இந்து சமயத்தினரால் கோயில்களிலும், மண்டபங்களிலும் விளக்கினை வைத்து நடத்தப்படும் பூசை, திருவிளக்குப் பூசை எனப்படுகிறது. வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பென்று கருதப்படுகிறது. அதே வேளையில், கடலை எண்ணெயில் தீபமிடுதல் தவிர்க்கப்பட வேண்டும். இந்தத் திருவிளக்குப் பூசையானது, விளக்கின் எண்ணிக்கை அடிப்படையில் 108 திருவிளக்குப் பூசை, 1008 திருவிளக்குப் பூசை என வகைப்படுத்தப்படுகின்றன.
சித்திரை மாத நவமியுடன் வெள்ளிக்கிழமை கூடி வரும் நாளில், தேவி ஜோதியாகத் தோன்றி அனைவருக்கும் வரம் அருளும் புவனேஸ்வரியாகக் கன்னி வடிவமாகக் காட்சி தந்த நாளில் சுமங்கலிப் பூசை செய்யப்படுகின்றது. தெய்வத்தைத் திருவிளக்கில் எழுந்தருளச் செய்து பூசை செய்தல் இவ்விரதத்தின் மகிமையாகும். தேவர்கள் ஆணவத்தை அடக்கத் தேவியானவள் பேரொளி வடிவமாகத் தோன்றியதை உபநிடதங்களில் காணலாம். முறையாக இவ்விரதத்தைக் கடைப்பிடித்து ஆலயம் சென்று, அந்தணர் துணை கொண்டு ஆராதித்து, திருவிளக்கை எடுத்து ஈஸ்வரி சந்நிதானத்தில் வலம் வருதல் சகல செளபாக்கியங்களையும் பெறுவதற்கு வழிகாட்டும். இல்லற உறவு புத்திரப் பேறு இனிய வாழ்வுப் பயன்கள் உண்டு.