இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பைப் புல் பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. இது இந்து சமயத் துறவிகள், மதப் போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது. ரிக் வேதத்தில் (Rig Veda) மதச் சடங்குகள் செய்யப் பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பைக் குறிப்பிடப்படுகிறது.
தருப்பைப்புல் என்பது Desmostachya bipinnata என்ற அறிவியல் பெயர் கொண்ட புல்வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும். தருப்பைப் பொதுவாக ஆங்கிலத்தில் ஆல்பா புல் (Halfa Grass), பெரிய தண்டுப் புல் (Big cord grass) மற்றும் உப்புக் கோரைப் புல் (Salt reed-grass) எனவும் அறியப்படுகிறது. இத்தாவரம் இந்தியாவில் "தாப்" (Daabh), தர்ப்பை (Dharbha), குசம் அல்லது குசா (Kusha) போன்ற சில பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
தருப்பையில் ஏழுவகை உண்டு. அவை,
1. குசை
2. காசம்
3. தூர்வை
4. விரிகி
5. மஞ்சம்புல்
6. விசுவாமித்திரம்
7. யவை
இத்தர்ப்பைப் புல், அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தருப்பை எனவும், நுனிப்பகுதி பருத்துக் காணப்படின் அது பெண் தருப்பை எனவும், அடிப்பகுதி பருத்திருப்பின் அது அலி தர்ப்பை எனவும் வழங்கப்படுகிறது.