ரமலான் நோன்பு

அனைத்து சமுதாயங்களாலும் நோன்பு என்னும் ஓர் ஏர்பாடு பின்பற்றப்படுகின்றது. ஆனால், அது முன்னால் செய்த பாவச் செயல்களுக்காக மன வருத்தமடையும் செயலாகவேயன்றி உணவு, பானம் முதலிய இச்சைகளை அடக்கி இந்தீரியங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகக் கருதப்படவில்லை.
ஆனால், இசுலாமிய நோன்பு இதற்கு மாற்றமானது. அதாவது இந்தீரிய இச்சைகளிலிருந்து காப்பாற்றி, உடல் உணர்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட கால அளவில் மட்டும், அதாவது பகல் வேளையில் மட்டும் அடக்கி மிருக உணர்ச்சிகளை நேர்மையான பாதையில் செலுத்துவதே இசுலாமிய நோன்பின் சிறப்பாகும்.
வீணாக உடலைத் துன்புறுத்துவது கண்டிக்கப்பட்டு விலக்கப்பட்டுள்ளது. உடலை அடக்குவதன் மூலம் ஆத்மாவை உயர்த்துவதற்காக உடல் நலமுள்ளோர் மீதும், பலசாலிகள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல்வீனர்கள், நோயாளிகள், பிரயாணிகள், ஜிகாதே அக்பர் எனப்படும் அறிவைத் தேடுவதில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், மார்க்க விரோதிகளுடன் அல்லாவுக்காகப் போர் செய்யும் போர் வீரர், நோய்வாய்ப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு செய்யப்பட்டுள்ளது.
மனிதனிடமுள்ள மிருக உணர்ச்சிகளை அடக்குவதற்கு இசுலாமிய நோன்பு அற்புதமாக அமைந்துள்ளது. (அமீர் அலி. ப.169)
நோன்புக் காலம்
முசுலீம் மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாம் சந்திரமான மாதமாகும். அதுதான் நோன்பு நோற்கும் மாதம். திருக்குரான் அருளப்பட்ட மாதமும் அதுதான். அந்த மாதம் முழுமையும் முசுலீம்கள் நோன்பு நோற்க வேண்டும். சூரியோதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உணவும் பானமும் அகற்றப்பட்டு, ஒவ்வொரு நாளும் தொழுகையிலும், புனிதமான எண்ணங்களிலும் அர்ப்பணிக்க வேண்டும். மேலும், இதே ரமலான் மாதம் ஜகாத் - பித்ரா முதலிய தானங்கள் செய்யும் மாதமாகும்.
நோன்பின் நன்மைகள்
அல்லாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒரு முசுலீம் நோன்பு நோற்கிறான். பகல் முழுவதும் பட்டினியாக இருப்பதால் உடல் பலவீனமடைகிறது. அதனால் உலக இச்சைகள் குறைகின்றன. எனவே, ஆத்மா வன்மையடைகின்றது. ஆத்மிக உணர்ச்சிகளால் உந்தப்பட்ட நோன்பாளி இறைவனையும், இறைவன் நமக்கு அருளும் நன்மைகளையும் நினைக்கிறான். வேறு விதமான ஆத்மிக அனுகூலங்களையும் பெறுகிறான்.
இதே நோன்பினால் உடலுக்கும் நன்மையுண்டாகின்றது. நோன்பாளி உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருக்கும் பொழுது உடலிலுள்ள நீர் சுரக்கும் உறுப்பு (சுரப்பி) களிலிருந்து உண்டாகும் அமிலங்கள் மனிதனுடைய இரைப்பையிலுள்ள நோய்க் கிருமிகளைக் கொன்று விடுகின்றன. மேலும், கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் பொழுது அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் சக்தியை வழக்கம் போல் தன் தினசரி வாழ்க்கையின் கடமைகளைச் செய்யவும் பழகிக் கொள்கிறான்.
இறைவனுடைய அன்பைப் பெறுவதற்காக ஒருவன் நோன்பு நோற்கும் பொழுது அவனுக்கு உடல் சம்பந்தமான நன்மைகளும் கிடைக்காமல் போகவில்லை. ஆண்டவனுக்காகவே ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அது உடல் - ஆத்மா இரண்டிற்கும் பயனுள்ளதாக அமைகின்றது.
இசுலாம் கட்டளையிட்டுள்ள தொழுகை - ஜகாத் -ஹஜ் போன்ற ஆத்மீக அனுஷ்டானங்களும் அப்பியாசங்களும் இதே குறிக்கோளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒருவன் உலக இச்சைக்காக மட்டும் ஒரு செயலைச் செய்தால் அவன் ஆத்மீகப் பலன் அடைய மாட்டான்.
நோன்பு தனி மனிதனுக்கு மட்டும் உயர்வு தந்து நின்றுவிடவில்லை. உலகிலுள்ள முசுலீம் சமுதாயத்தார் அனைவரும் ஒரே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று இறையச்சமுள்ளோராக வாழ்க்கை நடத்துவதால், சமுதாய உணர்ச்சியும் தொடர்பும், அன்பும் அனுதாபமும், தரும சிந்தனையும் உண்டாகின்றன. ரமலான் மாதத்தில் பட்டினியிருக்கும் முசுலீம் செல்வந்தர், அதே சமயத்தில் பட்டினியாயிருக்கும் ஏழையின் கஷ்டத்தை உணர முடிகிறது.
இசுலாமியச் செயல்முறைகள் எல்லாம் ஆண்டவனுடைய சொல்லாகிய குர் - ஆனிலிருந்து கட்டளையிடப்பட்டுள்ளன. இசுலாம் என்பது பூரண வாழ்க்கை வழியாதலால் அது இம்மைக்கும் மறுமைக்கும், உடலுக்கும் ஆத்மாவுக்கும் வழி காட்டுகின்றது. எனவே, ஒரு முசுலீம் உலகக் கடமைகளைச் செய்யும் பொழுது, ஆத்மாவுக்கும் அனுகூலம் உண்டாகிறது. அதைப் போன்று ஆத்மிகக் கடமைகளைச் செய்யும் பொழுது உடலுக்கும் பயனுண்டாகிறது.
ரமலான் மாதம் சந்திரமான மாதம். இந்த நோன்பு மாதம், இலையுதிர்க் காலம், குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் என்று அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் வருவதால் பல மாதிரியான கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள நோன்பாளி பழகிக் கொள்கிறான். இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இவ்விதமான ஆத்மிகப் பயிற்சியை ஏற்றுக் கொள்கிறான். இதையன்றி, உலக விசயங்களில் உடலுக்காகச் சுகாதார சம்பந்தமான பயிற்சியும், இராணுவப் பயிற்சியும், மனவுறுதியை வளர்க்கும் பயிற்சியும் பெறுகிறான். இறைவனுக்காக ஒருவன் நோன்பு நோற்கும் பொழுது இருலோக பாக்கியங்களையும் பெறுகிறான்.
ஆயுள் முழுமையும் அல்லது ஆண்டு முழுமையும் நோன்பு நோற்கலாகாதென்று நபி பெருமானார் தடுத்துள்ளார்கள். இறைவன் மீது கடமை இருப்பது போன்று, “உங்கள் மீதும் உங்களுக்குக் கடமை இருக்கின்றது” எனக் கூறியுள்ளார்கள். ரமலான் மாத கடமையாக்கப்பட்ட நோன்பையன்றி தேவைக்கு மேற்பட்ட தொழுகை தொழலாம். ஆனால், இந்த விருப்பத் தொழுகை ஒரே தடவையில் இரண்டு நாட்களுக்கு அதிகமாகத் தொழலாகாதெனவும் பெருமானார் போதித்துள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக நோன்பு நோற்றால் அது வழக்கமான ஒரு செயலாகி, உடலுக்குப் பயன் தருவதில்லை என்று மருத்துவர்கள் கூட கூறுகிறார்கள்.
இசுலாம் மாதத்தில் தொழுகை, நோன்பு, ஜகாத், தீமையிலிருந்து விலகியிருத்தல் முதலிய புறக்கடமைகளும், இறைநம்பிக்கை, இறைவனுக்கு நன்றி செலுத்தல், நேர்மை, கர்வமின்மை முதலிய அகக்கடமைகளும் உள்ளன. ஆனால், புறக்கடமைகளும் ஆத்மாவைத் தூய்மையாக்கவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நோன்பின் சன்மானம்
நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும் அவர்களுக்காக மன்னிப்பையும், மேலான சன்மானத்தையும் அல்லா ஆயத்தமாக்கி வைத்திருக்கிறான். (அஹ்ஸாப் - 33:35)
-சையித் இப்ராஹிம் தொகுத்த "குர் ஆன் போதனைகள்" நூலிலிருந்து கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.