திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதன் வாழும் காலம் நூற்று இருபது வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே… இது ஏன்...? என்று கேட்டார்.
அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள்தான் மனிதனின் வாழும் காலத்தை அழிக்கின்றன. அதனால் மனிதனின் வாழும் காலம் குறைகிறது என்றார்.
அவை:
முதலாவது வாள் - அதிகக் கர்வம் கொள்ளுதல்
தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாள் – அதிகம் பேசுதல்
அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார்; கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்.
மூன்றாவது வாள் - தியாக மனப்பான்மை இல்லாமை
எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
நான்காவது வாள் – கோபம்
கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் வெற்றியாளன், அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஐந்தாவது வாள் – சுய நலம்
சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள், தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
ஆறாவது வாள் - நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது
உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பது போல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.
இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றிருபது ஆண்டை நிறைவு செய்வான்.