இந்து சமயத்தில் உணவு உண்ணுவதற்கும் சில நெறிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவை;
1. உணவை வீணாக்கக் கூடாது
பசித்த போது தான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே, போதுமான அளவு உணவைத் தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால், பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.
2. உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும்
நமக்குக் கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில், நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்குக் கொடுக்கலாம்.
3. அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் கூடாது
ஒருவர் அன்போடு நமக்கு கொடுக்கும் உணவை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறவேண்டும். பிறகு, அந்த உணவை இல்லத்தாரோடு பகிர்ந்து உண்ணவேண்டும். இவர் வேண்டாதவர், இவர் கொடுத்த உணவை உண்டால் ‘தீட்டாகிவிடும்’ என்று அந்த உணவை அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய தீவினைச் செயலாகும்.
4. ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டாம்
ஆரோக்கியமற்ற உணவை நாமும் உண்ணக் கூடாது, மற்றவர்களுக்கும் கொடுக்கக் கூடாது. உணவை வீணாக்கக் கூடாது என்ற பட்சத்தில் ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணுதல், நம் உடலைப் பாதிக்கும். உடலை பாதிக்கும் இயல்புடையது ‘அன்னம்’ அல்ல. உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதே அன்னம் ஆகும். எனவே, அதை நாம் தூக்கி வீசுவதில் எந்தவொரு பிழையும் இல்லை.
5. புலால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
புலால் என்றால் இறைச்சி எனப் பொருள்படும். இறைச்சி என்பது யாதெனில், அது பிறிதொரு உயிரினத்தின் சதை ஆகும். மற்ற உயிரினத்தின் உடலை உண்பதால், அதன் உள்ளுணர்வுகளும் நம் உணர்வுகளில் கலக்கின்றன. இது மனிதர்களிடம் இருக்கும் தெய்வீகக் குணங்களை முடக்கி, மெல்ல மெல்ல மிருகக் குணங்களை உருவாக்கும். கட்டுப்பாடில்லாத புலால் உணவு, நாளடைவில் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்தி மனிதனைக் கொல்கின்றன. மனரீதியிலும் உடல்ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் புலால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லதாகும். இயலாதவர்கள் அவ்வுணவினைக் குறைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். ஆன்மீக வாழ்வில் புலால் உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயிற்சிக்கு புலால் மறுத்தல் மிக முக்கியமான ஒழுக்கநெறியாகும். மற்றபடி இந்துக்களாகிய நாம் புலால் உணவுகளை குறைத்துக் கொண்டு, தாவர உணவுகளை மிகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்குப் புலாலை முழுவதுமாக மறுக்க அடிப்படையானப் பயிற்சி தேவைப்படும். அதனால்தான் நம் முன்னோர்கள் வெள்ளிவிரதம், புரட்டாசிவிரதம் என சில விரதங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.