திருமூலர் காலத்துச் சைவமானது,
1. சுத்த சைவம்
2. அசுத்த சைவம்
3. மார்க்க சைவம்
4. கடுஞ் சுத்த சைவம்
என நால்வகைப்பட்டது. இப்பிரிவு பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திரங்களில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
1. சுத்த சைவம்
சுத்த சைவர் பதி - பசு - பாசம் என்பவற்றின் வேறுபாடுகளை உணர்ந்தவர்; 'சித்' என்னும் அறிவை, 'அசித்' என்னும் அவித்தையால் கெடாமற் பார்ப்பவர்; தூய மாயையுடன் அசுத்த மாயையைக் கலக்க விடாதவர். வேதத்திலிருந்து தோன்றிய சித்தாந்தமே சுத்த சைவ சித்தாந்தம் என்பது திருமூலர் கருத்து.
2. அசுத்த சைவம்
அசுத்த சைவர் காதில் குண்டலங்களை அணிவர்; உடம்பில் நீறு பூசுவர்; ருத்திராட்ச மாலையை அணிவர்; சரியை, கிரியை வழி நிற்பர்; உபதேசம் பெற்று மந்திரங்களைச் செபித்துக் கொண்டிருப்பர்.
3. மார்க்க சைவம்
மார்க்க சைவர் காதில் குண்டலங்களை அணிவர்; உடம்பில் நீறு பூசுவர்; புறவேடத்திற்கு மிகுந்த மதிப்புத்தாரார்; ஞானத்தையே, சிறப்பாகக் கருதுவர்; வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தப் பாதையிற் சென்று ஜீவன் முக்தராவர்.
4. கடுஞ் சுத்த சைவம்
கடுஞ்சுத்த சைவர் என்பவர் சைவர்க்குரிய வெளி வேடங்களில் கவனம் செலுத்தார்; நேரே சிவனிடம் சென்று தங்கள் பாசத்தையும் பசுத்வத்தையும் ஒழித்துச் சிவஞானத்தை அடைவர். அவர்கள் சுத்த சைவர்க்குரிய சமயப்படிகளிற் செல்லார்; அவர்கள் 'நான்', 'அவன்' என்ற வேறுபாடு அற்றவர்கள்; சொல்லரிய தத்துவத்தை அடைந்து இந்திரியங்களை அடக்கியவர்கள். அவர்கள் பரசாயுத்யத்தை அடைந்தவர்கள். கண்ணப்பர், சாக்கியர் போன்ற நாயன்மார்கள் பலர் இவ் வகுப்பைச் சேர்ந்தவராவர். அவர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் படிகளைக் கடந்தவர்கள்; புறவேடம் அற்றவர்கள். கடுஞ் சுத்த சைவம் சிவஞான போதம் முதலிய பின்னூல்களில் கூறப்படாமை காணத்தக்கது.
கடுஞ்சுத்த சைவருடைய இலக்கணங்களைத் திருமூலர் கூறியிராவிடில், நாயன்மார் பலருடைய செயல்கள் பித்தர் செயல்களாகக் காணப்பட்டிருக்கும்; விளக்கமும் மதிப்பும் பெற்றிரா; நாம் வேறு எந்த நூலைக் கொண்டும் உண்மை அறிந்திருக்க முடியாது.
இந்நால்வருள் அசுத்த சைவர் வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தத்தை அறியாதவர். வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தம் சாதாரண சைவர் உபாயம் என்று திருமூலர் கூறுகிறார். கடுஞ் சுத்த சைவர் எல்லாம் கடந்தவர். எனவே, சுத்தசைவரும் மார்க்க சைவருமே வேதாந்தத்துடன் கூடிய சித்தாந்தத்தை அறிந்தவர் என்பதும், வேதாந்தத்துடன் கூடிய சைவ சித்தாந்தமே 'சுத்த சைவம்' என்பது திருமூலர் கருத்தாகிறது.