முன் பிறப்புகளில் ஏற்ப்பட்ட கர்மாவின் விளைவாகவே ஓர் ஆன்மாவுக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது. ஓர் ஆன்மாவுக்கு எல்லையில்லாத உணர்வு, எல்லையற்ற அறிவு, ஆற்றல், ஆனந்தம் ஆகியவைகள் உண்டு. ஆனால் கர்மா இவற்றை கட்டுப்படுத்துகிறது. கர்மாவைப் பொறுத்து ஆன்மா சில வண்ணங்களைப் பெறுகிறது. இது விருப்பு, வெறுப்பு, அன்பு, கோபம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. பழைய கர்மாவை முழுவதும் அழித்து, புதிய கர்மாவை உண்டாக்கிக் கொள்ளாத நிலையில் ஆன்மா விடுதலை பெறும். ஆனால் இந்நிலையை அடைய பல பிறப்புகள் எடுக்க வேண்டும்.
கர்ம விடுதலை பெறும் ஆன்மாவின் பயணம் பதினான்கு நிலைகளில் விளக்கப்பட்டு உள்ளது. இதைப் புரிந்து கொள்ள சரியான பார்வை, சரியான அறிவு, சரியான நடத்தை எனும் மூன்று வழிக் கொள்கைகள் அறிவுறுத்தப்படுகிறது.
1. ஆன்மா முழு கர்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சரி, தவறு பற்றி அறிய முடியாமல், அவதியுற்று உலகின் நிகழ்ச்சிகளால் அதிருப்தி அடைகிறது.
2. சில பிறவிகளை எடுத்து சில அறிவீனங்களை விலக்கிக் கொள்கிறது.
3. அறிவுக்கும், ஐயத்திற்கும் இடையே ஊசலாடுகிறது.
4. ஐயத்தை நீக்கிக் கொள்கிறது. ஆனால், கர்மாவின் பிடியிலிருந்து முழுவதும் விலக முடிவதில்லை. அதே சமயம், ஐந்து நல்ல பண்புகளை ஆன்மா பெறுகிறது. 5. சரியான நடத்தையின் அவசியத்தை உணர்ந்து, பன்னிரண்டு உறுதிகளை எடுத்துக் கொள்வதால் கர்மாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் வாய்க்கிறது. (இந்நிலையில் இறை வணக்கம், குரு சேவை, வேதம் ஓதுதல், புலனடக்கம், தவம், தருமம் செய்தல், இவைகளை நித்தம் தொடர்ந்து செய்து வருகிறான்.)
6. சில வேட்கைகள் அழிக்கப்படுகின்றன.
7. இப்போது கோபம் அழிக்கப்படுகிறது.
8. நடத்தை தூய்மையாகி, உறுதிகள் கடைப்பிடிக்கப்பட்டு இதயம் இன்பமடைகிறது.
9. கர்வம் வெற்றி கொள்ளப்பட்டு, ஆண், பெண், என்ற பால் வேறுபாடு அகன்று, முழு நேர தியானத்தில் ஈடுபடுகிறான்.
10. எல்லாவிதப் புலன் இன்ப நாட்டங்களும் விலகுகின்றன. உலகியல் இலட்சியங்களும், இன்ப, துன்பங்களும் இந்நிலையில் கடந்து விடுகின்றன.
11. பேராசையைக் கடந்து அடுத்த நிலைக்குச் செல்கிறான்.
12. எந்த வித ஆசையோ, உலகியல் பாதிப்போ ஏற்படுவதில்லை.
13. ஞானத்தைப் பெற்று எல்லையற்ற ஆனந்தத்தைப் பெறுகிறான். இந்நிலை ஜீவன் முக்தி என்று அழைக்கப்படுகிறது.
14. முழு கர்மாவும் அழிந்து முக்தி அடைகிறான்.