தொழிலதிபர் ராஜசேகரின் ஆணைப்படி அவரது தொழில் எதிரியான ராமரத்னத்தின் சூர்யா கார்டன் பங்களாவிற்குள் பத்துப் பதினைந்து கொடிய விஷப் பாம்புகளை பின்புற வெண்டிலேட்டர் வழியாக உள்ளே தள்ளி விட்டுப் பூனை போல் நடந்து காம்பௌண்ட் சுவற்றைத் தாண்டித் தெருவில் குதித்தான் பாம்பாட்டிக் குட்டன்.
'அப்பாடி… ஒரு வழியா வேலை முடிஞ்சுது… ஒரு ரூபா ரெண்டு ரூபாயா?… மொத்தமா இருபதினாயிரம்… போதும்… இந்தத் தொழிலையே விட்டுட்டு கடைகண்ணி வெச்சு… பொண்டாட்டி புள்ளைகளோட நிம்மதியாப் பொழைக்கலாம்”
வீட்டை அடைந்ததும் ”டெய…ராசுக்குட்டி… அம்மா எங்கடா ...?”
'இன்னும் வேலையிலிருந்து வரலை” பாடப் புத்தகத்திலிருந்து தலையைத் தூக்கிச் சொன்னான் மகன்.
'இன்னிக்கு வந்ததும் சொல்லிடணும்…'போதுமாத்தா நீ வீடு வீடாப் போயி… பத்துப் பாத்திரம் தேய்ச்சது… இனிமே நிப்பாட்டிக்கோ” ன்னு…”
தூரத்தில் ரெண்டு பேர் தன் வீட்டை நோக்கிக் கத்தியபடி ஓடி வர, எழுந்தோடிச் சென்று கேட்டான் பாம்பாட்டி.
“என்னய்யா…என்ன ஆச்சு?”
'குட்டா…உன்ர பொண்டாட்டி உன்னைய ஏமாத்திட்டுப் போயிட்டாடா…” வந்தவர்களில் ஒருவன் அவசரமாய்ச் சொல்ல,
'என்னடா சொல்றே?” குட்டன் படபடத்தான்.
'சூர்யா கார்டன் பங்களாவுக்கு பத்துப் பாத்திரம் தேய்க்கப் போனவளைப் பாம்பு கடிச்சு….”
அவன் சொல்லி முடிக்கும் முன் குட்டன் மயங்கி விழுந்தான்.