தபால்காரர் சொன்ன அந்தத் தகவல் சுந்தரத்தின் மேல் கோடையிடியாய் இறங்க மொத்த உடலும் ஒரு அதிர்வு வாங்கித் தள்ளாடியது.
“அய்யா... தபால்காரய்யா... மெய்யாலுமா சொல்லுறீங்க?” தழுதழுத்த குரலில் மீண்டும் கேட்டார்.
“ஆமாங்கய்யா... உங்க மக தமிழ்ச்செல்விக்கு ‘ஆனந்தன்’ங்கற பையன்கிட்டயிருந்து அடிக்கடி கடுதாசி வருதுங்கய்யா... ஆரம்பத்துல மாசத்துக்கு ஒண்ணுதான் வந்திச்சு... அப்புறம் வாரம் ஒண்ணு வந்திச்சு… இப்ப ஒரு நாள் விட்டு ஒரு நாள் தவறாம வருதுங்கய்யா... நானும் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னுதான் இருந்தேன். ஆனா பின்னாடி, அதுவே ஒரு விபரீதமாய்ப் போயி… “ஏம்ப்பா... ரொம்ப நாளா நடக்குது... நீயாவது ஒரு வாrத்தை என்கிட்ட சொல்லியிருக்கக் கூடாதா?”ன்னு நீங்க என்கிட்ட கேட்டுடக் கூடாது பாருங்க?... அதான்”
சுந்தரத்தின் மனதிற்குள் இனம் புரியாதவொரு கலக்க மேகம் சூழ்ந்து துயர மழையைத் தூவ ஆரம்பிக்க,
“எங்க குடும்பத்து மேல அக்கறை வெச்சு நீங்க சொன்ன இந்தத் தகவலுக்கு ரொம்ப நன்றி தபால்காரய்யா... மேற்கொண்டு இதை நான் பார்த்துக்கறேன்... நீங்க கௌம்புங்க”
தபால்காரர் சென்றதும் வீட்டிற்குள் நுழைந்த சுந்தரம் மனைவி தேவகியை அழைத்து, அந்த வேதனையைச் சொல்ல வாயடைத்துப் போய் சிலையாய்ச் சமைந்து நின்றாள் அவள்.
உள் மனம் ஓலமிட்டது.
“கண்ணில் உறுமணியோ?... எங்கள் கலி தீர்த்த பெட்டகமோ?... பொன்னில் உறும் ஒளியோ?... பூவில் உறும் வாசனையோ?... கொடிக்கால் மருக்கொழுந்தோ?... கோதையில்லாப் பூச்சரமோ?”ன்னு தாலாட்டுப் பாடி சீராட்டி வளர்த்த என் மகளா இப்படி?
அங்கு நிலவிய அவஸ்தையான அமைதியை தன் கனைப்பின் மூலம் கலைத்த சுந்தரம், “தேவகி… இது ரொம்ப சிக்கலான பிரச்சினை... எடுத்த எடுப்புல அவளைக் கூப்பிட்டு இதைக் கேட்டுவிட முடியாது… கேட்கவும் கூடாது... ஏன்னா... அவளும் இப்ப இருக்கற காதல் வேகத்துல, “ஆமாம்... அப்படித்தான்... நான் அவனைக் காதலிக்கறேன்... அவனைத்தான் கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்” ன்னு சொல்லிட்டான்னா... அதை என்னால தாங்க முடியாது… அதனால கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்” நிதானமாய்ப் பேசினார்.
“பாவிப் பொண்ணு... நம்ம குடும்ப மானத்தையே சந்திக்குக் கொண்டு வந்திடுவா போலிருக்கே” தேவகி வாய் விட்டுப் புலம்ப,
“ச்சே... மொதல்ல உன் புலம்பல் நிறுத்து... அவ வர்ற நேரமாச்சு” மனைவியை அடக்கியவர் மெல்ல நடந்து ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்தார்.
மூளைக்குள் சிந்தனை வண்டுகள் தாறுமாறாய்ப் பறந்து தலைவலியைச் சீதனமாய்த் தந்து கொண்டிருந்தன. “எப்படி?... எப்படி இந்தப் பிரச்சினையை எதிர் கொள்வது?... வயசுப் பொண்ணுகிட்ட நேருக்கு நேர் ஒரு அப்பாவால இந்தப் பிரச்சினையைப் பேச முடியுமா?... பேசினா என்னாகும்?... கடவுளே”
அன்று முழுதும் கணவனும் மனைவியும் இறுகிய முகத்துடனேயே இருந்தனர்.
தன் பெற்றோரிடம் ஏற்பட்டிருந்த அந்த மாற்றத்தைத் தமிழ்ச் செல்வியால் உணர முடிந்தும் அதற்கான காரணத்தை யூகிக்க முடியாது போக அவளும் ஒருவித இறுக்கத்தில் சிக்குண்டு தவித்தாள்.
மறு நாளைக்கு மறுநாள்.
வாசலில் தபால்காரரின் சைக்கிள் மணியோசை கேட்க கூடத்திலிருந்த சுந்தரம் எழுந்து வாசலுக்கு வரும் முன் உள் அறையிலிருந்து புயலெனப் பாய்ந்து வந்த தமிழ்ச் செல்வி தபால்காரர் நீட்டிய கடிதத்தை அவசரமாகப் பறித்துக் கொண்டு அதே வேகத்தில் உள் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
கடுப்பான முகத்துடன் சுந்தரம் மனைவியை நோக்க அவள் தர்மசங்கடமாயப் பார்த்தாள்.
இதற்கு மேலும் இந்தப் பிரச்சினையை மூடி வைத்து, பெரிய வம்பை விலைக்கு வாங்க விரும்பாத சுந்தரம் இன்றே அதைத் தீர்த்து விடும் முடிவுடன் எழுந்து மகளின் அறையை நோக்கி நடந்து உள்ளே பார்வையைச் செலுத்தினார்.
பரபரப்படன் கடிதத்தைப் பிரித்து கண்களில் ஆர்வம் மின்ன அதைப் படித்த தமிழ்ச்செல்வியின் முகத்தில் சாகாவரம் பெற்ற சந்தோஷம்.
சுந்தரத்திற்கு அடிவயிறு பற்றியெரிந்தது. “பாவி மகளே... எவனோ எழுதிய கடுதாசிக்கு இத்தனை உற்சாகமா? குடும்ப மானம்... மரியாதை... கவுரவம்... எல்லாம் பறிபோய்க்கிட்டிருக்கே... அது புரியலையா உனக்கு?... பதினாறு வயசு மோகம் உன் கண்ணை மறைக்குதா?… த்தூ...”
படித்து முடித்ததும் கடிதத்தை நெஞ்சொடு சேர்த்தணைத்து மகிழ்ந்த தமிழ்ச்செல்வி அதை மடித்து தன் பெட்டியில் பத்திரப்படுத்தப் போகும் போது,
சடாரென அந்த அறைக்குள் புகுந்தார் சுந்தரம். “கேடு கெட்ட சிறுக்கி மவளே... என்னடி நெனச்சிட்டிருக்கே உம் மனசுல?... இங்க என்னடி நடக்குது... குடும்பமா… இல்ல கூத்தா...?”
திடீரெனப் புகுந்து கத்தலாய்ப் பேசிய தந்தையை மிரட்சியுடன் பார்த்தாள் தமிழ்ச்செல்வி.
“அப்பா… நீங்க... ” வாய் குழறியது. உடல் நடுங்கியது.
“எவண்டி அவன்... உனக்கு கடுதாசி மேல கடுதாசி போடறவன்?... எத்தனை நாளா நடக்குது இந்த அசிங்கம்?... சொல்லுடி…”
தன் கணவனின் கோபத்தை நன்றாக அறிந்து வைத்திருந்த தேவகி மகளை அவருடைய தாக்குதலிலிருந்து காப்பாற்றும் விதமாய் ஓடி வந்து அவளருகில் நின்று கொண்டாள்.
கடுவன் பூனையைக் கண்டு நடுங்கி இங்குமங்கும் ஓடிய கோழிக்குஞ்சு தாய்க் கோழியைக் கண்டதும் அதன் இறக்கை நிழலில் ஒதுங்குவதைப் போல தாயின் முதுகுக்குப் பின்னால் பதுங்கினாள் தமிழ்ச்செல்வி.
“தேவகி... அந்தச் சனியன்கிட்ட நீயே கேட்டுச் சொல்லு... யாரந்த திருட்டுப்பயல்ன்னு” ஆக்ரோஷத்தை மனைவி மேல் காட்டினார் சுந்தரம்.
“கேட்கறாரில்ல?… சொல்லுடி... யாரவன்?”
“ம்ம்… வந்து… வந்து... பேனா நண்பன்…பேரு ஆனந்தன்” தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
“ரெண்டு பேரும் காதலிக்கறீங்களா?” அடுத்தக் கேள்வியை “படக்”கென்று வீசினாள் தேவகி.
“சசீய்... யார் சொன்னது அப்படின்னு?”
“ஊரே சொல்லுது” இடையில் புகுந்து கத்தலாய்ச் சொன்னார் சுந்தரம்.
“ஊரு ஆயிரம் சொல்லும்... அதை நீங்க நம்பறீங்களா?”
“நம்பாம என்னடி பண்றது?... காதலிக்காமலா கடுதாசி மேல கடுதாசி போட்டுக் கொஞ்சறான் அந்தப் பயல்?”
தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரே தன் மேல் சந்தேகப்பட்டு அபாண்டமாய்ப் பேசுவதைத் தாங்க முடியாத தமிழ்ச்செல்வி தரையிலமர்ந்து “ஓ”வென அழுதாள்.
“ம்... பண்றதையும் பண்ணிட்டு அழுகை வேறயா?... யாரை ஏமாத்த இந்தப் பசப்புத்தனம்?” ஆத்திரத்தில் சுந்தரம் வரம்பு மீறிப் பேச,
சடாரெனத் தலையைத் தூக்கி தந்தையை எரிக்கும் பார்வை பார்த்த தமிழ்ச்செல்வி அதே வேகத்தில் எழுந்து தன் பெட்டியைத் திறந்து அதிலிருந்த ஆனந்தனின் கடிதங்களை எடுத்து விசிறியடித்தாள்.
அறையெங்கும் தாறுமாறாயச் சிதறிய கடிதங்களைக் காட்டி, “பாருங்க... எடுத்து நல்லா படிச்சுப் பாருங்க... அதுல எங்காவது ஒரு இடத்துல நீங்க நெனைக்கற மாதிரி... ஏதாவது இருக்கான்னு பாருங்க” கத்தினாள்.
தன் காலடியில் விழுந்த ஒரு கடிதத்தை எடுத்துப் படித்த சுந்தரம் அதில் பாட சம்மந்தமான கேள்வி பதில்களே இருக்க, இன்னொரு கடிதத்தை எடுத்தார். அதிலும் அப்படியே... ‘பரபர’வென்று எல்லாக் கடிதங்களையும் அவசர அவசரமாகப் படித்துப் பார்த்து விட்டு மகளை தர்ம சங்கடமாய் நோக்கினார்.
“என்னப்பா… உங்க சந்தேகம் தீர்ந்திடுச்சா இல்ல இன்னும் இருக்கா?”
“இல்லம்மா… அது… வந்து…” ஏதோ சொல்ல வாயெடுத்தவரை கையமர்த்திய தமிழ்ச்செல்வி
“அப்பா... என்னோட பேனா நண்பன் ஆனந்தனும் என்னை மாதிரியே ஒரு ப்ளஸ் - டு மாணவன்… டியூசன் போய்க்கிட்டிருக்கான்.! நம்ப வசதிக்கு என்னால் டியூசனெல்லாம் போக முடியாது... அதனால் பாட சம்மந்தமான என்னோட சந்தேகங்களை நான் அவனுக்கு எழுதுவேன்... அவன் தன்னோட டியூசன் ஆசிரியர் கிட்டக் கேட்டு அதுக்கான பதில்களை எனக்கு அனுப்புவான்... இதுவும் ஒரு வகை குரூப் ஸ்டடிதான்... இதோ இதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தபால்காரர் கொடுத்துட்டுப் போன கடிதம்... ஆனந்தன் 'மாதிரி வினாத்தாள்” அனுப்பியிருக்கான்… இதுல இருக்கற கேள்விகள் தொண்ணூறு சதவீதம் பரிட்சைல கேட்க வாய்ப்புண்டுன்னு எழுதியிருக்கான்... அதைத்தான் பத்திரப்படுத்தி வெச்சேன்” என்றபடி தன் பெட்டியின் அடியிலிருந்த அந்தக் கடிதத்தையும் எடுத்துக் காட்டினாள்.
சுந்தரம் ஒருவித குற்ற உணர்ச்சியோடு மகளைப் பார்க்க,
“அப்பா... சிறுசுக நாங்க ஒழுங்காத்தான் போய்கிட்டிருக்கோம்.. பெரியவங்க நீங்கதான் கண்டபடி அசிங்க அசிங்கமாச் சந்தேகப்பட்டு எங்க மேல் சேற்றை வாரி இறைக்கறீங்க... பச்சைக்கலர் கண்ணாடி போட்டுக்கிட்டுப் பார்த்தா எல்லாம் பச்சையாத்தான் தெரியும்... மொதல்ல உங்க சந்தேகக் கண்ணாடியக் கழட்டி எறியுங்க..” என்று மூச்சு விடாமல் பேசியவள் பேச்சை நிறுத்தி சற்று இளைப்பாறி விட்டுத் தொடர்ந்தாள்.
“வேண்டாம்பா... தெளிந்த நீரோடை மாதிரியிருக்கற எங்க மனசுல விஷத்தைக் கலக்காதீங்கப்பா... ப்ளீஸ்”
மகளை நேருக்கு நேர் பார்க்கத் திராணியற்று தலை குனிந்து அந்த இடத்தை விட்டு நகர்வதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாதவராய்ப் போனார் சுந்தரம்.
அன்று ப்ளஸ்-டு ரிசல்ட்.
“அப்பா... நான் பாஸாயிட்டேன்... ரெண்டு பாடத்துல நான்தான் ஸ்கூல் பர்ஸ்ட்” முக மலர்ச்சியுடன் சொன்ன மகளிடம்,
“கண்ணு... மொதல்ல அந்த ஆனந்தன் தம்பிக்கு ஒரு நன்றிக் கடுதாசி போட்டுடு கண்ணு” என்றார் சுந்தரம்.
ஆம். அவர் மனமும் சிறுசுகளைப் போல் பண்பட்டுவிட்டது.