கோயிலின் கருவறையானது வெளி உலகத்திலுள்ள காற்று, ஒளி எளிதில் உட்புக முடியாத படி அமைக்கப்பட்டிருக்கும். அங்கு ஒரு இருள் சூழ்ந்த நிலையேக் காணப்படும். நடை திறந்து, திரை விலகி, மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும் போது, இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம். இதே போல், எண்ணங்கள், சிந்தனைகள் என்று சதா அலை பாயும் நம் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான். அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களாக இருள் மூடி இருக்கும். அந்த இருள் அகன்றால் நம் உள் மனதிலுள்ள இறைவணக் காணலாம் என்பதையேக் கற்பூர தீப ஆராதனை உணர்த்துகிறது.
கற்பூரம் தன்னை முழுமையாக அழித்துக் கொண்டு, பூரணமாய்க் கரைந்து காணாமல் போகிறது. அது போல இறை இன்ப ஒளியில், அதாவது பூரண சோதியாகிய இறைவனுடன் நாமும் ஐக்கியம் ஆகிவிடவே பிறப்பெடுத்துள்ளோம் என்னும் தத்துவத்தையும் கற்பூர தீபம் நமக்கு உணர்த்துகிறது.
இறைவனுக்கு அனைத்தையும் அர்ப்பணித்து மன நிறைவடையாமல் தன்னையே அர்ப்பணிப்பதையே, ஆத்ம சமர்ப்பணம் செய்வதையேக் கற்பூரத் தீபாராதனையும், அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு இறைவனின் பாதார விந்தங்களில் நாம் வீழ்ந்து வணங்குவது உணர்த்துகிறது.