சித்திர புத்திர நாயனார் கோயில்
உ. தாமரைச்செல்வி
மனித வாழ்க்கையில் தெரிந்தே தவறுகளைச் செய்து கொண்டிருப்பவர்களும் உண்டு, தவறு என்றே தெரியாமல் செய்து விட்டு அதற்காக வருந்துபவர்களும் உண்டு. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு என்று ஆகிவிட்டால் அதற்கான தண்டனை கட்டாயம் உண்டு. இந்தத் தண்டனைகளிலிருந்து விடுபட இறைவனை நாடுவதே சரியான வழி. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் அவன் செய்யும் நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்துமே கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளைப் பராமரிப்பதற்காகவே சித்திரகுப்தன் என்கிற கடவுள் இருப்பதாகவும் இந்து சமய புராணங்கள் தெரிவிக்கின்றன.
மனிதன் தான் தெரியாமல் செய்த தவறுகளை உணர்ந்து, சித்திரகுப்தனிடம் அந்தத் தவறுகளை மன்னித்து அருள வேண்டினால், அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவிற்குத் தீய செயல்களிலிலிருந்து விடுவிப்பு கிடைப்பதுடன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற தொன்ம நம்பிக்கையும் உள்ளது.
சித்திர புத்திர நாயனார் கோயில்
உலகில் வாழும் அனைத்து உயிர்களின் கணக்குகளையும் பராமரித்து வரும் சித்திர புத்திரருக்கென்று சில இடங்களில் மட்டுமே கோயில்கள் உள்ளன. அவற்றுள் தேனி மாவட்டம், கோடாங்கிபட்டிக்கு மேற்கே தீர்த்தத் தொட்டி எனும் பகுதியில் அமைந்திருக்கும் சித்திர புத்திர நாயனார் கோயிலும் ஒன்று. காஞ்சிபுரத்திலுள்ள சித்திர புத்திரர் கோயிலுக்கு அடுத்து சிறப்பு பெற்ற கோயிலாக இக்கோயில் இருந்து வருகிறது.
தல வரலாறு
தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்துப் பிள்ளை என்பவரின் முன்னோர் கனவில் தோன்றிய சித்திர புத்திரன் தனக்கென்று தனியாக கோயில் ஒன்றைக் கட்டி வழிபட்டு வந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அளிப்பதாகவும், தன்னுடைய கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்லும் அனைத்து பக்தர்களுக்கும், அவர்கள் வாழ்க்கையில் தெரியாமல் செய்த தீயசெயல்களை நீக்கி, நற்பலன்களை அடைந்திட தான் உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். பேச்சிமுத்துப் பிள்ளை குடும்பத்தினர், சித்திர புத்திரர் கனவில் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தில் சித்திரபுத்திரருக்காகத் தனியாகக் கோயில் ஒன்றைக் கட்டினர். இந்தக் குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாகத் தொடர்ந்து சித்திரபுத்திரரைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.
கோயில் அமைப்பு
சுமார் அறுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் உள்ளே அமர்ந்த நிலையில், கிழக்குத் திசையை நோக்கிய நிலையில் சித்திர புத்திர நாயனார் சிலையுடன் கூடிய கருவறை அமைந்துள்ளது. கருவறையை ஒட்டிய முன் சுவற்றில் விநாயகர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தென்பகுதியில் சீலைக்காரியம்மன் சிலை ஒன்று உள்ளது. கோயிலுக்கு அருகில் விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில் உள்ளது.
வழிபாடு
சித்திர புத்திரன் கோயிலில் பேச்சிமுத்துப் பிள்ளை குடும்பத்தின் வழித் தோன்றல்களால் அமைக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் கோயிலில் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திர நாளிலும், சித்திரை மாதத்தில் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்று சித்திர புத்திரருக்குச் சிறப்புப் பூசைகளுடன் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, சித்திர புத்திர நாயனார் தோற்றம் குறித்த வரலாற்றுக் கதைகள் படிக்கப்படுகின்றன. அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் சித்திரைக் கஞ்சி வழங்கப்படுகின்றது.
சித்திர புத்திரன் வரலாறு
இந்த உலகின் தீய மற்றும் நற்செயல்களான பாவ புண்ணியங்களைக் கணக்கிடுவதற்காகச் சிவபெருமான் ஒரு தங்கப்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தார். இந்த சித்திரத்தைக் கண்ட பார்வதி தேவி, அந்தச் சித்திரத்தை உயிர்ப்பிக்க வேண்டினார். சிவபெருமானும் பார்வதி தேவியின் வேண்டுதலுக்காக அந்தச் சித்திரத்தை உயிர்ப்பித்தார். சித்திரை மாதம் முழுநிலவு (பவுர்ணமி) நாளில் சித்திரத்திலிருந்து உயிர்ப்பு பெற்றதால் அவர் சித்திர புத்திரன் என்ற பெயரைப் பெற்றார்.
சிவபெருமான் அவரிடம், மூவுலகிலும் உயிருடன் இயங்கும் அனைத்து உயிர்களின் தீய மற்றும் நற்செயல் குறித்த கணக்குகள் குறித்த விவரங்களையும் கணக்கிட்டுத் தனக்குத் தெரிவிக்கும்படி கட்டளையிட்டார்.
அதன்படி, சித்திரபுத்திரனும் சிவபெருமானின் இருப்பிடமான கயிலாயமலையிலிருந்து அனைத்து உயிர்களின் கணக்குகளையும் பராமரித்து, சிவபெருமானிடம் தெரிவித்து வந்தார் என்று அவரது பிறப்பு குறித்து ஒரு வரலாறு தெரிவிக்கிறது.
இந்திரன் தனக்கு குழந்தைப் பேறு அளிக்க வேண்டுமென்று இந்திராணியுடன் சேர்ந்து, பல தான தருமங்கள் செய்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோரின் தவத்தை எடுத்துச் சொல்லி, சித்திர புத்திரனை இந்திரனுக்கு மகனாக இருந்து, அவனுடைய குழந்தை இல்லை எனும் கவலையைத் தீர்க்கும்படி அருள் புரிந்தார்.
அதைத் தொடர்ந்து, சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில், முழுநிலவு நாளன்று காமதேனுவின் வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திர புத்திரன் பிறந்தார். இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்ட இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோர் தங்கள் குழந்தையாக எண்ணி வளர்த்து வந்தனர். இந்திரனின் மகனாக வளர்ந்த சித்திர புத்திரன், சிவபெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வந்தார். சித்திர புத்திரன் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு, அனைத்து உயிரினங்களின் செயல்பாடுகள் குறித்த கணக்குகளையும் எழுதிப் பராமரிக்கும் பணியை வழங்கினார் என்றும் ஒரு வரலாறு தெரிவிக்கிறது.
இவரைப் பலரும் சித்திர குப்தன் என்றே தங்கள் பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றனர். சித்திரம் என்றால் வியப்புக்குரியது என்றும், குப்தம் என்றால் மறைபொருள் (ரகசியம்) என்றும் பொருள் உண்டு. உலகில் எப்படிப்பட்ட மறைபொருளையும் கண்டறிந்து கணக்கெழுதி விடும் இவரது கணக்கெழுதும் முறை வியப்புக்குரியதாக இருப்பதால் இவரை சித்திர குப்தன் என்று அழைப்பதிலும் தவறில்லை என்கின்றனர்.
சித்திரை முழுநிலவு வழிபாடு
ஒவ்வொரு ஆண்டும் சித்திர புத்திரன் அவதரித்த சித்திரை முழுநிலவு நாளன்று சித்திரை நோன்பு கொண்டாடப்படுகிறது. சித்திரை நோன்பு எனும் விரதத்தைப் பெண்கள்தான் அதிகமாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து விரதமிருக்கின்றனர். சித்திர புத்திரன் காமதேனுப் பசுவின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததால், பசுவின் பால் மற்றும் அதன் பாலிலிருந்து பெறப்படும் எந்தப் பொருள்களையும் இந்த விரத நாளில் பயன்படுத்தக் கூடாதென்பது ஒரு கட்டுப்பாடாக உள்ளது. மேலும் இந்நாளில் சித்திரை நோன்பு மேற்கொள்பவர்கள் அன்று தங்கள் உணவில் உப்பையும் சேர்த்துக் கொள்வதில்லை. வீடுகளில் மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி, வாசனைப் பொருள் கலந்த பொங்கல் வைத்துப் பூசை செய்து,
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்கிற சித்ரகுப்த சுலோகத்தைச் சொல்லி வணங்குகின்றனர்.
இந்தப் பூசையைச் செய்பவர்கள் சித்திர புத்திரர் கோயிலுக்குச் சென்று ஏழை மாணவர் ஒருவருக்கு ஏடு, எழுதுகோல் போன்ற எழுது பொருட்களைத் தானமாக வழங்கிட வேண்டும் அல்லது ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்திட வேண்டும். சித்திர புத்திரர் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவபெருமான் கோயிலுக்குச் செல்லலாம்.
சித்திரை நோன்பின் பலன்
மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவானது அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த ஆன்மா அடைகிறது.
இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து, தான் தெரியாமல் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதால், இறப்புக்குப் பின்பு, ஆன்மாவிற்குத் தீய செயல்களிலிலிருந்து விடுவிப்பு கிடைப்பதுடன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற தொன்ம நம்பிக்கை உள்ளது. மேலும் சித்ரகுப்தனை வணங்குபவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளிலிலிருந்து விடுபடுவர்.
அமைவிடம்
தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் நகரப் பேருந்துகள் இந்நிறுத்தத்தில் நிறுத்தப்படுகின்றன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.