சிவ ராத்திரி அன்று மூன்றாம் காலத்தில் (மூன்றாம் ஜாமம்) சிவனாரை வழிபட்டால் எம்மாதிரியான பாவங்கள் செய்திருந்தாலும் விட்டு விலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக் கொள்ளாத விஷயங்களைக் கூடச் சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக் கொண்டு, மன்னித்து அருள் புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது.
சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
முதல் இரவுக் காலம் (ஜாமம்) என்பது மாலை 6 முதல் 9 மணி வரை.
இரண்டாம் இரவுக் காலம் (ஜாமம்) என்பது இரவு 9 முதல் 12 மணி வரை.
மூன்றாம் இரவுக் காலம் (ஜாமம்) என்பது இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை.
நான்காம் இரவுக் காலம் (ஜாமம்) என்பது (அதிகாலை 3 முதல் 6 மணி வரை).
இவற்றுள், மூன்றாம் இரவுக் காலப் பூஜையில் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராணம்’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களைச் சொல்லி தியானிப்பது நலம் தரும்.