"தஞ்சாவூர் பாசஞ்சர்" ரயில் பெருத்த சப்தமிட்டபடி தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனில் வந்து நின்றது.
"வழக்கமாக ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் ஆனால் இன்று தாம்பரத்திற்கு, வழக்கத்திற்கு மாறாக 5:20க்கு வந்திருக்கிறது. அதுவும் சரியான நேரத்திற்கு வந்திருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே அந்தப் பெரியவர் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
நானும் என்னுடன் கொண்டு வந்திருந்த அந்தக் காலத்துப் பெட்டியுடன் ரயிலில் இருந்து இறங்கினேன். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த எனக்கு படு ஆச்சர்யம். சென்னைக்கு முதன்முதலாக வந்த எனக்கு, "சார் ஆட்டோ" , "ஆட்டோ வேணுமா சார்" என்று ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு பயணியிடமும் கேட்கும் ஆட்டோக்காரர்கள். அந்தக் காலை வேளையிலும் பரபரப்பாக இருக்கும் மக்கள் கூட்டம் எல்லாம் ஆச்சர்யம் தந்தது.
"நம்ம ஊர்ல இவ்வளவு ஆட்டோக்கள் கிடையாது. இருக்கிற ஒன்றிரண்டு ஆட்டோக்களைக் கூப்பிட்டால், வருவதற்கு ஆயிரம் முறை யோசிப்பாங்க. ஆனால், இங்க கொஞ்சம் விட்டால் ஆட்டோவுக்குள்ளேயே அமுக்கிப் போட்டுக் கொண்டு போயிடுவாங்க போலிருக்கே..." என்று மனதில் நினைத்தபடி நடக்க ஆரம்பித்தேன்.
"வாங்க சார்... ஆட்டோ வேணுமா சார்... எங்க போகனும் சார்... " என்று மூச்சுக்கு முன்னூறு தடவை "சார்" போட்டு கூப்பிட்ட ஆட்டோ டிரைவரிடம், "எங்க போகிறதுன்னுதான் தெரியல..." என்று வேடிக்கையாக பதில் சொல்ல அந்த டிரைவர் கடுப்பாகிப் போனார்.
"சாவுகிராக்கி, கார்த்தாலேயே வந்துட்டான் தஞ்சாவூரிலயிருந்து பொட்டிய தூக்கினு..." என்று முணுமுணுத்துக் கொண்டே வேறு ஒருவர் பக்கம் திரும்பி தனது மாமூல் டயலாக்கைத் தொடர ஆரம்பித்தார்.
நான் சொன்ன வார்த்தை வேடிக்கையாக இருந்தாலும், அது தான் நிஜம்.
ஆடுதுறை பக்கத்தில் திருமங்கலக்குடி எனும் கிராமத்தில், அண்ணன், தங்கை மற்றும் அம்மா அப்பாவோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த விளையாட்டுப் பிள்ளை நான். நான் நான்காவது படுத்துக் கொண்டிருந்த போது என் அப்பா திடீரென்று காலமாகி விட, குடும்பப் பொறுப்பு முழுவதும் எட்டாவது படித்துக் கொண்டிருந்த என் அண்ணனான மூத்த பையன் பாலு மீது விழுந்தது. தன் படிப்பை நிறுத்தி அப்பா செய்து வந்த விவசாயத்தில் அம்மாவுடன் சேர்ந்து கவனம் செலுத்திக் குடும்பத்தைக் காப்பாற்ற உதவினான். இப்போதும் அவன் உழைப்பில்தான் எங்கள் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது.
அவனுடைய உழைப்பில்தான் நான் பி.காம் படித்திருக்கிறேன். திருமங்கலக்குடி மட்டுமில்லை சுற்றுப்பகுதியில் உள்ள பத்துப்பதினைந்து கிராமத்து மாணவ, மாணவியர்களுக்கும் கல்லூரி என்றாலே ஆடுதுறையில் உள்ள அந்தக் கல்லூரி ஒன்று மட்டும்தான். இதேபோல் எந்தப்பொருள் வாங்க வேண்டுமென்றாலும் ஆடுதுறைக்குத்தான் வரவேண்டும். ஆடுதுறைதான் இவர்களுக்கு டவுன். ஆனால், அதுவும் முக்கால்வாசி கிராமம்தான். எப்படியோ பி.காம் முடித்து விட்டேன்.
தங்கை லக்ஷ்மி +2 படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கும் நல்ல வரண் பார்த்து இன்னும் நான்கு வருடத்திற்குள் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலையும், தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் என் அண்ணன் பாலுவுக்கு அதிகமாக இருந்தது. இந்தப்பொறுப்பும் கவலையும் எனக்கும் இப்போது வந்திருக்க வேண்டும். ஆனால், என்னை எனது பி.காம் படிப்பு முடக்கி விட்டிருந்தது.
கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் வாங்கிய மறுநாளே என் வீட்டில் விவசாய வேலைகளைச் செய்யும்படி விரட்டினர். கல்லூரிக்குப் போவதற்கு முன்பு சிலசமயம் விவசாய வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த வேலைகளைச் செய்ய மனமில்லாமல் ஒதுங்கிக் கொண்டேன்.
இப்போது மறுபடியும் வீட்டிலிருப்பவர்கள் " உனக்கு வேலை வரும்போது வரட்டும் அதுவரை அண்ணனுக்கும் அம்மாவிற்கும் ஒத்தாசையாக விவசாய வேலைகளைச் செய். இல்லை, இங்கே ஆடுதுறையில் ஏதாவது ஒரு கடையில் கணக்கு எழுதுற வேலையைச் செய்..." என்று ஒவ்வொரு நாளும் வீட்டிலிருப்பவர்கள் உபதேசம் செய்துகொண்டே இருந்தனர்.
"பி.காம் முடித்து பட்டம் வாங்கிய நான் வயலில் இறங்கி விவசாயம் செய்வதா? இந்த ஆடுதுறையிலுள்ள கடையில் கணக்கு எழுதறதுக்கா நான் படித்தேன்..." என்று எனக்குள் என் படிப்பு ஒரு வேகத்தைக் கிளப்பி விட்டது.
நம் படிப்பிக்கேற்றவாறு பேங்க்கிலோ, ஏதாவது ஒரு கம்பெனியிலோ நமக்கு ஒரு வேலை வரும்வரை இந்த வீட்டிலிருப்பவர்கள் காத்திருக்கப் போவதில்லை. அவர்கள் நம்மை விவசாயத்திற்குள் தள்ளி விடுவதற்குள் யாரிடமும் சொல்லாமல் இந்தக்கிராமத்தை விட்டு ஓடிப்போய் விடவேண்டும். படித்தவர்களுக்கு பட்டணம்தான் சொர்க்கம் என்று நான் எடுத்த திடீர் முடிவுதான் என்னை இப்போது சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டது.
காலைச்சூரியன் வரலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே மெதுவாகத் தலைகாட்டத் துவங்கியது.
அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று, "ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க...“ என்றபடி அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்.
என் கையில் இருந்த பெட்டியைப் பார்த்த டீக்கடைக்காரன், “என்னப்பா... ஊர்லேருந்து ஓடிவந்துட்டியா?" கிராமத்துலேயிருந்து வர்றவங்களுக்கெல்லாம் இந்த சென்னைதான் வழிகாட்டி“ என்று சென்னையின் பெருமையைப் பறைசாற்றினான். நம்மைப்போல் சென்னைக்கு ஓடிவந்த பலரையும் பார்த்த டீக்கடைக்காரனின் அனுபவம் அவனது பேச்சில் தெரிந்தது.
இருந்தாலும் அவன் சென்னையைப் பற்றிச் சொன்ன வார்த்தை எனக்கு தன்னம்பிக்கையைத் தந்தது.
டீக்கடைக்காரன் கொடுத்த டீயைக் குடித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன். ரோட்டில் காரும், பஸ்ஸும் அதிகமாகச் சென்று கொண்டிருந்தன. இது போதாதென்று இரு சக்கர வாகனங்கள் வேறு. காலை ஏழு மணிக்கே தாம்பரம் புகை மண்டலமாய் மாறிக் கொண்டிருந்தது. அப்படியே நடக்க ஆரம்பித்தேன்.
நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, பெட்டிக்கடை ஒன்றிலிருந்து ‘தினத்தந்தி‘ பேப்பர் ஒன்றை வாங்கினேன். அருகிலிருந்த பஸ் நிறுத்தத்தில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் சாய்ந்தபடி அந்தப் பேப்பரில் வேலைவாய்ப்பு ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். அதில் எனக்கு சரியெனத் தெரிந்த மூன்று முகவரிகளைக் குறித்துக் கொண்டேன்.
அந்த பஸ்நிறுத்தத்தின் அருகிலிருந்த கட்டணக் கழிப்பிடத்திற்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டேன். முதலில் குறித்து வைத்த மூன்று முகவரிக்கும் சென்று ஏதாவது ஒன்றில் தனக்கான வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். என்று முடிவு செய்து கொண்டேன்.
அந்த மூன்று முகவரிகளுமே சிறுதொழில் நிறுவனங்கள்தான். அந்த மூன்று நிறுவனங்களில் "தங்குறதுக்கு இடம், சாப்பாடு எல்லாம் நாங்களே குடுத்துடறோம் கூடவே மாதம் 1,000/- ரூபாய் சம்பளம்" என்று சொன்ன நிறுவனம் மட்டும்தான் சரியெனப்பட்டது. அங்கேயே வேலைக்குச் சேர்ந்து விட்டேன்.
எனக்கு தங்க ஒதுக்கப்பட்ட வீடு, இல்லையில்லை அதைக் கூடு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக்கூட்டிலிருந்து காலையில் கிளம்பி அலுவலகத்திற்கு வந்து வேலை செய்துவிட்டு மாலையில் திரும்பி அதற்குள் அடைந்து கொள்ளும் வாழ்க்கை எனக்கு மூன்று மாதத்திற்குள்ளாகவே அலுத்துப் போய் விட்டது.
குடிநீர் வாரியத்தின் புண்ணியத்தால் சொட்டு சொட்டாக வரும் தண்ணீரில் அரைகுறையாகக் குளிக்கும் போதுதான், கிராமத்தில் கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் விவசாயத்திற்கு எடுக்கப்படும் தண்ணீரில் குளித்த சுகம் பறிபோனது தெரிந்தது.
ஓட்டல்களிலிருந்து வரும் அளவுச் சாப்பாட்டை சாப்பிட்ட பின்புதான், கிராமத்தில் தன் அம்மா தன் பிள்ளைகள் எல்லாம் சாப்பிட்டபின் மீதமுள்ள சோற்றைச் சாப்பிட்டு என்னை வளர்த்து வந்த மகத்துவம் புரிந்தது.
இயந்திரம் போல வாழும் சென்னைவாசிகளைப் பார்க்கும் போதுதான், கிராமத்தில் பச்சைப்பசேல் என்று பசுமையைக் காட்டும் வயல்வெளிகளும், தோட்டங்களும் அதற்குள் ‘கீச்...கீச்... ‘ என்று கத்தும் காதல் பறவைகளான தேன் சிட்டுக்குருவிகளும், அந்த வயல்காட்டில் தான் பிடித்து விளையாடிய நண்டுகளும் ஞாபகத்திற்கு வந்தது. கூடவே இயற்கையின் அற்புதமும் தெரிந்தது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எப்பொழுது வரும் என்று காத்துக் கிடந்து, கடைசியில் கையில் ஒன்றும் மிஞ்சாமல் அடுத்தடுத்து முதல் தேதியைத் தேடும் எதிர்பார்ப்புகள் தொடரும் இந்த பட்டணத்து வேலையிலிருந்தும், நகரப்பிடியிலிருந்தும் விலகி, நம் சொந்தக் கிராமத்தில் இயற்கை வசதிகளுடன் விவசாயம் செய்யும் கிராமப்பணிகளில் இணைந்து விடவேண்டும். தன் தாயிற்கும் அண்ணனுக்கும் உதவிட வேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு புரட்சி வெடித்திருந்தது.
எந்த ஒன்றின் மதிப்பும் மரியாதையும் அது இல்லாதபோதுதான் நமக்குத் தெரிகிறது. நாம் படித்த படிப்பு நமக்கு சிறிது கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அது பெற்றுக் கொடுத்த பட்டணத்து வேலை மூன்று மாதங்களில் கிராமத்தை விட பட்டிணத்தைப் பெரிதாக நினைத்ததை மாற்றியதுடன் நமக்குத் தெரிந்த விவசாயம் மட்டுமில்லை, வேறு எந்த வேலையைச் செய்வதும் நம்முடைய தரத்தைக் குறைக்காது என்கிற பெரிய பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது.
மூன்று மாதத்திற்கு முன்பு அவன் கொண்டு வந்த அதே பெட்டியுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் இப்போது காத்திருக்கிறான். "தஞ்சாவூர் பாசஞ்சர்" ரயிலுக்காக...