சித்தர்கள் என்ற சொல்லிற்கு சித்தத்தை அறிந்தவர்கள் என்று பொருள். சித்-அறிவு. உடம்பிற்குள் 96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை (அறிவியலை) அறிந்தவர்கள் சித்தர்கள். அதை சித்தர் தத்துவங்கள் என்ற பெயரில் அழைத்தனர். மனித உடல் அவரவர் கையால் (உயரத்தில்) எண் சாண் ஆகும். இதை ஔவையார் ‘எறும்பும் தன் கையால் எண் சாண்’ என்கிறார். உயிர்கள் தன் அகலத்தில் நான்கு சாண் அளவு பருமனும் 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 வகையான செயல்கள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. இச்செயல்களை மருத்துவக் கண்ணோட்டமுள்ளவர்கள் அறிவர்.
இன்று நவீன மருத்துவ முறையில் உடற்கூற்றுத் தத்துவங்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்ச் சித்தர்கள் இத்தத்துவங்களை தம் உடலையேச் சோதனைச் சாலையாக்கி அறிந்து, ஆன்மீகப் பெயர்களில் அவற்றை அழைத்துள்ளனர். மனித உடல் இயங்கும் விதத்தை 96 வகையான தத்தவங்களின் அடிப்படையில் சித்தர்கள் பகுத்தனர். அவை,
1. ஆன்ம தத்துவங்கள் - 24
2. உடலின் வாசல்கள் - 9
3. தாதுக்கள் - 7
4. மண்டலங்கள் - 3
5. குணங்கள் - 3
6. மலங்கள் - 3
7. நோய்கள் - 3
8. விகாரங்கள் - 8
9. ஆதாரங்கள் - 6
10. வாயுக்கள் - 10
11. நாடிகள் - 10
12. அவத்தைகள் - 5
13. ஐவுடம்புகள் - 5
1. ஆன்ம தத்துவங்கள் - 24
ஆன்ம தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளை உடையது. அவை,
1. பூதங்கள் - 5 (நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு)
2. ஞானேந்திரியங்கள் - 5 (மெய், வாய், கண், மூக்கு, செவி)
3. கர்மேந்திரியங்கள் - 5 (வாய், கை, கால், மலவாய், கருவாய்)
4. தன்மாத்திரைகள் - 5 (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்)
5. அந்தக்கரணங்கள் - 4 (மனம், அறிவு, நினைவு, முனைப்பு)
1.1 பூதங்கள் - 5
அ) நிலம் உலகம் (மண்) மாந்தன் (எலும்பு, மாமிசம், தோல், நரம்பு, உரோமம்)
ஆ) நீர் உலகம் (நீர்) மாந்தன் (உமிழ்நீர், சிறுநீர், வியர்வை, குருதி, விந்து)
இ) காற்று உலகம் (வாயு) மாந்தன் (மூச்சு, வாயு)
ஈ) வானம் உலகம் மாந்தன் (வான் போல பரந்து விரிந்த மூளை)
உ) நெருப்பு உலகம் (சூரியஒளி) மாந்தன் (பசி, தூக்கம், தாகம், உடலுறவு, அழுகையின்போது உடல்வெப்பம் அதிகரிக்கும்)
1.2 ஞானேந்திரியங்கள் - 5
அ) மெய் (உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை அறியும்
ஆ) வாய் (நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என அறுசுவையறியும்
இ) கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம், நீளம், உயரம், குட்டை, பருமன், மெலிவு என பத்து தன்மையறியும்
ஈ) மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்
உ) செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்
1.3 கர்மேந்திரியங்கள் - 5
அ) வாய் (செயல்) சொல்வது
ஆ) கை (செயல்) கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,ஏற்றல்
இ) கால் (செயல்) நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
ஈ) மலவாய் (செயல்) மலநீரை வெளியே தள்ளுதல்
உ) கருவாய் (செயல்) விந்தையும், சுரோணிதத்தையும், சிறுநீரையும் வெளியே தள்ளுதல்
1.4 தன்மாத்திரைகள் - 5
அ) சுவை சுவையறிதல்
ஆ) ஒளி உருவமறியும்
இ) ஊறு உணர்வறியும்
ஈ) ஓசை ஓசையறியும்
உ) நாற்றம் மணமறியும்
1. 5 அந்தக்கரணங்கள் - 4
அ) மனம் - காற்றின் தன்மை அலைந்துதிரியும்
ஆ) அறிவு - நெருப்பின் தன்மை நன்மை தீமையறியும்
இ) நினைவு - நீரின் தன்மை ஐம்புலன் வழியே இழுத்துச் செல்லும்
ஈ) முனைப்பு - மண்ணின்தன்மை புண்ணிய பாவங்களைச் செய்யவல்லது.
2. உடலில் வாசல்கள் - 9
1. கண்கள் - 2
2. செவிகள் - 2
3. மூக்குத்துவாரங்கள் - 2
4. வாய் - 1
5. மலவாயில் - 1
6. குறிவாசல் - 1
3. தாதுக்கள் - 7
1. சாரம் - (சாறு)
2. செந்நீர் (அரத்தம்)
3. ஊன் (மாமிசம்)
4. கொழுப்பு
5. எலும்பு
6. மூளை
7. வெண்ணீர் (விந்து, சுரோணிதம்)
4. மண்டலங்கள் - 3
1. அக்னி மண்டலம்
2. ஞாயிறு மண்டலம்
3. திங்கள் மண்டலம்
5. குணங்கள் - 3
1. மனஎழுச்சி (களிப்பு, அகங்காரம், போகம், வீரம், ஈகை)
2. மயக்கம் (பற்று, தூக்கம், சம்போகம், திருட்டு, மோகம், சினம்)
3. நன்மை (வாய்மை, கருணை, பொய்யாமை, கொல்லாமை, அன்பு, அடக்கம்)
6. மலங்கள் - 3
1. ஆணவம் (நான் என்ற மமதை)
2. மாயை (பொருட்களின் மீது பற்று வைத்து அபகரித்தல்)
3. வினை (ஆணவம், மாயையினால் வரும் விளைவு)
7. பிணிகள் - 3
1. வாதம்
2. பித்தம்
3. கபம்
8. விகாரங்கள் - 8
1. காமம்
2. குரோதம்
3. உலோபம்
4. மோகம்
5. மதம்
6. மாச்சரியம்
7. துன்பம்
8. அகங்காரம்
9. ஆதாரங்கள் - 6
1. மூலம்
2. தொப்புள்
3. மேல்வயிறு
4. நெஞ்சம்
5. கழுத்து புருவநடு
6. டம்பம் (தற்பெருமை)
10. வாயுக்கள் - 10
1. உயிர்க்காற்று
2. மலக்காற்று
3. தொழிற்காற்று
4. ஒலிக்காற்று
5. நிரவுக்காற்று
6. விழிக்காற்று
7. இமைக்காற்று
8. தும்மல்காற்று
9. கொட்டாவிக்காற்று
10. வீங்கல்காற்று
11. நாடிகள் - 10
1. சந்திரநாடி அல்லது பெண்நாடி
2. சூரியநாடி அல்லது ஆண்நாடி
3. நடுமூச்சு நாடி
4. உள்நாக்கு நரம்புநாடி
5. வலக்கண் நரம்புநாடி
6. இடக்கண் நரம்புநாடி
7. வலச்செவி நரம்புநாடி
8. இடதுசெவி நரம்புநாடி
9. கருவாய் நரம்புநாடி
10. மலவாய் நரம்புநாடி
12. அவத்தைகள் - 5
1. நனவு (ஐம்புலன் வழி அறியப்படும்)
2. கனவு
3. உறக்கம் (சொல்லப்புலப்படாத நித்திரைநிலை)
4. பேருறக்கம் (மூர்ச்சையடைதல்)
5. உயிர்அடக்கம் (ஆழ்மயக்கநிலை)
13. ஐவுடம்புகள் - 5
1. பருஉடல்
2. வளியுடல்
3. அறிவுடல்
4. மனஉடல்
5. இன்பஉடல்
சித்தர்கள் குறிப்பிடும் இந்த 96 தத்துவங்களில் (உடலின் வேதியியலில்) ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் இயக்கம் பாதிக்கும். உதாரணமாக, நீர் ஒருவர் உடலிலிருந்து அதிகமாக வெளியேறக் கூடாது. வெப்பம் அளவாய் இருக்க வேண்டும். அது போல் நாடிகள் சரிவர இயங்க வேண்டும். இது தவிர, மூச்சு விடும் அளவிலும் ஒழுங்குமுறை இருக்க வேண்டும்.
மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21600 என்றும், இது கூடுவதும் குறைவதும் என்று நிலை மாறினால் ஆயுள் குறையும் என்றும், 21600 முறை தினமும் மூச்சுவிடக்கூடிய மனிதன்1 120 ஆண்டுகள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர். முறையற்ற வாழ்க்கைப் போக்கை மேற்கொள்பவர்களுக்கு சுவாசம் அதிகரித்து, ஆயுள் குறைகிறது என்கிறார் திருமூலர் (திருமந்திரம்-729). முறையான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு நடுமூச்சைச் சார்ந்து சுவாசிக்கக் கற்றால் 166 ஆண்டுகள் வரையிலும் வாழலாம் என்கிறார் இப்பாடலில்.
முதுமையில் அல்லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணித்துள்ளனர். மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும், காது கேட்காவிட்டால் 7 நாளிலும், நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும், மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும், இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும் மரணம் வரலாம் என்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடலறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்துள்ளார்கள்.