காஞ்சிபுரத்தின் சேய் ஆற்று (செய்யாறு) வடகரையில், காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், எலத்தூர், மாதிமங்கலம், பூண்டி, குருவிமலை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்கள் சப்த கரை கண்ட சிவாலயங்கள் என அழைக்கப்படுகின்றன.
இதே போன்று, செய்யாற்றின் தென் கரையில் மண்ட கொளத்தூர், கரைப்பூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம் பூண்டி, தாமரைப் பாக்கம், வாசு தேவம்பட்டு ஆகிய ஊர்களில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்கள் சப்த கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த சப்த கரை கண்ட சிவாலயங்கள் மற்றும் சப்த கைலாயங்கள் தோன்றியது குறித்துச் சொல்லப்படும் கதை ஒன்றிருக்கிறது. அதாவது,
காஞ்சிபுரத்தில் உமையம்மை (பார்வதி) சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, சிவபெருமானின் இடப்பாகம் வேண்டினார். இறைவனும் உமையம்மை முன் தோன்றி, திருவண்ணாமலைக்கு வந்து பெறும்படி அருளினார். இறைவனிடம் இடப்பாகம் பெறும் பொருட்டு திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார், வழியில் வாழைப்பந்தல் என்ற ஊர் அருகே வந்த போது மாலைப் பொழுதாகி விட லிங்க பூசை செய்ய வேண்டுமென முருகனிடம் கேட்டார்.
வாழைப்பந்தல் அருகே முருகன் தனது சக்தி வேலாயுதத்தைக் கையில் எடுத்து எரிந்தார், அந்த வேல் சவ்வாது மலைத் தொடரில் உள்ள ஏழு சிகரங்களில் தவம் செய்த அந்தணர்களான புத்திராண்டன், புருகூதன், போதன், போதவான், பாண்டரங்கன், வாமன், சோமன் ஆகியோரைக் கொன்று மலையைத் துளைத்தது.
அதிலிருந்து நீர் பெருகி ஆறாக வந்தது. சேய் (சேய் = மகன்) தோற்றுவித்ததால் சேய் ஆறு என்றிருந்து, நாளடைவில் செய்யாறு என்று மாறிப்போய விட்டது. தவம் செய்த ஏழு அந்தணர்களை மாய்த்ததால், முருகப்பெருமானுக்குக் கொலைபாதக தீவினை (பிரம்மகத்தி தோசம்) தொற்றிக் கொள்ள, உமாதேவியார் சேய் ஆற்றின் வட கரையில் ஏழு சிவ ஆலயங்களையும், தென்கரையில் ஏழு சிவ ஆலயங்களையும் நிறுவி வழிபட்டால், தோசம் நீங்கும் என்று கூற, அதன்படி செய்திட, முருகப்பெருமானின் தோசம் நீங்கியது எனபது தொன்ம நம்பிக்கை.