இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இசுலாம் சமயம்

நபிகள் நாயகம் வரலாற்று நிகழ்வில் தொடர்புடையவர்கள்


நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சிகளில் தொடர்புடையோர் எண்ணற்றோர். அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை இங்கே காணலாம். வாசகர்களுக்கு ஓரளவு பயன் தரும்.

அப்துல் முத்தலிப்

குறைஷித் தலைவர். ஹாஷிமுக்கும், யத்ரிபில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த ஸல்மாவுக்கும், கி.பி.497ல் மக்காவில் பிறந்தார், யத்ரிபில் தம் தாயிடமே வளர்ந்தார். பின்னர், இஸ்மாயில் (அலை) அவர்களின் வில் அம்பும், கஃபாவின் திறவு கோலும் இவரிடம் ஒப்புவிக்கப்பட்டன. தண்ணீர்ப் பஞ்சத்தின் போது, கனவில் அறிவுறுத்தப்பட்டு, ஜம்ஜம் கிணற்றைத் தூர் எடுத்துத் தோண்டியவர். இவருக்கு மொத்தம் பதினான்கு ஆண் மக்களும், ஏழு பெண் மக்களும் பிறந்தனர். நபிகள் நாயகம் அவர்கள் தந்தை அப்துல்லாஹ், இவருடைய குமாரர்களில் ஒருவர். நாயகம் அவர்களை இளமையில் வளர்த்தவர் இவரே.

அப்துல்லாஹ்

இவர் நாயகம் அவர்களின் தந்தை. இவரும் ஸுபைரும், அபுதாலிபும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். இவர் கி.பி.545-வது ஆண்டில் பிறந்தவர்.

அப்துல்லாஹ் இப்னு உபை

மதீனாவில் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஒளஸ்களுக்கும் கஸ்ரஜ்களுக்கும் நிகழ்ந்த புஆத் போரில் இவர் நடுநிலைமை வகித்தார். அதனால் இரு கட்சிகளிலும் இவருக்குச் செல்வாக்கு இருந்தது. இரு கட்சியினரும், இவரைத் தங்களுடைய அரசனாக முடிசூட்ட முயன்று தாமதமாயிற்று. நாயகம் அவர்கள் வந்த பின்னர், இவருடைய செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அதனால் அவர்கள் மீது வெறுப்புக் கொண்டார். வெளியில் காட்டிக் கொள்ளாமல் நட்புறவு போல் காட்டினார். பத்ருப் போருக்குப் பின் தம் நண்பர்களுடன் இஸ்லாத்தில் இணைந்தார். உஹத் போரில் ஒத்துழைக்காமல், துரோக சிந்தையால் பின் வாங்கி விட்டார். தபூக் போரில் மக்கள் சேராதவாறு மறைமுகமாகச் சூழ்ச்சி செய்தார். மரணத் தறுவாயில் தமக்குப் போர்த்த மேலங்கியும், தமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வேண்டும் எனவும் பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். பெருமானார் அவ்வாறே நிறைவேற்றினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஜஷ்ஹ்

இவர் பெருமானார் அவர்களின் அத்தை உமைமாவின் மகன், இவருடைய சகோதரி ஜைனப்பை பெருமானார் பின்னர் மணஞ் செய்து கொண்டனர். குறைஷிகள் யுத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை அறிந்து வருமாறு இவரையும், வேறு சிலரையும் பெருமானார் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களுடைய கட்டளைக்குப் பின்னர், பல பதவிகளை ஏற்றுத் திறமையாகச் செயல்பட்டனர்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா

மதீனாவிலுள்ள கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிறந்த வீரர். கல்வி அறிவுள்ளவர். இவரைப் பெருமானார் தங்களுடைய எழுத்தராக நியமித்தனர். பெருமானார் மதீனா வந்த புதிதில், அவர்களை வரவேற்று, அருளுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். போரில் தலைமை வகித்து, வீரப் போர் செய்து உயிர் நீத்தார்.

அப்துல் ரஹ்மான் இப்னு அவ்பு

முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர்களுள் இவரும் ஒருவர். மதீனாவில் குடியேறினார். இவரிடம் செல்வம் குவிந்து கொண்டிருந்தது. வாரி வாரி வழங்கினார். பத்ரு, உஹத் போர்களில் கலந்து வீரப் போர் புரிந்தவர். நபிகள் நாயகம் அவர்கள் இவரிடம் மிக அன்பு கொண்டிருந்தார்கள். நபிகள் பெருமானார் பிறந்த போது, முதன்முதலில் அவர்களைக் கையிலேந்தும் பாக்கியம் பெற்றவர் இவருடைய அன்னையாராவர். பின்னர் உத்மான் (ரலி) மூன்றாவது கலீபாவாகத் தேர்வு பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்.

அபுல் ஆஸ்

இவர் கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலாவின் மகன். இவருக்கு நாயகம் அவர்கள், தங்கள் மகள் ஜைனபை மணஞ் செய்து வைத்தார்கள். இவர் குறைஷிகளின் போர் அணியில் நின்று சிறைப்பட்டார். நாணயமானவர். பின்னர் மதீனா வந்து இஸ்லாத்தைத் தழுவினார்.

அபுல் பஸீர்

முஸ்லிம்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட ஹதைபிய்யா உடன்படிக்கையைத் தம் நடவடிக்கைகளினால், குறைஷிகளே வாபஸ் பெறக் கோரும் அளவுக்கு வீர சாகலங்கள் செய்த அஞ்சா நெஞ்சத்தினர்.



அபூ அய்யூப் அன்ஸாரி

மதீனாவில் வாழ்ந்தவர். இவருடைய இல்லத்திலேதான் பெருமானார் அவர்கள் தற்காலிகமாகத் தங்கினார்கள். அவர்களுக்கு உணவு அளித்து, மீந்ததை இவரும் மனைவியும் உண்பார்கள். பெருமானார் அவர்கள் நிகழ்த்திய போர்கள் அனைத்திலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

அபூ ஆமீர்

மதீனாவில் வாழ்ந்தவர். பெருமானார் மதீனா வந்து பெற்ற மதிப்பைக் கண்டு, பொறாமைப்பட்டு மக்காவுக்கு ஓடினார். பெருமானார் தீர்க்க தரிசனமாகக் கூறியதற்கொப்ப இவர் தாயிபுக்கு ஓடி, பிறகு ஸிரியாவில் அகதியாகத் திரிந்து இறந்தார்.

அபூ தல்ஹா

இவர் மணக்க விரும்பிய உம்மு ஸலீம், “நீர் இஸ்லாத்தைத் தழுவினால்தான் மணப்பேன்” என்று கூறியதற்கு இணங்க, இவர் இஸ்லாத்தைத் தழுவினார். நாயகம் அவர்கள் நிகழ்த்திய எல்லாப் போர்களிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். உஹத் போரில், பெருமானார் அவர்களை எதிரிகள் சூழ்ந்த சமயம், அரண் போல் காத்து வீரமாகப் போராடினார். அம்புகள் தாக்கி இவருடைய சில விரல்கள் உடைந்தன. இவரைப் பற்றிப் பெருமானார் அவர்கள், “சுவர்க்க வாசிகளை இவ்வுலகில் காண விரும்புவோர் அபூ தல்ஹாவைக் கண்டு கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

அபூ தாலிப்

இவரும், நாயகம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். அப்துல்லாஹ் மறைவுக்குப் பின், பெரிய தந்தையான இவர் நாயகம் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றவர். நேர்மையும், பொறுப்பும், அன்பும் மிக்கவர்.

அபூபக்கர்

செல்வாக்குள்ள குறைஷி குடும்பத்தில் பிறந்தவர். பெருமானார் அவர்களுக்கு மூன்று வயது இளையவர். எப்பொழுதும் பெருமானாருடனேயே இணைந்து இருந்தவர். பெருமானார் இறைவனுடைய தூதர் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். துணிவுள்ளவர். இஸ்லாத்துக்காக, அவர் அனுபவித்த துன்பங்கள் பல. தம் உயிரையே இழக்கத் தயாரானவர். ஆயிஷா நாச்சியாரின் தந்தையார். தங்களுக்குப் பிறகு இஸ்லாமிய அரசின் தலைவராக இருக்குமாறு பெருமானார் தேர்ந்தெடுத்த பெருமை பெற்றவர். இவர்கள் வசித்த இடம் மதீனாப் பள்ளியுடன் இணைக்கப்பட்டு, “இது அபூபக்கர் வீடு’ என அரபியில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் 63-வது வயதில் உயிர் நீத்தார்கள்.

அபூ லஹப்

அப்துல் முத்தலியின் மகன். பெருமானார் அவர்களுக்குப் பெரிய தந்தை. செல்வந்தர். கல் நெஞ்சம் உடையவர். பெருமானார் அவர்களை இழித்தும், பழித்தும் கூறி எதிர்த்து வந்தார். அவருடைய மனைவியும் அவ்வாறே நடந்து, இறுதியில் வறுமையில் வாடி இறந்தார். அபூலஹபும் தொற்று நோயால் இறந்தார். இவருடைய மக்கள் எவரும் இவரை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

அபூ ஜந்தல்

இவர் சுஹைல் இப்னு அப்ருவின் மகன். குறைஷிகளின் கொடுமை தாளாமல், ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பெருமானார் அவர்களிடம் ஓடி வந்தார். பிறகு அவர் தந்தையிடமே, அவர் ஒப்புவிக்கப்பட்டார்.

அபூ ஜஹ்லு

மக்ஸூம் கோத்திரத்தில் பிறந்தவன். இஸ்லாத்துக்கும், நாயகம் அவர்களுக்கும் பல கொடுமைகள் புரிந்தவன். பத்ருப் போரில் வெட்டி வீழ்த்தப்பட்டான். இவனுடைய சகோதரர் ஹாரித், பெருமானார் அவர்களின் தோழர்களில் ஒருவராக இருந்தார். இவன் மகன் இக்ரிமா பின்னர் இஸ்லாத்தைத் தழுவி, இஸ்லாத்துக்காகப் போர் புரிந்தார்.


அபூ ஸுப்யான்

பனூ ஹாஷிம்களுக்கு விரோதமான உமையா கோத்திரத்தில் பிறந்தவர். பத்ருப் போருக்குப் பின் குறைஷிகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு இவருடையதாயிற்று. இவருடைய மனைவி ஹிந்தாவின் தூண்டுதல் வேறு. இவருடைய எதிர்ப்பு முயற்சிகள் யாவும் தோல்வியுற்றன. அப்பாஸ் அவர்களினால் அபயம் அளிக்கப்பட்டு, நாயகம் அவர்களின் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவினார். அதன்பின், இவருக்குப் பல பதவிகள் அளிக்கப்பட்டன. பெருமானார் அவர்களின் மனைவி உம்மு ஹபீபா இவருடைய மகளாவார். இவர் மரணத் தறுவாயில் உள்ள போது அருகிலுள்ளோரிடம், ”என் பிரிவுக்காக நீங்கள் அழ வேண்டாம். நான் இஸ்லாத்தைத் தழுவிய பின், யாதொரு பாவமும் செய்ததில்லை” என்று கூறினார். தம்முடைய 88-வது வயதில் மதீனாவில் இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.

அபூ உபைதா

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கடுமையான விரோதியாக இருந்து, அபூபக்கர் (ரலி) தூண்டுதலால் இஸ்லாத்தைத் தழுவினார். பத்ருப் போரில் தம் தந்தையை எதிர்த்துப் போரிட்டுக் கொன்றார்.

அபூ லுபாபா

ஒளஸ் கோத்திரத்தின் தலைவர். யூதர்களின் கோட்டையை முற்றுகையிட்ட போது, அவர்கள் கேட்டுக் கொண்டபடி சமாதானப் பேச்சு வார்த்தைக்காக பெருமானார் அவர்கள் இவரை அனுப்பி வைத்தார்கள்.

அப்பாஸ்

அப்துல் முத்தலிபின் மகனான இவர் மக்காவில் பிறந்தவர். நாயகம் அவர்களை விட, இரண்டு வயது மூத்தவர். மக்கா வரும் யாத்திரிகர்களுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பு இவர்களுடையதாக இருந்தது. இஸ்லாத்தை இவர் ஆதரித்த போதிலும் அதை வெளிப்படுத்தவில்லை. வற்புறுத்தலால், பத்ருப் போரில் குறைஷிகள் சார்பாகக் கலந்து சிறைப்பட்டார். பின்னர் பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவி, மக்கா சென்று குறைஷிகளின் நடவடிக்கைகளை இரகசியமாகத் தெரிவித்து வந்தார். அவர் மைத்துனி மைமூனாவை பெருமானார் அவர்களுக்கு மணமுடித்து வைத்தார். ஹுனைன் போரில், பெருமானார் இவர்கள் அருகில் நின்று காத்தனர். மக்கா வெற்றியை, இரத்தம் சிந்தாத வகையில், இவர்கள் மூலழாக ஆக்கி அருளுமாறு இறைவனை இறைஞ்சினார். அபூஸுப்யானுக்குப் பெருமானார் அவர்களிடம் அபயம் பெற்றுத் தந்த பெருமை இவர்களுடையதே. மதீனாப் பள்ளிவாசலை விரிவுபடுத்துவதற்காகத் தம் வீட்டை அன்பளிப்பாக வழங்கினார்.

அம்ரு இப்னு ஆஸ்

இவர் பெருமானார் அவர்கள் மீது வசை கவிகள் பாடியவர். அகழ்ப் போருக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவினார்.

அகீல்

(உகைல்) அபூதாலிபின் இரண்டாவது மகன். இவர் சகோதரர் அலியை விட இருபது வயது மூத்தவர். தந்தையின் பிரியத்துக்கு உரியவர். பத்ருப் போரில் குறைஷிகளின் அணியில் நின்று போர் புரிந்தார். இவருக்கும் அலிக்கும் கருத்து வேறுபாடு உண்டு. பின்னர் இவர் முஸ்லிமானார்.

அர்க்கம்

இவர் கண்ணியமான மக்ஸும் கிளையைச் சேர்ந்த பெரிய செல்வந்தர். இவருடைய விசாலமான இல்லம் இஸ்லாத்தின் செயலகமாக இருந்தது. இயன்ற எல்லா உதவிகளையும் செய்தார். நாயகம் அவர்கள் அந்த வீட்டில் இருந்து ஆலோசனை நடத்தினார்கள். முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்தினார்கள்.

அலி

பெருமானார் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் நான்காவது மகன். இளம் பருவத்திலியே இவர் பெருமானார் அவர்களிடம் ஒன்றியவர். இளைஞர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர். துணிவும், தியாக உள்ளமும் கொண்டவர். பாத்திமா (ரலி) அவர்களை மணம் செய்து கொண்டவர்.

அதீ

வள்ளல் ஹாத்தியின் மகன். ஸப்ஃவானா, அதீயின் தங்கை. அதீ கிறிஸ்துவக் கூட்டத்துக் தலைவராக இருந்து ஸிரியாவுக்கு ஓடி விட்டார். ஸப்ஃவானா சிறை பிடிக்கப்பட்டார். பெருமானாரிடம் தம் தந்தையைப் பற்றிக் கூறி, மன்னிப்புப் பெற்றார். அதீயையும் கூட்டி வந்து இருவரும் இஸ்லாத்தைத் தழுவினர்.

அன்ஸாரிகள்

மக்காவிலிருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கு மதீனாவில் வாழ்ந்தவர்கள் ஆதரவு அளித்தார்கள். அதனால், அவர்களுக்கு அன்ஸாரிகள் - உதவியாளர்கள் எனப் பெயர் வழங்கலாயிற்று.

அனஸ் இப்னு மாலிக்

இவர் மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை, இவரை நர்யகம் அவர்களிடம் ஒப்படைத்தார். பத்து ஆண்டுகள் வரை ஊழியத்தில் இருந்து, பல போர்களில் கலந்து கொண்டார்.103 வயது வரை வாழ்ந்தார்.

ஆயிஷா

அபூபக்கர் அவர்களின் மகளார். கதீஜாப் பிராட்டியாரின் பிரிவுக்குப் பின் பெருமானார் அவர்களுக்குத் தொண்டு புரிவதற்காக, அபூபக்கர் தம் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

இக்ரிமா

இவர் இஸ்லாத்தின் பரம விரோதியான அபூஜஹ்லின் மகன். இவரும் தந்தையைப் போலவே விரோதியாகவே இருந்தார். பத்ருப் போரில் முஸ்லிம்களை எதிர்த்தவர். மக்கா வெற்றியின் போது தப்பி ஓடியவரை, இவர் மனைவி அழைத்து வந்து, பெருமானாரிடம் மன்னிப்புப் பெறச் செய்தார். இக்ரிமா இப்னு அபீஜஹ்ல் என்னும் பெயரால் இவரை அழைப்பதை, இவர் விரும்பவில்லை. பின்னர் இவர் யர்மூக் போரில் வீர மரணம் அடைந்தார்.

இப்னு முகைறா

வலீத் இப்னு முகைறா. இவர் மக்காவில் பிரபலமான மக்ஸூம் கோத்திரத்தில் பிறந்தவர். செல்வமும், செல்வாக்கும் பெற்றவர் இவர். “பெருமானார் சிறந்த நாவன்மை மிக்கவர்” என்று கூறினார். இவருடைய தலைமையில் குறைஷிகள் கூடித்தான் அவர்களைப் பற்றி வெளியூரார் கேட்டால் என்ன கூறுவது என்று முடிவு செய்தனர். இவருடைய பத்து மக்களில் காலித், வலித், ஹிஷாம் ஆகிய மூவரே இஸ்லாத்தைத் தழுவினர்.

உத்பா இப்னு ரபீ ஆ

குவைஷித் தலைவர்களில் ஒருவர். இவருடைய மகள் ஹிந்தாவை அபூஸூப்யான் மணமுடித்திருந்தார். இவருடைய மகன் ஹூதைபா இஸ்லாத்தைத் தழுவியிருந்தார். இவர் குறைஷிகளின் சார்பாக, பெருமானார் அவர்களிடம் சென்று, பொருள், புகழ், பேண ஆசை காட்டி, மனதைத் திருப்ப முயன்றார். ஆனால், இறுதியில் மனமாற்றத்தோடு திரும்பினார். அதனால், குறைஷிகளின் ஏளனத்துக்கு ஆளானார். முன் ஒரு சமயம் பெருமானாருக்குத் திராட்சைப் பழங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

உத்மான் இப்னு அப்பான்

உமைய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த ஹல்ரத் உத்மான், பெருமானாரை விட ஆறுவயது இளையவர். பெரும் செல்வந்தர். உமறுல் பாரூக் (ரலி) அவர்களுக்குப் பின் கலிபாவானார்கள். நபிகள் பெருமானாரின் திருமகளார் இவரைத் திருமணம் செய்தவர்கள்.

உத்மான்

வல்ஹாவின் மகன். அவர் மாண்டதும், இவர் கொடி பிடித்தார். ஹம்ஸா வாளால் வீசியதும், இவரும் வீழ்ந்தார்.

உமர்

அதீ கிளையைச் சேர்ந்த கத்தாபின் மகன். அபூஜஹ்லின் பரிசு அறிவிப்பை ஏற்று, நாயகம் அவர்களைக் கொலை செய்ய, உருவிய வாளுடன் சென்றார். வழியில் தம் சகோதரியின் வீட்டுக்குச் சென்று, மனமாற்றம் பெற்றார். பின்னர், பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவினார். அது முதல், இஸ்லாமிய வரலாற்றில் புதுத்திருப்பம் ஏற்படலாயிற்று.

உம்மு அமாரத்

இஸ்லாத்தைத் தழுவிய அன்ஸாரிகளில் ஒருவர். இவரும், இவருடைய கணவரும், இரண்டு ஆண் மக்களும் உஹத், கைபர், ஹுனைன் முதலிய போர்களில் கலந்து வீரப் போர் புரிந்தனர். போரில் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் வழங்கி, காயத்துக்குச் சாம்பல் தடவினர். நபிகளாரின் பாராட்டுப் பெற்றவர். இவருடைய குடும்பத்தார் அனைவரும் போரில் வீர மரணம் எய்தினர்.

உம்மு ஹகீம்

இவர் இஸ்லாத்தின் விரோதியாயிருந்த இக்ரிமாவின் மனைவி. தப்பி ஓடிய கணவரை அழைத்து வந்து, பெருமானாரின் மன்னிப்பைப் பெற்றவர்.

உர்வத் இப்னு மஸ்வூத்

இவர் அபூஸூப்யானின் மருகர். தாயிபிலுள்ள தகீப்களின் தலைவர். குறைஷிகளின் சார்பாகப் பெருமானார் அவர்களிடம் தூது போய், அவர்களுக்கு உள்ள பெருமையை அறிந்து வந்தவர். மக்கா வெற்றிக்குப் பின் மதீனா வந்து இஸ்லாத்தைத் தழுவினார். தம் ஊரான தாயிபுக்குச்சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டார். அவர் உயிருக்கு அபாயம் வருமென்று பெருமானார் தடுத்தார்கள். ஆனால் ஆர்வம் மேலிட்டால், தம் பணியைச் செய்ய தாயிபு சென்றார். அங்கேயே பகைவர்கள் அவரை அம்பெய்திக் கொன்று விட்டனர்.

கஃப் இப்னு மாலிக்

இவர் கஸ்ரஜ் கோத்திரத்தினர். இஸ்லாத்தைத் தழுவியவர். இஸ்லாமியக் கவிஞர்களில், மூன்றாவது இடத்தைப் பெற்றவர். பெருமானார் அவர்களால் சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டு வருந்திக் கண்ணீர் வடித்து, பிறகு மன்னிப்புப் பெற்றவர்.

கத்தாப்

குறைஷிகளின் ஒரு முக்கிய கோத்திரமான அதீ கிளையைச் சேர்ந்தவர்.

கதீஜா

மக்காவில் குறைஷி கோத்திரத்தில் தோன்றியவர். பெரும் செல்வந்தர். அவருடைய வியாபாரப் பொருள்களைப் பெருமானார் விற்பனை செய்து இலாபத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர் இரு முறை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார். முந்திய கணவன்மார்கள் இருவரும் இறந்து விட்டனர். எத்தனையோ குறைஷித் தலைவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தனர். அவர் விரும்பவில்லை. நாயகம் அவர்களின் கண்ணியம், நேர்மை, சொல் உறுதி ஆகியவற்றை அறிந்து அவர்களை மணந்து கொண்டார். தம்முடைய செல்வத்தைப் பெருமானார் அவர்களின் பொறுப்பிலே ஒப்படைத்து, வாரி வழங்கினார். இன்முகத்தோடு இல்லறம் நடத்தினார். அவர்களுக்கு காசீம், அப்துல்லாஹ், தாஹிர் ஆகிய மூன்று ஆண் மக்களும், ஸைனப், ருகையா, உம்மு குல்தூம், பாத்திமா ஆகிய நான்கு பெண்மக்களும் பிறந்தனர். ஆண்மக்கள் மூவரும் இளம் பருவத்திலேயே இறந்துவிட்டனர். பிராட்டியார், பெருமானார் அவர்களுடன் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து, தம் 64-வது வயதில் இறப்பெய்தினர்.


காலித் இப்னு வலீத்

குறைஷிக் குடும்பத்தினர். உஹத் போரில் போர் புரிந்தார். பின்னர், மதீனா சென்று பெருமானார் அவர்களின் கரம் பற்றி இஸ்லாமாகி, மன்னிப்புப் பெற்று, அயல் நாடுகளுக்குத் தலைமை வகித்துச் சென்று வெற்றி பெற்றார். போரைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்தாதவர்.

ஸபிய்யா நாச்சியார்

நாயகம் அவர்களின் மாமி: ஹம்ஸாவின் தங்கை.

ஸஅத் இப்னு முஆத்

இவர் மதீனாவில் ஒளஸ் கோத்திரத் தலைவர். இஸ்லாத்தைத் தழுவியவர். யூதர்களுடைய துரோகத்துக்கு வருந்தி, அவர்களுடைய வேதக் கட்டளையை அனுசரித்து, சமாதானத் தீர்ப்பு வழங்கினார்.

ஸபிஃய்யா

இவர் தந்தை யூதக் கிளையின் தலைவர். கைபர் போரில் இவருடைய தந்தையும் கணவரும் இறந்தனர். ஆதரவற்று இருந்த இவரை, பெருமானார் மணந்து கொண்டனர். இதனால், யூதர்களின் பகைமை மாறும் எனக் கருதினார்கள்.

ஸல்மான் பார்ஸி

இவருடைய தந்தை அக்னியை வணங்குபவர். அவர் கிறிஸ்துவ வணக்க முறையால் கவரப்பட்டார். கிறிஸ்துவப் பாதிரி ஆதரவில் இருந்தார். அவர் இறந்ததும், அவர் கூறியபடி நபிகள் நாயகத்தைத் தேடி வந்தார். வழியில் கல்பிக் கூட்டத்தினர் இவரை, ஒர் யூதரிடம் அடிமையாக விற்று விட்டனர். 300 பேரீச்சம் நாற்றுகளையும், 40 அவுன்ஸ் தங்கத்தையும் பெருமானார் கொடுத்து இவரை மீட்டார். அகழ்ப் போரில் இவருடைய ஆலோசனைப்படியே அகழ் வெட்டினர். பெருமானார்க்கு இவரிடம் பிரியம் அதிகம்.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்

இவர் பெருமானார் அவர்களின் மாமி மகள்: (அதாவது அப்துல் முத்தலிபின் பேத்தி) அடிமையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஸைதுக்குப் பெருமானார் இவரை மணம் செய்து வைத்தனர். ஓர் ஆண்டுக்குப் பின், இவர்கள் மணவாழ்க்கை இன்பகரமாக இல்லாததால், மண விலக்குச் செய்து கொண்டனர். அதன்பின், ஸைனபைப் பெருமானார் அவர்கள் மணந்து கொண்டார்.

ஸுராக்கா

முழுப்பெயர் ஸுராக்கா இப்னு மாலிக். பெருமானார் அவர்களும், அபூபக்கரும் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்ற போது, பரிசு பெறுவதற்காக அவர்களைத் தேடிச் சென்றவர் இவர். ஹுனைன் போருக்குப் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார்.

ஸுபைர் இப்னு அவ்வாம்

இவர் கதீஜா (ரலி) அவர்களின் சகோதரர். அவ்வாமுக்கும் ஸ்பிய்யாவுக்கும் மகனாவார். பல போர்களில் கலந்து கொண்டு வீரப் போர் புரிந்தவர். அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளார் அஸ்மாவைத் திருமணம் செய்தவர்.

ஸுபைர்

கதிஜாப் பிராட்டியாரின் சகோதரர் மகன். இவர், இருவரை அழைத்துக் கொண்டு கஃபாவுக்குச் சென்று, பகிஷ்கார அறிவிப்பைக் கிழித்தெறிந்து விட்டுப் பெருமானார் முதலானவர்களைப் பள்ளத்தாக்கிலிருந்து மீட்டு வந்தார்.

சுஹைல் இப்னு அம்ரு

இவர் குறைஷித் தலைவர்களில் ஒரு அறிவாளி. பத்ருப் போரில் கலந்து கொண்டு சிறை பிடிக்கப்பட்டு, இழப்புத் தொகை கொடுத்து மீண்டவர். பின்னர், பெருமானார் அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உடன்படிக்கை செய்து கொள்வதற்காக குறைஷிகளின் சார்பாக வந்த தூதர். பிறகு இவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

ஸௌதா பின்த் ஸம்ஆ

இவரும், இவர் கணவரும் முஸ்லிமாகி, அபிசீனியா சென்றனர். அங்கே கணவர் இறந்து விட்டார். இவருடைய திக்கற்ற விதவை நிலையைக் கண்டு, பெருமானார் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்.

தல்ஹா

குறைஷிகள் அணியில் உஹத் சண்டையில் கொடி பிடித்தவர். அவர் சவால் விட்டதன் காரணமாக, அலியின் வாளுக்கு இரையானார்.

துபைல் இப்னு அம்ர்

மக்காவின் சுற்றுப்புறத்தில் வாழ்ந்து வந்தவர். இவர் மக்காவுக்கு வந்த போது பெருமானார் அவர்கள் ஒதித் தொழுததைக் கேட்டு, உணர்ச்சி மேலிட்டு முஸ்லிமானார்.

பர்ராஸ்

இவர் பனூ ஆமிர் கோத்திரத்தைச் சேர்ந்தவர். நாயகம் அவர்களின் வாக்கு வன்மையைக் கண்டு வியந்து, பகைவர்களை ஒழிக்கத் தாம் துணை புரிந்தால், தமக்குத் தலைமைப் பதவி கிடைக்குமா என பேரம் பேசினார்.

பாத்திமா

நபிகள் நாயகம் அவர்கள் - கதீஜா(ரலி) அவர்களின் அன்பு மகளாவார். இவருக்குப் பல பெயர்கள் உண்டு. சுவர்க்கத்தின் பேரரசி என்று அழைக்கப்பட்டவர். தம் தந்தைக்கு உண்டான இன்னல்களை நேரில் கண்டு வருந்தியவர். இவருடைய 15-வது வயதில் அலிக்கும் இவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. இருவரும் எளிய வாழ்க்கை நடத்தினர். நாயகம் அவர்களின் பிரிவு தாளாமல், இரவு பகலாக அழுது, ஆறு மாதங்களுக்குப் பிறகு 29-வது வயதில் இறந்துவிட்டார்.

மாரியா கிப்தி

மிஸ்று நாட்டு கிறிஸ்துவ மதத் தலைவர் முகெளகிஸ், பெருமானாருக்குப் பரிசாக அனுப்பி வைத்த இரண்டு பெண்களில் ஒருவரான இவரைப் பெருமானார் மணம் புரிந்து கொண்டார்.

முத்யிம் இப்னு அதி

இவர் குறைஷிகளில் ஒருவர். இவர் இஸ்லாத்தைத் தழுவவில்லை எனினும், மனிதாபிமான உணர்ச்சியோடு, தம் மக்கள் இருவருடன் சில நாட்கள் பெருமானாருக்குப் பாதுகாப்பாக இருந்தார்.

முஸ் இப்னு உமைர்

இவர் ஹாஷிமின் கொள்ளுப் பேரர். அர்க்கம் இல்லத்தில், பெருமானாரின் இஸ்லாமியப் பிரச்சாரம் நிகழும் போது இவர் இஸ்லாத்தைத் தழுவினார். அதுவரை வந்திருந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவும், இவருக்கு மனனமாக இருந்தன. யத்ரிபுக்கு, இஸ்லாத்தின் பிரச்சாரத்திற்காக, இவரைப் பெருமானார் அனுப்பி வைத்தார்கள்.

பிஷ்ரு

பெருமானார் அவர்களின் தோழர்களில் ஒருவர். அம்பு எய்வதில் வல்லவர். ஹைபர் போரின் முடிவில், யூதப்பெண் அளித்த விருந்தில் நஞ்சு கலந்த இறைச்சியை உண்டு, உயிர் துறந்தார்.

பிலால்

தொழுகைக்கு அழைப்பொலி முழங்க, முதன்முதலில் நியமிக்கப்பட்டவர். இவர் நீக்ரோ இனத்தவர். இவருடைய தந்தை ரபாஹ். அபிசீனியாவிலிருந்து பிலால் அடிமையாகப் பிடிக்கப்பட்டு மக்காவுக்குக் கொண்டு வரப் பட்டார். மிகவும் துன்புற்றவர். அபூபக்கர் (ரலி) இவரை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தனர். இவர் இறுதி வரை நாயகம் அவர்கள் ஊழியத்திலேயே இருந்தார்.

புதைல் இப்னு வர்கா

இவர் குலா கூட்டத்தின் தலைவர். பெருமானாரிடம் அபிமானம் கொண்டு குறைஷிகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தவர்.



ஜஃபர்

அபூதாலிப் அவர்களின் மூன்றாவது மகன். அலி அவர்களின் தமையனார். குறைஷிகளின் கொடுமைகளைச் சகியாமல், அபிசீனியாவுக்குச் சென்ற முஸ்லிம்களை, தங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று குறைஷிகளில் சிலர் அபிசீனியா அரசரிடம் சென்று, இஸ்லாத்தைப் பற்றியும், பெருமானாரைப் பற்றியும் கோள் மூட்டினார். அப்பொழுது ஜஃபர் அங்கே சென்று, பெருமானாரின் பெருமையைக் கூறி, எதிரிகளின் சூழ்ச்சிககளை முறியடித்தவர்.

ஜைத் இப்னு ஹாரிதா

கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறைப் பிடிக்கப்பட்டு, சிரியாவில் ஹகீம் இப்னு ஹிஷாமிடம் அடிமையாக விற்கப்பட்டார். ஹகீம், தம் மாமி கதீஜா நாச்சியாரிடம் ஜைதை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவர், பெருமானார் அவர்களிடம் ஊழியத்துக்காக வந்தார். அப்பொழுது அவருக்கு வயது பதினெட்டு. பெருமானார் அவர்கள் அடிமையிலிருந்து அவரை விடுவித்து விட்டார். அவர் இறுதி வரை பெருமானார் அவர்களுடனேயே இருந்தார். அடிமைகளில் இவரே, முதலாவதாக இஸ்லாத்தைத் தழுவியவர். ஜைதுடைய மகனார் உஸாமா, புகழ் மிக்க இராணுவத் தளபதியாக விளங்கினார்.

ஹம்ஸா

இவர் அப்துல் முத்தலிபின் கடைசி மகன். நாயகம் அவர்களின் சிறிய தந்தை. சிறந்த போர் வீரர். “இஸ்லாமிய சமயச் சிங்கம்” என்ற புகழ் பெற்றவர். உஹத் போரில் உயிர் துறந்தார்.

ஹலிமா

நாயகம் அவர்களுக்குப் பாலூட்டி வளர்த்த செவிலித் தாய்.

ஹப்ஸா நாச்சியார்

இவர் தந்தை உமர் (ரலி). அன்னை ஜைனப். சகோதரர் அப்துல்லாஹ் இப்னு உமர். இவரை முதலில் குனைஸ் குதாபாவுக்கு மணமுடித்தனர். குறைஷிகளின் கொடுமை தாளாது, இருவரும் அபிசீனியா சென்று திரும்பினர். பத்ருப் போரில் குனைஸ் படுகாயம் அடைந்து இறந்தார். அதன் பின், இவரை அண்ணல் நபி அவர்கள் மணந்து கொண்டார்.

ஹன்லலா இப்னு அபூ ஆபீர்

இவர் அபூ அமீர் மகன். உஹத் போரில் கலந்து, தம் தந்தைக்கு எதிராகப் போர் புரிந்து, எதிரிகள் பலரைக் கொன்றார். பின்னர் இவரும் கொல்லப்பட்டார்.

ஹஸ்ஸான் இப்னு தாபித்

மதீனாவில் பிறந்த சிறந்த கவிஞர். இஸ்லாத்தைத் தழுவி, பெருமானாருக்கு ஒத்துழைப்பு நல்கினார். 120 ஆண்டுகள் வரை வாழ்ந்தார்.

ஹாதிப்

மக்காவின் மீது படையெடுக்க உத்தேசித்திருந்த இரகசியச் செய்தியை ஸாரா என்ற பெண் மூலம் குறைஷிகளுக்கு எழுதி அனுப்பியவர். ஆனால் அது உடனடியாகக் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் பெருமானாரால் இவர் மன்னிக்கப் பெற்றார்.

ஹாரிது

அபூஸுப்யானின் தந்தை. பகைவர்களின் தாக்குதலிலிருந்து பெருமானாரைக் காப்பதற்காக, அவர்களுக்கும் குறைஷிகளுக்கும் மத்தியில் நின்றார். பல பகுதிகளிலிருந்து வீசப்பட்ட கத்திகளினால் தாக்குண்டு உயிர் துறந்தார்.

ஹிந்தா

இவர் இஸ்லாத்தின் கொடிய விரோதியாக இருந்தவர். உத்பா இப்னுராபி ஆவின் மகள், அபூஸூப்யானின் மனைவி. மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவி, பெருமானாரின் பெருந்தன்மையால் மன்னிப்புப் பெற்றவர். முஆவியா இவருடைய மகன்.



ஹிஷாம்

இவர் மிகவும் கெளரவமான ஹாஷிம் கோத்திரத்தாரின் நெருங்கிய உறவினர். குறைஷிகளின் பகிஷ்காரத்தைக் கருதி, இரகசியமாக உணவு, தானியங்கள் முதலியவற்றை நாயகம் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்.

வரக்கா இப்னு நெளபல்

இவர் கதீஜா (ரலி) அவர்களின் ஒன்று விட்ட சகோதரர். இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை ஆராய முற்பட்டு, வெற்றி பெறாமல் வேத நூல்களை நன்கு கற்று உணர்ந்து, தூய வாழ்வு வாழ்ந்தவர்.

வஹ்ஷி

இவர் நீக்ரோ அடிமை. தமக்கு விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில், ஹம்ஸாவைக் கொன்றார். மக்காவைப் பெருமானார் வெற்றி கொண்டதும், தமக்கு மன்னிப்புக் கிடைக்காது என்று தாயிபுக்குத் தப்பி ஓடினார். பின்னர் மதீனா வந்து, பெருமானாரிடம் மன்னிப்புக் கோரினார். அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல், பெருமானார் மன்னித்தார்கள்.

நன்றி:எம். கே.. ஈ. மவ்லானா, முல்லை முத்தையா எழுதிய “நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்” எனும் நூல்

தொகுப்பு:உ. தாமரைச்செல்வி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/islam/p13.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License