உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில்
உ. தாமரைச்செல்வி
கண் பார்வைக் குறைபாடு மற்றும் கண் தொடர்பான நோய்களிலிருந்து குணமடையவும், இராகு, கேது தோசப் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் அருளும் கடவுளாக உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.
தலவரலாறு
இராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சிக்குட்பட்ட உத்தமபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த படைப்பிரிவு ஒன்றின் நிர்வாகப் பணியிலிருந்த பிச்சை என்பவர் சிறந்த சிவபக்தர். காளாத்தீஸ்வரர் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் ஆந்திர மாநிலத்திலிருக்கும் காளகஸ்திக்குச் சென்று, அங்கிருக்கும் காளாத்தீஸ்வரரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வயதான காலத்தில் அவரால் அங்கு செல்ல இயலாமல் போனது. இதனால் மனம் வருந்திய அவர் இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். அவரது கனவில் தோன்றிய இறைவன், வில்வவனத்தில் வெள்ளை அரளிச்செடியின் கீழே லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு இருந்து தன்னை எடுத்துச் சென்று விரும்பும் இடத்தில் கோயில் கட்டி வழிபடலாம் என்றும் தெரிவித்தார்.
மறுநாள் தான் கண்ட கனவினை ஊர்மக்களிடம் தெரிவித்த அவர், ஊர்மக்கள் துணையுடன் வில்வவனம் சென்றார். அங்கு அவரது கனவில் இறைவன் சொன்னபடி வெள்ளை அரளிச்செடியின் கீழாக லிங்கம் ஒன்று இருந்தது. அவரும், ஊர்மக்களும் அந்த லிங்கத்தை வழிபட்டுத் தாங்கள் கொண்டு சென்றிருந்த வண்டியில் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊருக்கு அருகில் வந்த போது ஒரு இடத்தில், அந்த வண்டியின் அச்சு முறிந்து, வண்டி நின்று போனது. அதன் பின்பு எவ்வளவு முயன்றும் அந்த வண்டியை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை.
அப்போது அந்த இடத்தில் ஆறுமுகத்துடனான முருகன் சிலை ஒன்று இருப்பதைக் கண்டனர். அதன் பிறகு, அவர்கள் அந்த இடத்திலேயே காளாத்தீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைத்துக் கோயிலமைத்தனர்.

ஆற்றில் வந்த அம்மன்
அதன் பின்னர் இக்கோயிலில் அம்மனுக்குத் தனிச் சன்னதி அமைத்திட முடிவு செய்த ஊர் மக்கள், அம்மன் உருவத்தைச் சிலையாக வடிவமைக்க பல சிற்பிகளைக் கொண்டு முயற்சித்தனர். ஆனால், அந்தச் சிற்பிகளால் அம்மன் உருவத்தைச் சிலையாக உருவாக்க முடியாமல் போனது.
இதனால் மனம் வருந்திய பிச்சை, கோயிலில் அம்மன் சிலை அமைக்கத் தங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைவனிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், “பக்தனே, இன்னும் சில நாட்களில் மழை பெய்து ஊருக்குக் கிழக்காக ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்த ஆற்று வெள்ளத்தில் அம்மன் மூங்கில் கூடையில் அமர்ந்து வருவார். அந்த அம்மன் சிலையைக் கொண்டு வந்து, கோயிலில் அம்மன் சன்னதி அமைத்து வழிபடுங்கள்” என்று சொல்லி மறைந்தார்.
இறைவன் சொன்னபடி சில நாட்களில் பெரும் மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் இறைவன் சொன்னபடியே ஒரு மூங்கில் கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் இருந்தன. அந்தச் சிலைகளை ஊர் மக்கள் காளாத்தீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனுக்கான சன்னதியில் அம்மன் சிலையை வைத்து அம்மனுக்கு திருக்காளகஸ்தியிலிருக்கும் ஞானாம்பிகை என்ற பெயரையேச் சூட்டி வழிபட்டனர். கோயிலில் விநாயகர் சிலையை நிறுவிச் செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டினர்.
பிறந்த வீட்டுச் சீர்
இக்கோயிலில் இடம் பெற்றிருக்கும் ஞானாம்பிகை அம்மன் சிலை இத்தலம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள கோகிலாபுரம் என்ற ஊரின் ஆற்றில்தான் கிடைக்கப் பெற்றாள். எனவே, இந்த ஊரை அம்பிகையின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர். இக்கோயிலில் நடத்தப்பெறும் திருக்கல்யாண விழாவின் போது, இவ்வூரிலிருக்கும் பக்தர்கள் அம்மனுக்குப் பிறந்த வீட்டுச் சீரும், தங்களது மருமகனான சிவபெருமானுக்கு ஆடைகளும் கொண்டு வருகின்றனர். திருக்கல்யாணத்தின் போது, காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மனுக்கு இந்த ஆடை அணிகலன்களை அணிவித்துத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
|
சோமாஸ்கந்தர்
இக்கோயிலில் காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை சன்னதிகளுக்கிடையே சண்முகர் தனிச்சன்னதி கொண்டிருக்கிறார். இதனால், இந்தக் கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. இதற்கு அருகில் அமர்ந்து கொண்டால், அம்பிகை, முருகப்பெருமான் என இருவரையும் ஒரே நேரத்தில் காண முடியும். இப்படி தாயையும், மகனையும் ஒன்றாகக் காண்பது மிக அரிது என்கின்றனர். இதனால் இக்கோயில் தாய், மகன்களின் ஒற்றுமைக்கான வழிபாட்டுத் தலமாகவும் இருக்கிறது. மகனைப் பிரிந்து வாழும் பெற்றோர் தங்கள் மகனுடன் ஒன்று சேர்ந்து வாழ இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
வாஸ்து பகவான்
இக்கோயிலின் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் மண்டபத்தின் மேற்கூரையில் ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் வாஸ்து பகவான் சடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை இருவரும் வழிபாடு செய்வது போன்ற சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியிருப்பது போன்று உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசிகளுக்கான சின்னங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
இதனையடுத்து, நடுவில் சூரியனும், சுற்றிலும் 12 ராசிகளும் கொண்ட ‘சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம்’ இருக்கிறது. நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள், இந்தச் சக்கரங்களின் கீழ் நின்று இறைவனை வழிபட்டால் அவர்களின் பிரச்சனை விரைவில் தீர்ந்து விடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
கண் நோய்கள் நீங்கும்
ஐம்பெரும் தலங்களில் காளஹஸ்தி, வாயுத்தலமாக இருக்கிறது. இதே போல இத்தலத்தில் இருக்கும் காளாத்தீஸ்வரரும் வாயு நிலையில் இருப்பதாகவே கருதுகின்றனர். எனவே இவருக்கு இங்கு “வாயுலிங்கேஸ்வரர்” என்ற பெயரும் உண்டு. வாயுவைத் தொடமுடியாது என்பதால் இவரைத் “தீண்டாத்திருமேனியன்” என்றும் அழைக்கின்றனர். வேடவரான கண்ணப்பருக்கு காளஹஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கண்ணப்பருக்கும் தனிச்சன்னதி அமைக்கப்ப்ட்டிருக்கிறது. இங்கு கண்ணப்பர் கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் காட்சி தருகிறார். சிவராத்திரியன்று இரவில் காளத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. கண் பார்வைக் குறைபாடு மற்றும் கண் தொடர்பான நோயுடையவர்கள் இச்சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் கண் தொடர்புடைய நோய்கள் நீங்கப் பெறலாம்.
கல்விக்குச் சனீஸ்வர வழிபாடு
மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற இக்கோயிலில் இருக்கும் காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை ஆகியோரை வழிபட்டு, இங்குள்ள சனீஸ்வரருக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு கருப்பு நிறம்தான் ஏற்றது. எனவே, சனீஸ்வரருக்கு அனைத்து இடங்களிலும் கருப்பு நிறத்திலான ஆடையை அணிவித்து வழிபடுவதுதான் வழக்கம். ஆனால், இக்கோயிலில் கல்விக்கு உரியவரான புதனுக்கு உடுத்தும் பச்சை நிற ஆடையைப் போன்று, சனீஸ்வரருக்குப் பச்சை நிற ஆடையினை அணிவித்து வேண்டுகின்றனர். இதன் மூலம் மாணவப் பருவத்தில் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு கல்வியில் சிறப்புகளைப் பெற முடியும் என்கிற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் இருக்கிறது.
|
பரிகார வழிபாடு
இக்கோயிலில் இராகு, மனைவி சிம்ஹிகையுடன் இருக்கும் தனிச் சன்னதியும், கேது, மனைவி சித்ரலேகாவுடனும் இருக்கும் தனிச் சன்னதியும் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு இராகு, கேது இருவரும் தங்களுடைய உண்மையான உருவத்துடன் இருக்கின்றனர் என்பது தனிச் சிறப்பு. ஞாயிற்றுக் கிழமை தோறும் இராகு காலத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இவர்களது சன்னதியில், நாக தோச பரிகார வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாக தோசமுடையவர்கள், இராகு, கேது தோசப் பிரச்சனையுடையவர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
எட்டு அம்பிகைகள்
பெரும்பான்மையான கோயில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய ஏழு அம்பிகைகள் (சப்த மாதர்கள்) இடம் பெற்றிருப்பதுண்டு. இக்கோயிலில் எட்டு அம்பிகைகள் (அஷ்ட மாதர்கள்) இடம் பெற்றிருக்கின்றனர். ஆதிசக்தியிலிருந்து ஏழு வடிவில் ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே ஏழு அம்பிகைகளாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதனடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாகக் காளிதேவியும், ஏழு அம்பிகைகளுடன் சேர்ந்து காட்சி தருகிறார். இந்த எட்டு அம்பிகைகளையும் ஒரே இடத்தில் வழிபடுவதால் எந்தப் பிரச்சனைகளையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும் என்கின்றனர்.
நாயன்மார்கள்
இத்திருக்கோயிலின் தென்பகுதியில் 63 நாயன்மார்கள் சிலைகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தியின் திருஉருவம் தனிச் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. திருக்காளத்திசுவரர் சன்னதியின் பின்பகுதியில் காசி விசுவநாதர் சன்னதி, மீனாட்சி சுந்தரேசுவரர் சன்னதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் கல்விக் கடவுளான சரஸ்வதி சிலை இடது கையில் வீணையைப் பிடித்தபடியும், வலது கையில் அட்சர மாலையுடனும் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. குபேரர், ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவர்களுக்குப் பின்புறம் மகாலட்சுமியும் இருக்கிறார். இது போல் இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கான சிலைகளும் தனியாக இடம் பெற்றிருக்கின்றன.
தென் காளஹஸ்தி
பல்வேறு சிறப்புகளுடன் அமைந்திருக்கும் இந்தக் கோயில் ‘தென் காளஹஸ்தி’ எனும் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது. காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள், இக்கோயிலில் இருக்கும் காளத்தீஸ்வரரை வழிபட்டு காளஹஸ்தி சென்று வந்த பலனைப் பெற முடியும் என்கின்றனர்.
அமைவிடம்
தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உத்தமபாளையம் எனும் ஊரில் இக்கோயில் அமைந்திருக்கிறது.
(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.