ஆசை ஆசையாய் தயார் செய்த உணவு வீணாகி விட்டதே என்று வெகுநேரம் அழுதாள். பிறகு, தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
இதற்கிடையில், பிச்சையம்மாள் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பிய அய்யாவின் சீடர்கள் 5 பேரும் மறுநாள் சாமிதோப்பை அடைந்தார்கள்.
அய்யாவை வணங்கி, கடந்த 7 நாட்களாக நாட்டு மக்களின் நிலையை அறியச் சென்ற போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை சொல்ல முயன்றனர்.
அப்போது அய்யா வைகுண்டரே குறுக்கிட்டு பேசினார்.
"பிச்சையம்மாள் உங்களுக்கு உண்ண உணவு கொடுத்தாளா?" என்று கேட்டார்.
சீடர்கள் அப்படியே திகைத்துப் போய்விட்டார்கள்.
"எதற்காக வெளியே சென்று வந்தோம் என்பது பற்றி கேட்காமல், பிச்சையம்மாள் என்ற பெண்ணைப் பற்றி கேட்கிறாரே..." என்று எண்ணி அமைதியாக இருந்தனர்.
மீண்டும் அதுபற்றி அய்யாவே கேட்க, அங்கு சாப்பிடவில்லை என்ற உண்மையை பயந்தபடியே ஒத்துக் கொண்டனர் அவர்கள்.
அப்போது அய்யாவே பேசினார்.
"சீடர்களே! பாவிகளால் வகுக்கப்பட்ட சாதி என்ற பேதத்தை உங்கள் மனதைவிட்டு அகற்றி விடுங்கள். எல்லோரும் என் மக்களே! அந்த பிச்சையம்மாள் என் மகள். அவள் உங்களுக்காகத் தயார் செய்த சாப்பாட்டை நீங்களே சாப்பிட்டாக வேண்டும். எங்கு யார் சாப்பாடு கொடுத்தாலும், அங்கே வேண்டாம் என்று நீங்கள் சொல்லக்கூடாது. இப்போது, உடனே பிச்சையம்மாள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று சாப்பிட்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டார் அய்யா.
அடுத்த நிமிடமே அந்த 5 சீடர்களும் பிச்சையம்மாளின் ஊரான சாரையோடுக்கு புறப்பட்டனர். மறுநாள், அவளது வீட்டை அடைந்தனர்.
அங்கே பிச்சையம்மாள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவளது வாடிய முகமும், தேகமும், அவள் சாப்பிட்டு சில நாட்கள் ஆகிவிட்டது என்பதை தெளிவுப்படுத்தின.
சீடர்கள் அவளை இந்தக் கோலத்தில் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த விவரங்களை தெளிவாகக் கூறி அவளுக்கு ஆறுதல் கூறினர். அய்யாவே சாப்பிட்டு வருமாறு பணித்ததையும் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் சோகத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சி அடைந்தாள் பிச்சையம்மாள். உணவு படைக்க தயார் ஆனாள்.
அப்போதுதான் அவளுக்கு சமைக்கவே இல்லையே என்பது நினைவுக்கு வந்தது. இருந்தாலும், சோர்ந்து போய்விடவில்லை அவள்.
4 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுக்கத் தோண்டினாள்.
அய்யாவே சீடர்களைச் சாப்பிட்டு வருமாறு தனது சீடர்களை அனுப்பி இருப்பதால், ஏற்கனவே புதைத்து வைத்து சாப்பாடு கெட்டுப்போய் இருக்காது என்ற நம்பிக்கையுடன் தோண்டினாள்.
புதைத்து வைத்திருந்த உணவு பானையை வெளியே எடுத்தாள். மூடியை திறந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே உணவு கெட்டுப் போகாமல், அன்று சமைத்த உணவு போல் அப்படியே இருந்தது.
அவளது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது.
அய்யாவின் சீடர்களும் அதைப் பார்த்து பரவசம் ஆனார்கள்.
சிறிது நேரத்தில் விருந்து நடைபெற்றது. சீடர்கள் 5 பேரும் பிச்சையம்மாள் பரிமாறிய சாப்பாட்டை மனமார ஏற்றுச் சாப்பிட்டனர்.
விருந்து முடிந்ததும் அவளை ஆசீர்வதித்துவிட்டு சாமிதோப்புக்கு திரும்பினர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் பிச்சையம்மாளுக்கு ஏற்ற வரன் அவளைத் தேடி வந்தது. அவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கினாள் அவள்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு என்ற இடத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் நடத்திய அற்புதங்களில் இதுவும் ஒன்று.