குமார் வெள்ளிகிழமை மாலை ஐந்து மணிக்கெல்லாம் தனக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு தயாராகி விட்டான். சனிக்கிழமைக்கு ஒன்று. ஞாயிற்றுக்கிழமைக்கு ஒன்று என்று தனக்குள் சொல்லி கொண்டான். அம்மா அலுவலகத்தில் இருந்து வந்த உடனேயே சொல்லிக் கொண்டு பாட்டி வீட்டிற்குக் கிளம்ப வேண்டும். மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே விடுமுறை. அப்போதெல்லாம் தவறாமல் அவன் பாட்டி வீட்டிற்குச் செல்வது வழக்கம். இந்த முறை செல்வதும் எப்பவும் போல் சந்தோஷமாக இருந்தது. வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் போய் உட்கார்ந்தான். இருபது வீடுகள் கொண்ட வரிசையாக அமைந்த கூட்டுக் குடியிருப்பு அது. அவன் வீட்டில் அவன்தான் முதலில் வருவான். ஐந்தேகாலுக்கு அம்மா வருவாள். அப்பா வருவதைச் சொல்லவே முடியாது.
அப்பா சில சமயம் மதியமே லீவு போட்டு வந்து படுத்துக் கொள்வார்.இன்னும் சில சமயங்களில் இரவு பத்து பதினொன்று கூட ஆகும். மணி இப்போ அஞ்சு பத்து. இன்னும் அம்மா வர பத்து நிமிஷங்கள் உள்ளன. பத்து நிமிஷங்கள். வாய்ப்பாடு படிக்க வேண்டும். இந்த வாய்ப்பாடில் பத்தாம் வாய்ப்பாடு எவ்ளோ எளிமை என்று அவனுக்கு தோன்றியது. பதினஞ்சு கூடப் பரவாயில்லை. இந்த பதிமூணு பதினேழு எல்லாம் எவ்ளோவுதான் மனப்பாடம் செஞ்சாலும் மனசுல நிக்கறது இல்ல. இன்னொரு முறை மணி பார்த்தான். இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு.
சாதாரணமாக ஸ்கூல் விட்டு வந்ததும் வீட்டைப் பூட்டிவிட்டு வாசலில் விளையாடுவதற்காகப் போய் விடுவான். கண்ணன், முருகன் எல்லாம் அவனுக்கு நண்பர்கள். மணிமாறன், சின்னப்பன் கூட எல்லாம் சேர வேண்டாம் என்று அம்மா சொல்லி இருந்தாள். முருகனின் அம்மா பள்ளி ஆசிரியை. அதுவும் அவன் படிக்கற பள்ளியிலேயே ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நல்ல வேளை குமாருக்கு அவர்கள் பாடம் எதுவும் எடுக்கவில்லை. மிகவும் கண்டிப்பான ஆசிரியை என்று முருகனின் அம்மாவைப் பற்றி குமார் கேள்விப்பட்டு இருக்கிறான்.
முருகனின் அப்பா கூட அவருக்கு பயப்படுவார் என்று என்னுடைய அம்மா சிரித்துக் கொண்டே சொல்லுவாள். அப்பா போய் எங்கயாவது பயப்படுவாரா? இன்னும் கொஞ்ச நேரத்துல சூரியன் முழுதும் மறைந்து விடும். சூரிய வெளிச்சம் பூமியை வந்து சேர்வதற்கு எட்டு நிமிடங்கள் ஆகும் என்று அவனுக்கு எப்போதோ படித்த ஞாபகம் வந்தது. இந்த விஷயம் எல்லாம் எவ்ளோ பேருக்கு தெரியும். சேகருக்குக் கூட தெரியாது. இத்தனைக்கும் அவன்தான் கிளாஸ்லேயே பெரிய படிப்பாளி என்று கூறிக் கொள்வான்.
தூரத்தில் அம்மா நடந்து வருவதைப் பார்த்து ஓடினான். பக்கத்தில் போய் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டான். அம்மா அவனைக் கட்டிக் கொண்டு கன்னத்தைக் கிள்ளினாள். உள்ளே வந்தவுடன் “பாட்டி வீட்டுக்குக் கிளம்பறேன் மா” என்றான்.
“அதுக்குள்ளேயேவா? இருட்டிக் கொண்டு வருதேப்பா? நாளைக்குப் போகலாமே” என்றாள். ‘‘ம்..ம்..போ.. நான் இப்பவே போவேன்” என்றான்.
அண்டக்குளம் டவுன் பஸ் பிடித்தால் இரண்டாவது நிறுத்தம் பிருந்தாவனம் பஸ் ஸ்டாப். அங்கிருந்து பக்கத்து தெரு ஓரமாக நடந்தால் மூணாவது திருப்பத்தில் அவனது பாட்டியின் வீடு. அவன் நிறைய முறை போய் இருக்கிறான். “அப்பா ஏதாவது சொல்லுவாரேம்மா?” என்றான்.
“அவரு ஒண்ணும் சொல்ல மாட்டார் நான் பாத்துக்கறேன், ஆனா ஞாயித்துக் கெழம சீக்ரம் வந்துடனும் என்ன? சரியா?” “ஓகே மா” என்று பையை எடுத்துக் கொண்டு செருப்பு போட்டுக்கொண்டு ஓடினான். பிறகு எதோ தோன்றியவன் போல் திரும்பி வந்து “ஏம்மா அப்பா திட்டினா” என்றான்.
”நான் பாத்துக்கறேன் போடா” என்றாள் அம்மா.
பாட்டி வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் சரவணணும் மணியும்தான் அவனுக்கு நெருங்கிய நண்பர்கள். ரெண்டு பேர் கிட்டயும் வீடியோ கேம் இருக்கு. ஆனா மணிதான் கஞ்சன். குமாருக்கு விளையாடத் தரவே மாட்டான். அவன் போனபோது பாட்டி ஸ்ரீராமஜெயம் எழுதி கொண்டு இருந்தாள். மாமா ஆபிசிலிருந்து வந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். பாட்டி உட்கார்ந்திருந்த இடத்திற்கு மேலே தாத்தா படம் மாட்டி மாலை போட்டிருந்தது. அந்த மாலை வாடவே வாடாது என்று பாட்டி சொல்லி இருக்கிறாள். போனவுடன் பாட்டி மடியில் படுத்துக் கொண்டான்.
பாட்டி தலையை கோதிக் கொண்டே “அம்மா ஆபீஸிலிருந்து வந்தாச்சா?” என்று கேட்டாள். “உங்க அப்பங்காரன்”. “ம்ம் ஹும்.. அவன் வெள்ளிகிழம என்னிக்கு நேரத்தோட வந்திருக்கான். என் பொண்ணு உசுர… தினமும் எடுக்கிறான்..படுபாவி…” அதுக்குள்ளே மாமா “அம்மா” என்று கத்தினார்.
“விளக்கு வெச்சப்றம் இப்டி அழுது உயிரை வாங்காதே. இங்க ஏற்கனவே தரித்தரம் தாண்டவம் ஆடுது. இதுல நீ வேற”
இது எப்பவும் நடைபெறும் ஒன்றுதான். இதனைக் குறித்து கவலைப்படாத குமார் உடனே புறப்பட்டு சரவணனின் வீட்டிற்குப் போனான்.
சரவணன் டென்னிஸ் கிளாஸ் கூட போறான். அவனை அவன் அப்பாவே கூட்டிக் கொண்டு விட்டுவிட்டு வருகிறார். அவனது அம்மா டாக்டர். குமார் வீடியோ கேம்தான் ஆட வந்திருக்கான் என்று சரவணனுக்கு தெரியும். ஆனா அவன் பாட்டுக்கு டிவி பாத்துக் கொண்டு இருக்கான். அவன் அம்மாவும்தான் ஆபிஸ் போறா. ஆனா இவனப் பாத்துக்கவே தனிய ஒரு ஆயா இருக்கிறாள். ஆயா சாதத்துல கொழம்ப போட்டு கொழச்சு அவனுக்கு வாய்ல ஊட்டி விடுவதை ஏக்கத்துடன் பார்த்த குமார் தனது தலையைத் திருப்பிக் கொண்டான்.
இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும் என்று மனதிற்குள்ளேயே குமார் சொல்லிக் கொண்டான். தொலைக்காட்சியில் இங்கிலீஷ் படம் எதோ ஒண்ணு. நல்ல வேளை படம் சீக்கிரம் முடிந்தது. பிறகு இருவரும் வீடியோ கேம் செட் பண்ணி விளையாட ஆரம்பித்தனர்.
கார் ரேஸ் விளையாட்டில் சரவணனுக்கு நல்ல பழக்கம் இருந்ததால் அவனால் சீக்கிரமே ஜெயிக்க முடிந்தது. குமாருக்கு அந்த இயக்குபிடியை சரிவரக் கையாள முடியவில்லை. ஆனால் அடுத்து வந்த செஸ் விளையாட்டில் குமார் எளிதாக ஜெயித்தான். கொஞ்ச நேரம்தான் விளையாடின மாதிரி இருந்தது. அதற்குள் குமாரின் பாட்டியின் குரல் கேட்டது.
‘‘டேய் குமாரு....சாப்பிட்டுட்டுப் போய் விளையாடுடா’’ என்றார் பாட்டி. குமாருக்கு கோவமாய் வந்தது. பாட்டி பக்கத்தில் போய் “ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்து தொலைக்கற?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.
ஆனால் பரவாயில்லை. சாப்பிட்டு வந்து கூட விளையாடலாம். பதினோரு மணி வரை வெளியில் இருக்கும் சுதந்திரம் இங்கு உண்டு. மாமாவும் ராத்திரி தூங்க நேரம் ஆகும். திரும்பவும் சரவணனின் வீட்டிற்கு வரலாம். அவன் அப்பா திட்டவே மாட்டார். அவர் வந்தா சரவணனின் அம்மா பயப்படுவது இல்ல. அந்த அழுகிப்போன கேடகெட்ட திராட்சை வாசனை வருவது இல்லை. சாராயம் குடிச்சா அந்த மாதிரி கெட்ட வாசன வரும்னு அவனுக்குத் தெரியும். அதனாலதான் அவன் அப்பாகிட்ட அந்த வாசன எப்பவும் வரும் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனா இத அவன் அம்மாகிட்ட கேக்கிறது இல்ல. கேட்டா அம்மா அழுவாள் என்பது அவன் அறிந்த ஒன்று.
சரவணனின் வீட்டிலிருந்து பாட்டி வீட்டிற்கு போக ஒரு சின்ன ரோடு நடக்க வேண்டும். அவன் வெளியில் வந்ததும் கரண்ட் கட்டாகிப் போனது. உடனே ஹோவென கூச்சல் கேட்டது. கத்துவதெல்லாம் அவனது நண்பர்கள்தான். அவனும் அவர்களுடன் சேர்ந்து உடனே கத்தினான்.
ஒரே இருட்டாக இருந்தது. நிலா வெளிச்சத்தில் பார்க்கவும் முடிஞ்சது. மரத்துக்குக் கீழ இலை கருப்பு கருப்பா அசைவது தெரிந்தது. அவனுக்கு முன்னால் பாட்டியின் நிழல். பக்கத்துல அவனோட நிழல். பெரிதாக. பாட்டி இங்க பாரேன் என்றான். இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு ஆ..ஹை… ஆ..ஹை… ஆ..ஹை…என்று இடுப்பை முன்னால் ஒரு தள்ளு தள்ளிக்கொண்டு குதித்துக் கொண்டு வந்தான். பாட்டி இங்க பாரேன் என்று இன்னொரு முறை செய்தான், பாட்டி பார்க்கவே இல்லை, பாட்டி இன்னைக்கு எனக்கு புடிச்ச சேனை கிழங்குதானே என்று கேட்டான். அதற்கும் பாட்டி பதில் சொல்லவே இல்லை. சாப்பிட்டு முடித்து கரண்ட் வரணுமே என்று நினைத்துக் கொண்டான். ஆனால் சாப்பிட்ட பிறகு அப்படியே தூங்கிப் போனான்.
சனிக்கிழமை முழுக்க கிரிக்கெட் விளையாடி விட்டு ஆறு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வந்தான். அன்று ரேவதி பெரியம்மா, பெரியப்பா அவங்க பொண்ணு விஷ்ணுப்பிரியா எல்லாரும் வருவதாக இருந்தது. அம்மாவோட அக்கா இந்த பெரிம்மா. அம்மாவின் தம்பியான, சேகர் மாமாவிற்கு இன்னும் திருமணம் ஆகவே இல்லை. திருமணம் என்றாலே துன்பம் தான் என்று எனது பாட்டி சொல்லுவாள். ஆனா பெரியம்மா எல்லாம் எப்பவும் சிரித்துக் கொண்டேதான் இருக்கிறாள். ஒருநாள் கூட அவள் கண்ணைக் கசக்கி குமார் பார்த்தில்லை.
பெரியப்பாவிற்கு எதோ ப்ரோமொஷன் வந்திருக்காம். அதப் பத்திதான் பேசிக்கொண்டே இருக்கிறாள் பெரியம்மா. பெரியப்பா பாடமெல்லாம் எப்படி படிக்கறேன்னு…மேத்ஸ்... நல்லாப் படிக்கிறியா? என்று என்னிடம் கேட்டார். நானும் நன்கு படிப்பதாகக் கூறினேன். எனது பெரியப்பாவிற்கு மேத்ஸ் நன்றாகத் தெரியும். நன்றாக ஆங்கிலம் பேசுவார். கேமராவை வைத்து நிறைய ஃபோட்டோ கூட எடுப்பார். அக்கா விஷ்ணுப்பிரியா எப்பவும் போல யாரிடமும் அதிகம் பேசவே இல்ல. அவள் பெரியப்பாவோடு ஒட்டிக் கொண்டே அமைதியாக இருந்தாள்.
அவர்கள் பாட்டி வீட்டிற்கு வந்து சென்றவுடன் நல்ல மழை அடித்துப் பெய்தது. நல்ல இருட்டு வேற. எதிர்ல இருக்கற மைதானத்துல சோனு மழை விழுந்துகொண்டு இருந்தது. கொஞ்ச நேரம் கழிச்சு தவளை எல்லாம் கத்தற சத்தம். இலை மேல விழும்போது படபடனு ஒரு சத்தம். தேங்கி இருக்கற தண்ணீல விழுவது வேறு மாதிரியான சத்தத்தை ஏற்படுத்தியது. எப்போவாவது ஹெட் லைட் போட்டுக் கொண்டு அந்தப் பக்கம் போற கார் போகும். அப்போதுதான் மைதானத்துல விழுகின்ற மழை கண்ணுக்குத் தெரியும். எல்லோரும் தூங்கப் போனபின்னர் ரொம்ப நேரம் கழித்தபிறகும் இருட்டில் மழை பெய்யும் சத்தம் மட்டும் கேட்டுண்டு இருந்தது. இப்படி பாட்டி கூடவே இருந்துட்டா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு நெனச்சப்போ குமாருக்கு லேசாக நெஞ்சைக் கிழித்துக் கொண்டு ஒரு அழுகை வந்தது.
மறுநாள் சாயங்காலம் வீட்டிற்கு கிளம்பத் தயாரானான். துணியுடன் சேர்த்து பாட்டி கொடுத்த மாதுளம்பழத்தையும் எடுத்துக் கொண்டான். பாட்டி ஒரு தடவை அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்தாள். பாட்டியிடம் இருந்து பழனி விபூதி வாசனை கமகமத்தது. அவனுக்கு அந்த வாசனை மிகவும் பிடித்துப் போன ஒன்று. அது மனதற்கு இதமாக இருந்தது. மாமா அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுச் சென்றார். அப்பொழுதே கொஞ்சம் மசமசவென்று இருட்டத் தொடங்கி இருந்தது. பஸ்ஸிற்கு நீண்ட நேரம் காத்திருந்தான். எதிரில் ஒரு புது ஹோட்டல் வாசலில் லைட் தோரணம் எரிந்து எரிந்து அணைந்தது. எப்பவும் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் பூக்கார அம்மா இன்றும் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் பஸ் வந்து விட்டது.
வீட்டின் அருகில் போகும் போதே உள்ளே லைட் எல்லாம் அணைந்திருந்தது தெரிந்தது. அவன் ஹால் ஜன்னல் பக்கத்தில் போய் மெதுவாக “அம்மா” என்று குரல் கொடுத்தான். அம்மா ஜன்னல் அருகே வந்து “இரு இரு” என்றாள். கதவைத் திறந்து, “ஏன் இவ்ளோ லேட்? சீக்கிரம் வரதுதானே?” என்றாள். அம்மாவின் குரலே வெளியில் வரவில்லை. காத்து மட்டும் வந்து வந்து ஒலி எழுப்பி கொண்டிருந்தது.
கொலைகாரனைப் பார்த்து நடுங்கும் ஒரு சிறு குழந்தையின் நடுக்கம் அவளது குரலில் தொனித்தது. வீட்டின் உள்ளே அந்த கேடுகெட்ட அழுகிப்போன பழ வாசனை அடித்தது. அம்மா பிளாஸ்டிக்கில் மணிகளைக் கோர்த்து தோரணம் மாதிரி செய்து வைத்திருப்பாள். அது எல்லாம் அறுக்கப்பட்டு கீழே சிதறி தாறுமாறாகத் தரையில் கிடந்தது. “ஏம்மா சண்டயா?” “அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. பேசாமப் படுடா…” “ஏம்மா வந்தவுடனேயே நான் எப்டிமா படுக்க முடியும்?” என்று கேட்டான். இருந்தாலும் படுத்துதான் ஆக வேண்டும் என்பது அவனுக்கு தெரியும். எதோ பெரிசா சண்டை வந்திருக்கு. எதிரில் இருந்த பிள்ளையார் லக்ஷ்மி சரஸ்வதி படத்தை பார்த்து ஒவ்வொருவரு கடவுளின் பெயர்களைக் கூறி வேண்டிக் கொண்டான். உள் ரூமில்… ‘‘ஏ..ஏ..ஏ..ஏய்’’ என்று பெரிய சத்தமாக ஒரு குரல். அப்பாதான்.
எப்படியும் அந்த அடுக்கில் இருந்த எல்லா வீட்டிலும் அது கேட்டிருக்கும். மொத்த வீட்டில் இருந்த இருட்டிலும் அமைதியிலும் பயங்கரமாக அப்பா கத்தியது ஒரு பெரிய மிருகத்தின் கத்தல் போல அவனுக்குக் கேட்டது. அவனது கால்கள் அவனை அறியாமலேயே கடகட என உதறியது. அவன் போர்வையை இழுத்து தனது முகத்தை மூடிக்கொண்டான். அம்மா அவனைச் சேர்த்துக் கட்டியணைத்துக் கொண்டாள். அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. அந்தப் பயத்திலேயே சிறிது நேரத்தில் அவன் தூங்கிப்போய் இருக்க வேண்டும்.
திடீரென எதோ ஈரமாய் இருந்ததை உணர்ந்து விசுக்கென எழுந்தான். அப்போது லைட் எரிந்து கொண்டிருந்தது. அப்பா கையில் ஒரு ஆரஞ்சு நிற வாளியுடன் நின்று கொண்டிருந்தார். அம்மா தலையில் இருந்து உடம்பு முழுக்க தண்ணி. அம்மாவும் நடுங்கி கொண்டிருந்தாள். அம்மா முகத்தருகே வந்து ‘கேடு கெட்டவளே’ என்று கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துக் குத்தினார். பின் ‘நாற முண்ட’ என்று கொத்தாகத் தலைமுடியை பிடித்து தூக்கினார். அம்மா அடிக்குரலில் இருந்து விசும்பி விசும்பி கதறி அழுதாள். அப்பா குடிவெறியில் மாறி மாறி அம்மாவின் கன்னத்தில் அறைந்தார். அம்மா அப்பாவின் முன்னர் கண்ணீரும் கம்பலையுமாக கை கூப்பியபடி அழுதுகொண்டு நின்றாள்.
அவனுக்குள் ஒருவித பயமும் வெறியும் அவனையறியாது எழுந்தது. அதையெல்லாம் அடக்கிக் கொண்டு அழுகை அவனுக்கு முந்திக்கொண்டு வந்தது. அழுகையினூடே விசும்பலுடன் ஒரு கேவல்.
அவன் அப்படியே அழுகையை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான். இந்தப் பாழாய்ப் போன குடிப் பழக்கத்திலிருந்து அப்பா… திருந்தவே மாட்டாரா?... அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. எனக்கு மட்டும் ஏன் எப்படி இப்படியொரு குடிகார அப்பாவா வந்து வாச்சார்? அவன் கண்களுக்கு அவனது அப்பா பெரிய மஹிஷாசுர அரக்கனைப் போன்று காட்சியளித்தார். எப்பொழுது இந்த அரக்கன் அழிவான்?. அந்த மஹிஷனை அழிக்க சக்தி தோன்றியதாக அவனது பாட்டி அவனுக்குக் கதை கூறி இருக்கிறாள். ஆனால்… இந்த மஹிஷனை அழிக்க….. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது… அவனது வினாவிற்கு விடை…..?