இந்தியப் பண்பாட்டில் ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் செய்கின்றனர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகளை ‘பிரணாமங்கள்’ என்று வடமொழியில் சொல்கின்றனர். இதனைத் தமிழில் ‘வணக்கங்கள்’ என்கின்றனர். நம்முடைய மரபு வழியில் ஆறு வகையான வணக்கங்கள் உள்ளன. அவை;
1. அஷ்டாங்கணம்
உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல்.
2. ஷாஷ்டாங்கம்
உடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல்.
3. பஞ்சாங்கம்
உடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல்.
4. நமஸ்காரம்
இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல்.
5. அபிநந்தனம்
இரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக் கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல்.
6. சரணஸ்பர்ஷம்
கால்களைத் தொட்டு வணங்குதல்.
வணக்கங்கள் யாருக்கு?
மேற்காணும் ஆறு வகை வணக்கங்களில் முதல் மூன்று வகை தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவை கோயில்களிலும் வழிபாட்டு அறைகளிலும் தெய்வங்களை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய வணக்க முறைகள். அஷ்டாங்கனம் எனப்படும் எட்டு அங்க வணக்கமுறையை ஆண்களும், பஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்க வணக்க முறையைப் பெண்களும் கடைப்பிடிக்கின்றனர். ஷாஷ்டாங்கம் எனப்படும் ஆறு அங்க வணக்கமுறையை யோகாசன சூரிய நமஸ்காரப் பயிற்சியின் போது கடைப்பிடிப்பர்.
நான்காவது மற்றும் ஐந்தாவது வணக்கமான ‘நமஸ்காரமும்’, ’அபிநந்தனமும்’ தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோருக்கு உரித்தானவை. மனிதர்களைத் தவிர்த்து, மற்ற ஜீவராசிகளுக்கும் ‘நமஸ்காரம்’ மூலமாக மரியாதை செலுத்தலாம். இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்துக் கைகூப்பிக் கொள்ளும் போது, ”நீயும் நானும் சமமானவன்” என்ற தத்துவம் தெரியப்படுத்தப்படுகின்றது. மேலும், கைகளைக் கூப்பி தலையைச் சாய்த்து மரியாதை செலுத்தும் போது, ஒருவரின் பணிவுடைமை காட்டப்படுகின்றது.
இறுதியாக, கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வங்கள், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானவை. தெய்வங்களின் கால்களைத் தொட்டு வணங்குதல், இறைவனிடம் சரண்புகுதல் தத்துவத்தைக் குறிக்கின்றது. மற்றவர்களின் கால்களைத் தொட்டு வணங்குதலும் வெவ்வேறு தத்துவமுடையது.
எல்லா வகையான மனிதர்களுக்கும் “நமஸ்காரம்” முறையில் மரியாதை தரவேண்டும். ஆனால், கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வம், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானது.