பழனி முருகன் கோவில் தலபுராணத்தில் இடும்பனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றுவித்த இடும்பாசுரான், முருகனால் அழிக்கப்பட்டதை அறிந்து மனைவி இடும்பியுடன் வானவாசம் சென்றான். அவ்வழியில் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும் இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் நீ விரும்பும் பேற்றை அடைவாய் எனக் கூறினார்.
இடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்குச் சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து, மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் தம் தவவலிமையால் பாம்புகளால் உறி போலச் செய்து தோளில் வைத்து காவடி எடுப்பது போன்று பொதிகை நோக்கிச் சென்றான். பழனியை அடைந்த போது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அவற்றைக் கீழே இறக்கி வைத்தான்.
பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி சொன்னான். முருகன் விலகாமல் இருக்கவே, இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்த போது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர் பெற்றெழச் செய்தார்.
இடும்பன் தான் இருமலைகளையும் எடுத்து வந்தது போன்று, காவடி எடுத்து வரும் அடியார்களுக்கு அருளும்படியும் கேட்டுக் கொண்டான். இக்கதையின்படியே, முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுகின்றனர்.