்ற விசயங்களை நினைத்துக் கொண்டிருத்தல், கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், பேராசை போன்ற மனத்திற்கு நோயைத் தரும் குணங்களைக் கொண்டிருத்தல்