நாக பஞ்சமி என்பது நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்தத் தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்கின்றார்கள். ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி திதியை நாகப் பஞ்சமி என்று அழைக்கின்றனர்.
ஒரு கிராமத்தில் ஒரு பெண் தன்னுடைய ஏழு அண்ணன்மார்களுடன் வசித்து வந்தாள். வயல் வேலை செய்யும் அவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லுதல் இவள் வழக்கம். அவ்வாறு செல்லும் போது, ஒரு நாள் கருடனொன்று பாம்பினைக் கால்களால் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனது. அந்தக் கழுகு பாம்பினை இறுகப் பிடித்திருந்ததால், அதிக வலியில் பாம்பு விசத்தினைக் கக்கியது. அவ்விசம் தங்கை எடுத்துச் சென்ற உணவுப் பொருளில் விழுந்தது. அதை உண்ட ஏழு அண்ணன்மார்களும் இறந்தனர். அவள், அப்பா அம்மா என்று அழைத்ததும், அங்கு வந்த சிவபெருமான் பார்வதி தம்பதியினர், நடந்ததை விளக்கி, நாகப் பஞ்சமி விரதத்தினை இருக்கும்படி சொன்னார்கள். அந்தப் பெண்ணும் விரதமிருந்து ஏழு அண்ணன்களையும் உயிர்பிக்கக் காரணமாக இருந்தாள்.
பாம்பினால் இறந்த தன் அண்ணன்களை இறை அருளாலால் உயிர் பெற வைத்த நாள் என்பதால், இந்நாளில் பூசை செய்தால், கணவனுக்கும், சகோதரர்களுக்கும் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதன் தொடர்ச்சியாகவே, நாக பஞ்சமி வழிபாடு செய்யப்படுகிறது.