உண்மை விளக்கம் என்பது, மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகும். இது, சிவஞான போத ஆசிரியரான மெய்கண்ட தேவரின் மாணவர்களில் ஒருவரான திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த மனவாசகம் கடந்தார் என்பவரால் இயற்றப்பட்டது. வினா விடை வடிவில் அமைந்த இந்நூல் 53 வெண்பாப் பாடல்களால் ஆனது. இப்பாடல்களில் 31 முதல் 39 வரையிலான ஒன்பது பாடல்களில் சிவபெருமானின் அஞ்செழுத்துத் தாண்டவம் எனும் ஐந்தெழுத்து நடனம் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. அவை;
1. நல்ல தவம் செய்தோர் காணுதற்கு ஏற்றவாறு, நாத அந்த முடிவிலே அஞ்செழுத்தே திருமேனியாகக் கொண்டு ஐயன் ஆடுவான் (31)
2. எட்டும் இரண்டும் உருவான ஆன்மாவிலே, சிவன் சிவாய நம என்னும் திருவெழுத்து அஞ்சாலே, ஆன்மாக்களின் பிறவியற ஆடுவான் (32)
3. உன்னுதற்கரிய தன் திருவடியிலே நகாரமாகவும் கூடும் திருவுந்தியிலே மகாரமாகவும் திருத்தோனிலே சிகாரமாகவும் திருமுகத்திலே வகாரமாகவும் திருமுடியிலே யகாரமாகவும் ஆகஇம் முறையில் நமசிவாய என்னும் அஞ்செழுத்தே திருமேனியாகக் கொண்டு ஐயன் ஆடுவான் (33)
4. டமருகம் ஏந்திய திரு அந்தத்திலே சிகாரமாகவும் ஆர்க்கும் திரு அந்தத்திலே யகாரமாகவும், தீ ஏந்திய திரு அந்தத் திலே நகாரமாகவும், முயலகனை மிதித்த அடியிலே மகார மாகவும் ஆக இம்முறையில் அஞ்செழுத்தே திருமேனியாகக் கொண்டு அம்மை அப்பன் ஆடுவான் (34)
5. ஓம் நல்ல திருவாசியாகவும், அதைவிட்டு நீங்காத அஞ்செழுத்து உள்ளொளியாகவும் இருப்பதைச் செருக்கற்றவர் அறிவர். எழில்மிகு திருவம்பலத்தில் எம்பெருமான் ஆடுவதைக் கண்டவர் இறப்பு பிறப்பு அற்றவராவார் (35)
6. டமருகம் ஏந்திய திரு அந்தத்திலே படைப்பாகவும் தோயும் திரு அந்தத்திலே ஆன்மா காப்பாகவும், தீ ஏந்திய திரு அந்தத்திலே மலமழிப்பாகவும், உறுதியாய் ஊன்றிய திருவடியிலே உலகை மறைக்கும் திரோதனமாகவும், தூக்கிய திருவடியிலே அருள் முத்தியாகவும், ஆக இம்முறையில் முத்தி பஞ்சகிருத்தியமே திருக்கூத்தாக அமையும் (36)
7. டமருகம் ஏந்திய திரு அந்தத்தினாலே மாயையை நீக்கி, தீ ஏந்திய அந்தத்தாலே வல்வினையைச் சுட்டு ஊன்றிய திருவடியினாலே அருளே உலகமாக நிறுத்தி, அன்பால் இன்பக் கடலில் ஆன்மாவை ஐயன் அழுத்துவன். இதுவே அவன் திருக்கூத்துமுறை. (37)
8. பேசா ஞானிகள் திருவருளால் மும்மலத்தை நீக்கி, ஆன்ம போதம் முடிகின்ற இடத்திலே தோன்றுகிற இன்ப வெள்ளத்திலே திளைத்து மகிழ்வார்கள். ஆன்மாக்களைக் காக்க வேண்டும் என்னும், இவ்வன்பையேத் திருமேனியாகக் கொண்டு திருஅம்பலத்தே ஐயன் ஆடுவான் (38)
9. ஒப்பற்ற இறைவன் அஞ்செழுத்து மிகுந்த அன்பே திருமேனியாகக் கொண்டு பரையே திருவம்பலமாகிய இடமாக நின்று, பாதி வரைமகள் காணும் படி அன்பினாலே திருமேனி கொண்டு எழுந்தருளி ஐயன் ஆடியருளுவான். இந்த ஆடலை விரும்பிப் பார்ப்பவர்க்கு மறுபிறவி இல்லை. (39)