நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி கடைப்பிடிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நவராத்திரி விரதம் என்பது புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் நுழையும் காலத்தில் சக்தி தேவியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும், தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே, நவராத்திரி விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி நவமி திதி வரையில் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. எனவே, புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கடைப்பிடிக்கப்படும் விரதம், சாரதா நவராத்திரி விரதமாகும்.
மகா சங்காரம் எனும் பேரழிவுக் காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தை உண்டாக்க விரும்பிய போது, இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்த போது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் = அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
* நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
* நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.
* இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத் தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசையைத் தொடங்க வேண்டும்.
கும்பம் வைத்தல்
நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்ய வேண்டும்.
குமாரி பூசை
குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள். முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்பட வேண்டும். பூசிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.
விஜய தசமி
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின் போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும், இது நவமியில் நிகழ்ந்ததாகவும், மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
கன்னி வாழை வெட்டல்
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழக்கமாக இருக்கிறது. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து, அவனை அழிக்க முடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது, அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை அழித்து, அசுரனையும் அழித்தாள் என்பர். இதுவே, நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைக் கொன்ற நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கமாக இருக்கிறது.
நவராத்திரி விரத நியதிகள்
* புரட்டாசி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.
* வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலு வைத்தல் வேண்டும்.
* விரதம் மேற்கொள்வோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு, பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்த பின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
* ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்கு முன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டு நாளும் பகல் ஒரு வேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
* விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப் பண்டங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து, நவமியில் வைத்துள்ள புத்தகம், இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.
* தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.
* இவ்விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும்.
* நவராத்திரியில் ஸ்ரீதேவியைத் (திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் அனைத்து நற்பேறுகளையும் வழங்குவாள் என்பது மட்டுமல்லாமல், வீடுபேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.