இந்து வேதத்தின் படி, துளசி செடியானது "பிருந்தா" (பிருந்தா; துளசியின் இணைச்சொல்) என்ற பெண்ணாவாள். அவள் சலந்தர் என்ற அசுர மன்னனை மணந்தாள். அவள், விஷ்ணு மீதுள்ள பக்தியாலும், ஈடுபாட்டாலும் யாராலும் வெல்ல முடியாதவளாக ஆனாள். தேவர்களாலும் சலந்தரைத் தோற்கடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் மும்மூர்த்திகளில் பாதுகாவலரான விஷ்ணுவிடம் இதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சலந்தர் போருக்குப் புறப்படும் போது, பிருந்தா அவனது வெற்றிக்கு வேண்டிக் கொண்டாள். அதே சமயம், விஷ்ணு சலந்தர் போல மாறுவேடமிட்டு அவளை நாடினார். அவள் வந்திருப்பது சலந்தர் என எண்ணி விஷ்ணுவின் பாதங்களைத் தொட்டாள். அவளது உறுதி குழைந்து போனதால், சலந்தர் தனது சக்தியை இழந்து சிவனால் கொல்லப்பட்டான். மேலும், அவனது தலை பிருந்தாவின் அரண்மனையில் விழுந்தது. இதைப் பார்த்த அவள், தன்னுடன் இருப்பது தன் கணவன் அல்ல, விஷ்ணு என்பதை உணர்ந்தாள். அதனால் கோபடைந்த பிருந்தா விஷ்ணுவை சாலிகிராமமாக மாறவும், அவரது மனைவி லட்சுமியைப் பிரிந்து செல்லவும் சபித்தாள். இதனாலதான் தனது இராமாவதாரத்தில், அசுர மன்னன் இராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவி சீதையிடமிருந்து பிரிக்கப்பட்டார். பிருந்தா பின்னர் கடலில் மூழ்கி இறந்தாள். மேலும் தேவர்கள் (அல்லது விஷ்ணுவே) அவளது ஆன்மாவை ஒரு தாவரத்திற்கு மாற்றினர். அது பின்னர் துளசி என்று அழைக்கப்பட்டது.
அடுத்தப் பிறவியில் பிருந்தாவை மணக்க விஷ்ணுவின் ஆசீர்வாதத்தின்படி, விஷ்ணு - சாளகிராமம் வடிவில் - பிரபோதினி ஏகாதசி அன்று துளசியை மணந்தார். இந்த நிகழ்வின் நினைவாக, துளசி விவாகம் நடத்தப்படுகிறது.
துளசி விவாகம் அல்லது துளசி கல்யாணம் என்பது ஒரு இந்து சமயப் பண்டிகையாகும். இதில் சாளக்கிராமம் அல்லது நெல்லி மரக்கிளையுடன் துளசிக்கு சம்பிரதாயத் திருமணம் நடைபெறுகிறது. துளசி விவாகமானது இந்து சமயத்தில் பருவமழையின் முடிவையும் திருமணப் பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. பிரபோதினி ஏகாதசி (இந்து மாதமான கார்த்திகை வளர்பிறையின் பதினைந்து நாட்களில் பதினொன்றாவது அல்லது பன்னிரண்டாவது சந்திர நாள்), கார்த்திகை பூர்ணிமா (மாதத்தின் முழு நிலவு) ஆகியவற்றுக்கு இடையே எந்த நேரத்திலும் இந்தச் சடங்கு விழா நடத்தப்படுகிறது. பிராந்திய ரீதியாக இந்நாள் மாறுபடுகிறது.
வைணவப் புராணக்கதை துளசியை சமுத்திர மந்தனத்துடன் தொடர்புப்படுத்துகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் அமுதத்தை எடுக்க முற்படுகின்றனர். கடலிலிருந்து தன்வந்திரி அமிர்தத்துடன் எழுந்தார். இறுதியில் தேவர்கள் வெற்றி பெற்ற போது விஷ்ணுவிற்கு ஏற்பட்ட சந்தோச மிகுதியால் ஏற்பட்ட கண்ணீர்த் துளியானது துளசிச் செடியை உருவாக்கியது. இது தவிர, வேறு இதிகாசக் கதைகளும் காணப்படுகின்றன. இந்த நாளில் இலட்சுமி ஒரு அரக்கனைக் கொன்று, பூமியில் துளசிச் செடியாக இருந்ததாக மற்றொரு சிறு புராணக்கதை கூறுகிறது. துளசியானது, இந்து சமயத்தில் ஒரு தெய்வமாகப் போற்றப்படுகிறது. சில சமயங்களில் விஷ்ணுவின் மனைவியாகவும் கருதப்படுகிறது. "விஷ்ணுப்ரியா", "விஷ்ணுவிற்கு பிரியமானது" எனவும் அழைக்கப்படுகிறது.