வாராணசியில் உள்ள இஸிபதனத்தை (மான் பூங்கா) அடைந்தார் பகவான் புத்தர். அங்கே உருவிலா கிராமத்தில் அவருடன் இருந்து பின்னர் விலகிச் சென்ற கௌண்டின்யர், அஷ்வஜித், வஷ்பா, மகாநாமன், பத்ரிகா ஆகிய ஐந்து முனிவர்களும் குளத்தின் படித்துறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
புத்தர் தங்களை நோக்கி வருவதைப் பார்த்தனர். அப்போது, ''கௌதமர் வருகிறார். கடுமையான தவத்தைக் கலைத்துவிட்டு, சுகவாழ்க்கைக்குள் மீண்டும் தன்னை நுழைத்துக் கொண்டவர் அவர். எனவே நாம் எக்காரணம் கொண்டும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்யக் கூடாது'' என்று அவர்கள் தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டனர்.
பகவான் அவர்களிடம் வந்தபோது, கௌண்டின்யரைத் தவிர, மற்றவர்களால் ஏற்கனவே செய்து கொண்ட முடிவின்படி நடந்து கொள்ள முடியவில்லை.
ஒருவர் வேகமாக எழுந்து பகவானை வணங்கி எதிர்கொண்டு அழைத்தார்.
இன்னொருவர் அவர் கையில் வைத்திருந்த பாத்திரத்தையும் துணி மூட்டையையும் வாங்கிக் கொண்டார்.
மற்றொருவர் புத்தர் அமர்வதற்கு வசதியாக அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தி அமருமாறு கூறினார்.
வேறொரு சீடர் அவர் கை, கால் கழுவ நீரைக் கொடுத்து உபசரித்தார்.
ஆனால் கௌண்டின்யர் மட்டும் கோபத்துடன் அவரை வணங்கி வரவேற்காமல் இருந்தார்.
அதனைப் புரிந்து கொண்டு புத்த பகவான், ''கௌண்டின்யா, நலமா?'' என்று கேட்டார்.
உடனே கௌண்டின்யர், ''சித்தார்த்தரே, தாங்கள் தீவிரத் தவ வாழ்க்கையை விட்டு விலகிப் போய்விட்டீர்கள். இனிமேல் நமக்குள் எதுவும் இருக்க முடியாது'' என்றார் கோபம் நீங்காதவராக.
அப்போது பகவான் சொன்னார், ''ததாகதரை சித்தார்த்தர் என்று இனிமேல் அழைக்கக் கூடாது பிக்குகளே. இப்போது ததாகதர் சம்புத்தர் ஆகிவிட்டார். மீண்டும் பிறவாத நிலையை அடைந்தவனாகிவிட்டேன். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிக்க உள்ளேன். இல்லறத்தை விட்டு துறவறம் பூண்டது எதற்காக? கடுமையான தவம் செய்வது எதற்காக? பரிசுத்தமான உயர்ந்த வாழ்க்கையை அடைவதற்காகத்தானே! அதனை நீங்கள் அடைவீர்கள். அதற்கான வழியை நான் உங்களுக்குப் போதிக்கிறேன்'' என்று அழைத்தார் புத்தபிரான்.
''தாங்களோ கடுந்தவத்தைக் கைவிட்டு இன்ப வாழ்வை மீண்டும் அடைந்தீர். உணவை உட்கொண்டீர். இப்படிப்பட்ட நிலையில் உயர்ந்த புத்த ஞானத்தை எவ்வாறு தங்களால் பெற முடியும்? நம்ப முடியவில்லை'' என்றார் கௌண்டின்யர். மற்ற துறவிகளும் அதனை ஆதரித்தனர்.
''தவறாகப் புரிந்து கொண்டீர்கள் பிக்குகளே. ததாகதர் ஒரு போதும் தவத்தைக் கைவிடவே இல்லை. அவர் சுகவாழ்க்கைக்குள் மீண்டும் செல்லவே இல்லை. ததாகதர் இறவாமை என்னும் பெரும் பதவியைப் பெற்றவர். அவர் காட்டும் வழியில் நீங்கள் நடந்தால், உண்மையைக் கண்டறிவீர்கள்'' என்றார் பகவான்.
எனினும், சீடர்களுக்கு பகவான் மீது நம்பிக்கை வரவே இல்லை. திரும்பத் திரும்பத் தங்கள் சந்தேகத்தையே கூறினர்.
அவர்கள் சந்தேகத்தில் சிக்கியுள்ளதை உணர்ந்த புத்தர், ''பிக்குகளே, ததாகதர் என்றாவது இவ்வாறு பேசியதைத் தாங்கள் கேட்டதுண்டா?'' என்று கேட்டார்.
''இல்லை'' என்றனர்.
''அப்படியானால் இப்போது ஏன் இவ்வாறு பேச வேண்டும்? யோசியுங்கள், பிக்குகளே. ததாகதர் பரிசுத்தமானவர். அவர் கூறப்போவதைச் செவிமடுத்தால் கிடைத்தற்கரிய நிர்வாண மோட்சத்தை அடைவீர்கள்'' என அழுத்தமாகப் பேசினார் புத்தபிரான். அவரது உறுதியான பேச்சும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் துறவிகளின் மனதை அசைத்தன. பகவானின் மீது நம்பிக்கை பிறந்தது.
சூரிய அஸ்தமன நேரம்.
கௌண்டின்யர், அஷ்வஜித், வஷ்பா, மகாநாமன், பத்ரிகா ஆகிய ஐந்து முனிவர்களும் தமது சிறிய ஆசிரமத்துக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
புத்தப்பகவான் அவர்களுக்கு எதிரே தேக்கு மரத்தால் செய்யப்பட்ட எட்டு அடி உயரமான ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்தார்.
பின்னால் சக்கரம் ஒன்று காணப்பட்டது. அதன் மையத்தில் அச்சுக்கான துளையும், அதைச் சுற்றி நான்கு பெரிய பட்டைகளும், அவற்றைச் சுற்றிலும் வட்டம் ஒன்றும் காணப்பட்டன. அந்த வட்டத்திற்கும் சக்கரத்தின் வெளிச்சுற்றுக்கும் இடைப்பட்ட அளவில் சிறியதான எட்டுப் பட்டைகள் இருந்தன.
இப்போது பகவான் ஐந்து துறவிகளுக்கும் தாம் அறிந்த உண்மையை உபதேசிக்கத் தொடங்கினார்.
* 6 ஆண்டுகள் இடையறாத தேடலின் முடிவில் போதி மரத்தினடியில் ததாகதருக்கு அற்புதமான ஞானோதயம் கிடைத்தது. அதுவே உயர்ந்த புத்தப்பதவி. அதன் மூலம் பல உண்மைகள் விளங்கின.
* துறவிகள் விலக்கிக் கொள்ள வேண்டிய இரு நிலைகள் உள்ளன. ஒன்று, காமசுகல்லிகானு யோகம். மற்றொன்று அத்தகிலமதானு யோகம்.
* காமசுகல்லிகானு யோகம் என்றால் சிற்றின்ப சுகத்தை அனுபவிப்பது என்று பொருள். இழிவும், தாழ்வும் கொண்ட விகாரமான இது இறுதியில் தீமையைத் தரும்.
* அத்தகிலமதானு யோகம் எனில் உடம்பை அதிகம் வாட்டி ஒடுக்கி அடக்கித் துன்பம் தருவது என்று பொருள். கடைசியில் இதுவும் எந்தவிதப் பயனையும் அளிக்காமல் வீணாகிப் போகிறது.
* எனவே இவ்விரு வழிகளும் அல்லாமல் மற்றொரு புதிய நெறியை ததாகதர் கண்டுபிடித்திருக்கிறார். நல்லறிவு, நற்காட்சி ஆகியவற்றைக் கொடுத்து ஞானத்தையும், சம்புத்தியையும், நிர்வாண மோட்சத்தையும் அளிக்கிறது இந்தப் புதிய நெறி.
* நான்கு உயரிய உண்மைகளை அதாவது வாய்மைகளை உங்களுக்குக் கூறுகிறேன். அவை:
1. துக்க சத்தியம் (துன்பம்)
முதல் உண்மை மிக எளியது. ஆனால் ஆன்மிகத்தின் அடிப்படை. ஆசையே துன்பத்துக்குக் காரணம்.
2. துக்க உற்பத்தி சத்தியம் (துன்பத்தின் காரணம்)
ஆசையின் மற்றொரு லட்சணம் என்னவென்றால் அழியப் போகும் மனிதர், பொருட்கள் அல்லது சுகத்தின் மீது பற்று வைத்தல் ஆகும். இந்தப் பற்று தரும் ஆசையின் விளைவு இடையறாத் துன்பமே.
3. துக்க நிவர்த்தி சத்தியம் (துன்ப நீக்கம்)
மூன்றாவது உண்மை, ஆசையை வெல்ல முடியாமல் நம்மைத் தடுப்பது அகம் எனப்படும் 'நான்' என்னும் ஆணவம்.
4. துக்க நிவாரண மார்க்க சத்தியம் (துன்பம் நீக்கும் வழி)
நான்காவது உண்மை, விடுதலைக்குத் தேவையான சக்தியைப் பெற நம்மிடம் உடல், மனம்,சொல் என்னும் மூன்றும் தூய்மை உடைய திரிகரண சுத்தி அவசியம் தேவை. இந்தத் தூய நிலையை நாம் அடைய வேண்டுமானால், நமக்கு எட்டுவிதமான கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அந்த எட்டுவிதக் கட்டுப்பாடுகள், அதாவது அட்டாங்க மார்க்கம் என்னென்ன?
1. நல்ல நம்பிக்கை
நான்கு உண்மைகளில் நம்பிக்கை கொள்ளுதல். நமக்கும் சக உயிர்களுக்கும் நன்மையே நடக்கும் என்னும் நன்னம்பிக்கையைக் கொள்ள வேண்டியது முக்கியமானது.
2. நல்லெண்ணம்
இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், கோபத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல். அன்பான சொற்களால் யாரையும் புண்படுத்தாமல் பேச வேண்டும்.
3. நல்லமொழி
பயனற்றதும், கடுமையானதும், பொய்யானதுமான சொற்களைக் கூறாதிருத்தல். பிறரைத் துன்புறுத்தாமல் அகிம்சையைக் கடைப்பிடித்தும், களவாடாமல் நன்னெறியைக் கடைப்பிடித்தும் இருத்தல்.
4. நற்செய்கை
நமது லட்சியம் உயர்ந்த நிலையை எட்டும் குறிக்கோளாக நிலைத்து நிற்பது. நமது நடத்தை அப்பழுக்கற்றதாக அதாவது தன்னலமற்று பிறர் நலம் பேணுவது.
5. நல்வாழ்க்கை
பிச்சையேற்று வாழ்தல். நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதில் நேர்மையும் இருத்தல் அவசியம். ஏமாற்றுவது மறையும் போதே உலகில் ஏமாற்றங்கள் மறையும்.
6. நன்முயற்சி
தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல். இந்த நெறிகளில் நாம் பிறழாமல் நிலைத்து நிற்றல் வேண்டும்.
7. நற்சாட்சி
சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல். நம் அறிவை உலக நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துவதில் திடமாக நிற்பதாகும். அறிவை அழிவுக்குப் பயன்படுத்துவோரே உலகெங்கும் துன்ப முட்களை விதைக்கின்றனர்.
8. நல்ல தியானம்
லட்சியத்தை அடைய மனம் ஒருவழிப்பட்டு சிந்தித்தல். இந்த எல்லா நெறிகளுக்கும் நமக்கு உறுதுணையாக நிற்பது தியானம். தியானமே நாம் திரிகரண சுத்தியுடன் வாழ பக்க பலமாகும்.
நான்கு உண்மைகளும், அந்த உண்மைகள் உணர்த்தும் தடைகளைத் தாண்ட எட்டு நெறிகளுமான இந்த வழியை, புத்தன் என அழைக்கப்படும் இவன் ஒரு கருவியாக பௌத்தம் என்னும் மார்க்கமாக உங்கள் முன் முழு மனதோடு சமர்ப்பிக்கிறான்.
இந்த நான்கு உண்மைகளையும், எட்டு நெறிகளான கட்டுப்பாடுகளையும், நாம் எளிதில் நினைவு கூரவே இந்தச் சக்கரம் வைக்கப்பட்டுள்ளது. இது தர்மச் சக்கரமாகும்.
மேற்கண்டவாறு தனது முதல் உபதேசத்தை அந்தத் துறவிகளுக்கும் பகவான் போதித்தார்.
இவ்வாறு அவர் உபதேசித்த பிறகே, கௌதமர் புத்தராகிவிட்டதை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் மேலும் தொடர்ந்து அவர் உபதேசித்தார்.
சத்திய ஞானம், கிருத்திய ஞானம், கிருத ஞானம் என்கிற மூன்றையும் நான்கு சத்தியத்தோடு பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டு விதமாக இருக்கிற இந்தத் தத்துவ ஞானத்தை நான் எப்போது அறிந்தேனோ, அப்போதே தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலேயும், நான் சம்மா சம்போதியை அடைந்தேன்.
இந்த ஞானம் எனக்கு உதித்த போது, 'நான் அடைந்த சம்போதி ஞானம் அழியாது. இதுவே எனது கடைசிப் பிறப்பு. இனி நான் பிறக்க மாட்டேன் என்ற மனவுறுதி ஏற்பட்டது' என்றார் புத்தர்.
''இதனைப் போதிக்கும் பௌத்தம் அனைவருக்கும் பொதுவானது. இதனை ஏற்று புத்தன் தன்னைத்தானே உணர்ந்தான். அப்படியே இதற்கு இணையான இந்த நன்னெறிகளை ஏற்று, அதன் மூலம் ஞானம் பெற விரும்புகிறவர்கள் பௌத்தத்தில் இணையலாம்'' என்று தனது பௌத்தம் பற்றித் தெளிவாக்கினார் பகவான்.
இவ்வாறான உபதேசத்தைக் கேட்டதும் ஐந்து துறவிகளும் மனத்தெளிவினை அடைந்து புத்தரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.