திங்களூர் கைலாசநாதர் கோயில்
மீனாட்சி சுந்தரமூர்த்தி
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அருகில் திங்களூரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் உடனுறை அம்பிகை பெரியநாயகி கோயில் நவக்கிரகத் தலங்களில் இரண்டாவது தலமாகவும், சந்திரனுக்குரியதாகவும் அமைந்திருக்கிறது.
தலவரலாறு
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி மந்தரமலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி திருப்பாற்கடலைக் கடைந்த போது துன்பம் தாளாமல் வாசுகி ஆலகால விடத்தைக் கக்கியது.அனைவரையும் மூழ்கடிக்கச் செய்யும் அப்பெரும் நஞ்சினை ஈசன் விழுங்கி அனைவரையும் காத்தார். இறைவி, இறைவனின் கழுத்தைப் பிடித்துத் தடுத்தார். அதனால் நஞ்சு அங்கேயே தங்கி நஞ்சுண்டகண்டன் ஆனார் ஈசன். ஆனாலும் நஞ்சின் வெப்பத்தாக்கத்தால் தேவாசுரர் மயக்கமுற்றனர். அப்போது பாற்கடலிலிருந்து வந்த சந்திரனின் ஒளியால் அவர்கள் மயக்கம் தெளிந்தனர்.
தனிச்சிறப்புப் பெற்ற சந்திரன் உயிரினங்களை வெப்பத்திலிருந்து காப்பவன், மனிதரின் மனமதை இயக்குபவன். செடி, கொடிகளிடம் மருத்துவத் தன்மையை உண்டாக்குவதும் சந்திரனின் ஒளிக்கற்றைகளே. தட்சனின் இருபத்து ஏழு புதல்வியரை மணந்தான் சந்திரன். திருமணத்தின் போது தட்சன் அனைவரிடமும் சந்திரன் பாகுபாடின்றி அன்பு செலுத்த வேண்டும் என்று கூறியதை ஏற்றுக் கொண்டான். ஆனால் அப்படி நடக்கவில்லை, ரோகிணியிடமே அவன் மனம் சென்றது. மற்ற மனைவியரைப் புறக்கணித்தான். அவர்கள் தமது தந்தை தட்சனிடம் முறையிட தட்சன் கொடுத்த வாக்கை மறந்து பாரபட்சமாக நடந்து கொண்டதால், `உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து போகக் கடவது` எனச் சாபமிட்டான். இதனால் தேய்ந்து கொண்டே வந்த சந்திரன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டு நீண்ட காலம் தவம் செய்தான் ஒரு பங்குனி மாதப் பௌர்ணமி நாளில் இறைவன் சந்திரனுக்குக் காட்சி கொடுத்து, அவனுடைய சாபம் தீர்த்தார். பதினைந்து நாள் தேய்ந்து மூன்றாம் பிறையாகி மறுபடியும் கலைகள் வளர்ந்து முழுமை அடையுமென வரமும் தந்தார். மூன்று கலைகள் கொண்ட பிறையைச் சடையில் தாங்கி அருள் தந்து ஈசன், ‘பிறை சூடிய பெருமான்’ (சந்திரசேகரன்) ஆனார். சந்திரன் தனக்கு அருள் வழங்கிய ஈசனிடம், இங்கு வரும் அன்பர்களின் குறை தீர்க்க அனுமதி வேண்டும், எல்லையிலாக் கருணைக் கடலாம் ஐயன் அம்மையோடு இங்கு விளங்க வேண்டுமென வேண்டிப் பெறுகிறான். ஒவ்வொரு பிறையாக வளர்வதை வளர்பிறை எனவும், ஒவ்வொரு பிறையாகத் தேய்வதைத் தேய்பிறை என்றும் வழங்குகிறோம். வளர்பிறையில் நமக்கு நோய்களின் தாக்கம் குறைவதும், தேய்பிறையில் அதுவும் அமாவாசையில் அதிகமாவதும் இதனால்தான் என்கிறது இக்கோயிலின் தல வரலாறு.
சந்திரனின் தன்மையும், உகந்தவையும்
1. இராசி - கடகம்
2. ஒளி - சந்திரகாந்தம் (வெள்ளை நிற அலைகள்)
3. தன்மை - குளிர்ச்சி.
4. நிறம் - வெண்மை
5. வாகனம் - வெள்ளைக் குதிரை
6. தானியம் - நெல், பச்சரிசி
7. மலர் - அல்லி, வெள்ளை அரளி
8. ஆடை - வெள்ளைத் துணி
9. இரத்தினம் - முத்து
10. உலோகம் - ஈயம்
11. உணவு - தயிர் சாதம்
|
கோயில் அமைப்பு
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் இராஜசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கியுள்ள இக்கோயிலுக்குத் தெற்கிலமைந்த வாயில் உள்ளது. மூலவரான கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், அன்னை பெரியநாயகி தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். வெளிச்சுற்றை வலம் வருகையில், விடம் தீர்த்த விநாயகரும், சுப்பிரமணியரும், யோகநிலையில் தட்சிணாமூர்த்தியும், கஜலட்சுமியும், மனைவியுடன் சண்டிகேசுவரரும் இருக்கின்றனர். இக்கோயிலில் சந்திரன் மேற்கில் இறைவனைப் பார்த்தபடி தனிச் சந்நிதியில் இருக்கின்றார். திருக்கோவிலின் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவர் மனைவி, மூத்த திருநாவுக்கரசு. இளைய திருநாவுக்கரசு ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ளன. இங்குள்ள குளம், ‘சந்திர தீர்த்தம்’ எனப்படுகிறது.
வழிபாடுகள்
இக்கோயிலில் காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இக்கோயிலில் சந்திரன் சாபம் நீங்கிய பங்குனி மாதப் பௌர்ணமி நாளில், ஒவ்வொரு ஆண்டும் சந்திரனின் ஒளி கைலாசநாதர் மீது விழுகிறது. அன்று இறைவிக்கும் இறைவனுக்கும் சிறப்பு அபிடேகமும், சந்திரனுக்கு இலட்சார்ச்சனையும் நடைபெறும். மகா சிவராத்திரி, பிரதோஷம், மார்கழி மாதத் திருவாதிரை, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திரத்தன்று காலை ஆறு மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுவதால் அன்று சூரிய வழிபாடும், மறுநாள் பௌர்ணமிப் பிரதமையில் மாலை சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதால் சந்திர வழிபாடும் நடைபெறும்.
வெள்ளை நிற ஆடை உடுத்தி, முத்து மாலை அணிந்து, பௌர்ணமி விரதமிருந்து, வெள்ளை நிற மலர்கள் சாற்றி வழிபட வேண்டும். சந்திர தோஷம் உள்ளவர்கள் சந்திர தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும், சந்திரனையும் நெய்விளக்கு ஏற்றி வழிபட நலம் உண்டாகும். நீர் தொடர்பான நோய்களுக்குச் சந்திரனே காரணமாவார் என்பதால், காலரா, நுரையீரல் தொற்று போன்ற நோய்கள் குணமாக சந்திரனை வழிபடலாம். மேலும், இக்கோயிலில் வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கும். மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை அகலும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி அன்பு பெருகும். அறிவுத்திறன் பெருகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
கூடுதல் சிறப்புகள்
* இது சந்திர தோஷப் பரிகாரத் தலமாகும்.
* இது தேவாரப்பாடல் பெற்றது. அப்பரும், சுந்தரரும் பாடிப் பரவிய பேறுடையது.
* 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் பிறந்து ஈசன் புகழ் சாற்றியது.
நிலாச்சோறூட்டல்
சந்திரனுக்கான இக்கோயிலில் குழந்தைக்கு முதல் சோறூட்டும் விழாவும் நடைபெறுகிறது. இதனை `நிலாச்சோறூட்டல்` எனகின்றனர். அசுவினி, மிருக சீரிடம், உத்திரம், சதயம், சுவாதி, திருவோணம், ரேவதி நட்சத்திர நாட்களில் சந்திர ஓரையில் சோற்றுடன் நெய்யும், பாலும், தேனும் கலந்து நிலவையும், பசுவையும் காட்டி குழந்தைக்கு ஊட்டுவதால் எந்த நோயும் வராது, அப்படியே வந்தாலும் மருந்து தந்தவுடன் குணமாகி விடும். சந்திரன் சூரியனிடமிருந்து வாங்கும் ஒளியை நீருடன் சேர்த்துக் குளிர்ச்சியாக மாற்றி அளிப்பவன். ஆதலால் குழந்தைக்கு நீரினின்று காப்பும், அவனிடமுள்ள மருத்துவத் தன்மையால் நோயும் அண்டாது என்கின்றனர்.
தலப்பெருமை
திருநாவுக்கரசர் திங்களூர் இறைவனை வணங்க வருகிறார். ஊரில் நுழைந்தவுடன் திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, தண்ணீர்ப் பந்தல், அன்னசத்திரம், கோசாலை (பசுக்களைப் பராமரிக்கும் இடம்), தருமசாலை எனப் பலவும் கண்டு எதிர்ப்பட்டவரை, இவற்றை அமைத்தவர் யாரென கேட்கிறார். அவர்கள் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர் அப்பூதியடிகள் எனச் சொல்லி, அவரது வீட்டினையும் காட்டுகின்றனர். நாவரசர் அங்கு சென்று திருவைந்தெழுத்து சொல்லக் கண்ட அப்பூதியடிகள் சிவனடியாரென வணங்கி வரவேற்கிறார்.
நாவரசர் அறச்சாலைகளைத் தம் பெயரில் நிறுவிடாது வேறோர் பெயரில் அமைத்தது ஏன் என்று கேட்டதும், அப்பூதியடிகள் சினமுற்று, `அப்பர் (திருநாவுக்கரசர்) பெருமை அறியீரோ! உழவாரப்பணி புரியும் அவர், கடலில் மிதந்தும், சுண்ணாம்புக் காளவாயில் குளிர்ச்சியும், இடற வந்த யானை வணங்கவும், ஈசனால் அருளப் பெற்ற பெருமையும் உடையவர். அவரே நான் போற்றும் ஆசான், அவர் பெயர் விளங்கச் செய்வதே என் பணி` என்கிறார்.
திருநாவுக்கரசர் அவரைக் கண்டிருக்கிறீரோ? எனக் கேட்க, அப்பூதியடிகள் இல்லை, என்கிறார்.
`அந்த எளியவன் நானே` என்றிட, ‘நான் செய்த தவம் என்னே`என மனைவி பிள்ளைகளுடன் நாவரசரைப் பணிந்து, இல்லின் உள்ளே அமர்த்தி அமுதுண்ண வேண்டுகிறார் அப்பூதியடிகள். அப்பரும் இசைந்து கைலாசநாதரை வணங்கச் செல்கிறார். அப்பூதியடிகளின் மனைவியார் நேர்த்தியாக உணவு சமைத்து, தம் புதல்வனை அழைத்து வாழையிலை கொண்டு வரச் சொன்னார். தோட்டத்தில் வாழையிலை எடுக்கும் போது, அங்கிருந்த பாம்பு ஒன்று அவனைத் தீண்டுகிறது. மைந்தன் மயங்கிய நிலையில் அன்னையிடம் இலைகளைத் தந்து நடந்தது கூறி இறந்து போகிறான். மனைவியின் கதறல் கேட்டு வந்த அப்பூதியாரும் ஆறாத் துயரம் அடைந்து, பின் அப்பர் பசியோடு அமுதுண்ண வரும் வேளையில் இதனை உரைப்பது சரியன்று என்று மனைவியையும் தேற்றி மகனைப் பாயில் சுருட்டி வைக்கிறார்.
அவ்வேளையில் அப்பரும் வரக் கண்ணின் நீர் மறைத்து வணங்கி அமுது படைக்கின்றார் அம்மையார். உணவுண்ண அமர்ந்த அப்பர் அனைவருக்கும் திருநீறளித்து,` மூத்தவன் எங்கே வரச்சொல்லும்` என்கிறார். அப்பூதியடிகள் அவன் இப்போது வரமாட்டான், அமுது செய்யுங்கள்` என வேண்டுகிறார். நாவரசர் ஏன் எனக் கேட்க, அவ்வளவில் உடைந்துபட்ட அம்மையார் அரவு தீண்டி பாலகன் இறந்ததைச் சொல்கிறார். துடித்துப் போன அப்பர் மைந்தனைக் கையிலேந்தி வந்து கைலாசநாதரின் திருமுன் கிடத்தி,
‘ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே`
எனத் தொடங்கி, இரண்டு கொலாம், மூன்று கொலாம் என்று பத்து கொலாம் எனப் பதிகம் பாடிப் பணிந்து விடம் தீர்க்க வேண்டுகிறார். அவ்வளவில் பாலகன் விடம் நீங்கி, உறங்கி எழுந்தவன் போல் எழுந்தான். அவனோடு வந்து மீண்டும் அமர்ந்து அமுதுண்டார் அப்பர். இது அப்பூதியடிகளின் பெருமை உலகறியச் செய்யவும், நாவரசர் புகழ் ஓங்கவும் ஈசன் நிகழ்த்திய விளையாடல் இது.
அன்று முதல் இன்று வரை இவ்வூரில் எவருக்குப் பாம்பு கடித்தாலும் சந்திர தீர்த்தத்தின் நீரைப் பருகினால் விடம் ஏறாது எனவும், எவரும் அரவு தீண்டி இறப்பதில்லை எனவும் சொல்லப்படுகிறது.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருப்பழனம் அருகிலிருக்கும் திங்களூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்குச் செல்ல கும்பகோணம், திருவையாறு போன்ற இடங்களிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.