இந்துத் தத்துவங்களின்படி, பரம்பொருளை விளக்குவதற்காகச் சூத்திரங்கள் எனப்படும் நூற்பாக்களால் ஆனதால் இந்நூலுக்குப் பிரம்ம சூத்திரம் என்னும் பெயர் உண்டாயிற்று. வேதத்தின் இறுதிப் பகுதியாக, அதாவது, வேதத்தின் அந்தமாகக் கருதப்படும் உபநிடதங்களில் சாரமாக அமைந்திருப்பதன் காரணமாக இது வேதாந்த சூத்திரம் எனவும், பிரம்ம மீமாம்சை, வேதாந்த தர்சனம் என்கிற பெயர்களாலும் இது அறியப்படுகிறது. மீமாம்சம் என்றால் ஆழமாகச் சிந்திப்பது, ஆராய்வது, விவாதிப்பது என்று பொருள். வேதாந்தம் என்றால் வேதத்தின் முடிவுப் பகுதியான, உத்தர மீமாம்சை என்று அழைக்கப்படும் உபநிடதங்கள். வேதாந்த தரிசனம் என்பதில் தரிசனம் என்ற சொல்லுக்கு ‘பார்த்து அறிதல்’ என்று பொருள். இங்கு, பார்த்ததை மட்டும் அறிவதல்ல, பார்த்ததின் உட்பொருளையும் அறிவதாகும்.
555 சூத்திரங்களைக் கொண்ட பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள், ஒவ்வொரு பாதத்திலும் அதிகரணங்கள் (தலைப்புகள்) என்றும், சூத்திரங்கள் என்றும் வகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 1.1.1 என்றால் முதல் அத்தியாயம், முதல் பாதம், முதல் சூத்திரம் ஆகும். முதலாவது, சமன்வய அத்தியாயம், இது சமன்படுத்துகிறது. இரண்டாவதான அவிரோதா அத்தியாயம், முரண்பாடுகளைக் களைகிறது. மூன்றாவதான சாதனா அத்தியாயம், வீடுபேறுக்கான வழிகளைப் பயில்வது. நான்காவது பலன் அத்தியாயம் வீடுபேற்றை விவரிப்பது.
பிரம்ம சூத்திரம், வேதாந்தத் தத்துவத்தை விளக்குபவையாகக் கருதப்படுகின்றன. “வேதங்கள் என்கிற மரத்தில் பூத்திருக்கிற உபநிடதப் பூக்களைத் தொடுத்திருக்கிற ஞானமாலையே பிரம்ம சூத்திரம்” என்கிறார் ஆதிசங்கரர். ”நாம், இந்த உலகம், இதற்குக் காரணமான மூலப்பொருளான ஈஸ்வரன்” ஆகிய மூன்று தத்துவங்களை விவாதிக்கிறது. அண்டத்தில் உள்ளதை அணுவாக்கித் தந்திருக்கிறார் வியாசர். பிரம்மசூத்திரம் கைக்குள் அகப்படுத்தப்பட்ட கடல். உலக உயிர்கள் அனைத்தும் பிரம்மத்துடன் தொடர்புடையவைதாம். அந்தத் தொடர்பை அறிய, பிரம்மத்தை அறிய, ஆத்ம ஞானம், பிரம்ம சிந்தனை, பிரம்ம தியானம் தேவை என்கிறார் ஆதிசங்கரர்.
பணம், புகழ், பதவி, உலகியல் இன்பம் ஆகியவைகளைத் தாண்டி ஆராய்பவர்களுக்கு பிரம்ம சூத்திரம் ஒரு வழிகாட்டி. மேலும், பிரம்ம சூத்திரம் மதச் சார்பற்றது. பிரம்ம சூத்திரத்தில் எந்தக் கடவுளைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசவில்லை. மிகப்பெரிய உண்மைகள் சூத்திரங்களாக வடித்தெடுக்கப்பட்டுள்ளன. சூத்திரம் என்றாலே விதி, இரகசியம், தீர்ப்பு, உபாயம் என்ற பல பொருள்கள் உண்டு. இது பிரம்ம சூத்திரத்திற்கும் பொருந்தும்.
பிரபஞ்சத்தின் தோற்றம், பிரம்மம், மனிதப்பிறவி, மரணம், வீடுபேறு ஆகியவை பற்றி விவரிக்கிறது. பிரம்ம சூத்திரம் தர்க்க நூல் வகையைச் சார்ந்தது. பிரம்ம சூத்திரம் ஆராய்ச்சிப் பூர்வமான சிந்தனையைத் தூண்டுவது. இது வேத உபநிடதங்களை ஆராய்கிறது. விசயங்களை விவாதிக்கிறது. முரண்பாடானவைகளை மறுத்து, தகுதியானவற்றை உறுதிப்படுத்துகிறது.